search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்களாக கலெக்டர் உமா மகேஸ்வரி 4 மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். இந்த நியமனத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வரவேற்றது. தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து, துணை தாசில்தார் நியமன உத்தரவை ரத்து செய்யுமாறு கலெக்டருக்கு மாநில வருவாய் நிர்வாக ஆணையரகம் அண்மையில் உத்தரவு வழங்கி உள்ளது. எனினும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட துணை தாசில்தார் நியமன உத்தரவை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியல் வெளியிட வேண்டும். ஆணையரகத்தின் உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதற்கான விவரத்தை ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, ஆணையரகத்தின் அறிவுரைப்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்துவிட்டு 36 பேர் கொண்ட புதிய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

    இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்ததை கண்டித்து கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கவியரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜபரூல்லா முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு விதிகளை மீறி போடப்பட்ட துணை தாசில்தார் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 
    Next Story
    ×