என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை (ஆம்பர் கிரீஸ்) பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், அந்த பகுதியில் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர், தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி, கார்த்திகேயன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ், தஞ்சையை சேர்ந்த தமிழரசன், திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
    • பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 70). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம்.

    இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    ஆனால் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.

    இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் தீர்ப்பு வழங்கினார்.

    இதனையடுத்து உரிய முறையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    • சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் மணக்குடி பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    நகைக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்ணாடி பேழையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பலத்த காயமடைந்த மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்தவர் நாகப்படன். இவரது மகள் மீனா (வயது 42) திருமணமாகவில்லை.

    இவர் அ.தி.மு.க மாவட்ட இணை செயலாளராக இருந்தார். மேலும் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டவர்.

    முன்னாள் கீழையூர் ஒன்றிய தலைவராக இருந்த மீனா நேற்று திருக்குவளையில் இருந்து காமேஸ்வரத்திற்கு ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட்டார். அப்போது ரோட்டில் நாய் ஒன்று ஓடியது.

    இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டத்தில் பின்னால் அமர்ந்திருந்த மீனா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று இரவு இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.

    இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டைய அணிந்து அமைதி பேரணியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

    பின்னர் சுனாமியால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு பிடித்த காரம், இனிப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அங்கு கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபியில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
    • திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் 'லூர்து' என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.


    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருப்பலியின் முடிவில் பக்தர் ஆரோக்கியம் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

    இந்த சிறப்பு திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    மேலும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸை யொட்டி ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு திரண்டதால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தமிழக எல்லையில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகை வழிமறித்தனர். பின்னர், மீனவர்களின் படகுக்கு சென்று அவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி, படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.


    இலங்கை கடற்கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த தாக்குதலில் மீனவர் ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயமும், ராஜ்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் கட்டையால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு மீனவரான நாகலிங்கத்திற்கு உள்காயம் ஏற்பட்டது.

    மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து, உடலில் பலத்த காயங்களுடன் இன்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களை கண்ட சக மீனவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்துள்ள பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமார், லட்சுமணன், ஜெகன் ஆகிய 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி, கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கடலுக்கு சென்றனர். அவ்வாறு சென்ற மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்த சம்பவம் கோடியக்கரை மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    • இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
    • அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்தவர் முருகதாஸ்.

    இவரது மகன் கவியழகன் (வயது 13). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நள்ளிரவு முருகதாஸ் குடும்பத்தினருடன் தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவன் கவியழகன் இடிபாடுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மதியழகன், அவரது மற்றொரு மகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

    இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
    • ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இன்று மதியம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரை பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் அமைவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.

    ஆனால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். வருகிற 12-ந்தேதி டெல்லி செல்கிறோம். திரும்பி வரும்போது நிச்சயம் வெற்றி செய்தியோடு வருவோம் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மேடை ஏறி முதலமைச்சர் குறித்து பேசி உள்ளார். இதனை கேட்ட மக்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.

    மன்னர் ஆட்சி என்றால் தந்தைக்கு பின்னால் மகன், மகனுக்கு பின்னால் மகன் என்பது தான். அவர்களை துடைத்தெரியும் காலம் வந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா பேச்சும், வி.சி.க. தலைவர் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.
    • புயலால் கரை தட்டியதா என விசாரணை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில், இன்று காலை 8 மணியளவில் மியன்மார் நாட்டை சேர்ந்த மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.

    இந்த மூங்கில் படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாகவும் சுமார் 150 மூங்கல்க ளால் கட்டபட்டுள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார் போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது.

    இந்த படகில் மீன் பிடிக்க பயன்படுத்த கோழி தீவனம் 2 மூட்டை சுமார் 30 கிலோ உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வேதாரணியம் கடலோர காவல் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேதாரணியம் கடலோர காவல் குழுவின் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரலட்சுமி, சுதாகர் மற்றும் போலீசார் படகை கைப்பற்றினர்.

    பின்னர் அந்த படகில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா அல்லது புயலால் கரை தட்டியதா என விசாரித்து வருகின்றனர்.

    • இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்.
    • சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் இயக்க திட்டமிட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    இந்தியா, இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 10-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள், கப்பலை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

    இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கைக்கு கூடுதலாக ஒரு கப்பல் இயக்க வேண்டும் என இந்தியா, இலங்கை நாட்டு வர்த்தகர்களிடையே கோரிக்கை எழுந்தது.

    இதனை பரிசீலித்த சிவகங்கை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம், அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் மேலும் ஒரு புதிய கப்பலை நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது.

    இத்தகவலை நாகையில் நடந்த நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்க கூட்டத்தில் சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்தது.

    அப்போது கடல்சார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பணிகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் அதற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து, மாலுமிகள், என்ஜினீயர்கள், பயனாளர்கள் மத்தியில் நாட்டிலஸ் ஷிப்பிங் நிறுவன கேப்டன், ஆர்.கே.சிங் மற்றும் சுபம் கப்பல் நிறுவன பொறுப்பாளர் கீதா ராஜராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

    மேலும், கடல்சார் கல்வி மற்றும் பயிற்சியை முடித்த உள்ளூர் கடலோடிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக கப்பல்களில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது.
    • மியான்மர் மீனவர்களிடம் இருந்து பாய்மர படகு பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கடல்பகுதியில் இந்திய கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது. உடனே கடற்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பாய்மர கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில் 4 மீனவர்கள் இருந்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மியான்மர் நாட்டை சேர்ந்த விம்சோ, ஹான் சோ, கிய் லூரின், லங்சன் ஏஜ் என்பதும், எல்லை தாண்டி இந்திய எல்லையில் மீன் பிடித்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது 'இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர். மேலும் பாய்மர படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×