என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
    • அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது.

    சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர். 

    • 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
    • கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு(2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம்(ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    பிரச்சனைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) மீண்டும் தொடங்கப்படும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    • நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழா, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    முதலமைச்சர் வருகையை யொட்டி நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விழா முன்னேற்பாடு பணிகளிலும் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்தும், போலீசார் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    • சுற்றுசுவர் அமைக்க பள்ளம்தோண்டிய போது சுமார் 3 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட ஜம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.
    • கோவில் வளாகத்தில் இன்று மீண்டும் ஏதாவது சிலை உள்ளதா என தோண்டி பார்க்க உள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மருதூர் தெற்கில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கோவில் புதுபித்து கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அங்கு பணியாளர் சுற்றுசுவர் அமைக்க பள்ளம்தோண்டிய போது சுமார் 3 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட ஜம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.

    இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து அங்கு ஒன்று கூடி சிலையை எடுத்து அபிஷேகம் செய்து கோவில் வளாகத்தில் வைத்து உள்ளனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வருவாய்துறையினர் வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கோவில் நிர்வாக அலுவலர் சக்தி கணேசன், எழுத்தர் கார்த்தி, மற்றும் வாய்மேடு போலீசார், வருவாய் துறையினர் கோவில் வளாகத்தில் இன்று மீண்டும் ஏதாவது சிலை உள்ளதா என தோண்டி பார்க்க உள்ளனர்.

    • 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.

    நாகப்பட்டினம்:

    உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் நாகை வீர தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சார்பாக நாகை அடுத்த பாப்பா கோவில் தனியார் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நாகை,வேலூர், திருச்சி,தஞ்சை, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். அப்போது அவர்கள் சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.

    நாகை வீர தமிழன் சிலம்ப கலைக்கூடத்தின் ஆசான் சரவணன் கூறும்போது,போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கு பெற செய்ததற்கான முக்கிய காரணம் இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம் போதையில்லா சமுதாயம் உருவாகிடவும், போதையினால் ஏற்படும் தீமைகளை மாணவர் பருவத்திலேயே அவர்களுக்கு விதைப்பதன் மூலம் அதன் தீமைகளை குறித்து அவர்கள் அறிந்து கொள்வதோடு சமுதாயத்திற்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கிங்காங் பங்கு பெற்று மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

    இடைவிடாமல் 3 மணி நேரம் நடைபெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேர்ல்ட் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு அசோசியேஷன் செகரட்டரி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பதிவு செய்தார். 

    • பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.
    • இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். இயங்கி வருகிறது.

    இந்த நிலையில், ஆலை தொடங்கும் போது சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், ஆலையின் விரிவாக்க பணிக்காக 618 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர், சாகுபடிதாரர்கள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

    அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பனங்குடி கிராம மக்கள் உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பனங்குடி சி.பி.சி.எல். குடியிருப்பு வளாகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இந்த ஆலை ஆந்திராவிற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆந்திராவிற்கு மாற்றக்கூடாது பனங்குடியிலேயே இயங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை (ஆம்பர் கிரீஸ்) பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், அந்த பகுதியில் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர், தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி, கார்த்திகேயன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ், தஞ்சையை சேர்ந்த தமிழரசன், திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
    • பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 70). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம்.

    இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    ஆனால் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.

    இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் தீர்ப்பு வழங்கினார்.

    இதனையடுத்து உரிய முறையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    • சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் மணக்குடி பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    நகைக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்ணாடி பேழையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பலத்த காயமடைந்த மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்தவர் நாகப்படன். இவரது மகள் மீனா (வயது 42) திருமணமாகவில்லை.

    இவர் அ.தி.மு.க மாவட்ட இணை செயலாளராக இருந்தார். மேலும் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டவர்.

    முன்னாள் கீழையூர் ஒன்றிய தலைவராக இருந்த மீனா நேற்று திருக்குவளையில் இருந்து காமேஸ்வரத்திற்கு ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட்டார். அப்போது ரோட்டில் நாய் ஒன்று ஓடியது.

    இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டத்தில் பின்னால் அமர்ந்திருந்த மீனா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று இரவு இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    • மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.

    இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டைய அணிந்து அமைதி பேரணியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

    பின்னர் சுனாமியால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு பிடித்த காரம், இனிப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அங்கு கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபியில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
    • திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் 'லூர்து' என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.


    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருப்பலியின் முடிவில் பக்தர் ஆரோக்கியம் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

    இந்த சிறப்பு திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    மேலும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸை யொட்டி ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு திரண்டதால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×