search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்த காட்சி.
    X
    குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்த காட்சி.

    அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கலெக்டர் உத்தரவு

    அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தொடர்பான பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கிய கடமையாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்கிடவும், கூடுதலாக குடிநீர் தேவை உள்ள இடங்களுக்கு புதிதாக மாற்று ஆழ்குழாய் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் காணப்படும் முறையற்ற குடிநீர் இணைப்புகள் விதிமுறைகளின் படி உடனடியாக அகற்றப்படவும், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குடிநீருக்காக வழங்கப்படுகின்ற நீரினை பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீரின் முக்கியத்துவத்தினை உணர்ந்து நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

    காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் குழாய்களில் பழுது ஏற்படுவதை உடனுக்குடன் சரிசெய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் தொடர்பான பணிகளையும் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×