என் மலர்
கன்னியாகுமரி
- குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு இறையு மன்துறை பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள், தடுப்புச் சுவரை தாண்டியதால் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். கடல் நீர், கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டன. குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு ராட்சத அலைகள் எழும்பியதை பார்த்த அவர்கள், அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மணல்பரப்பு வரை கடல் நீர் வந்து சென்றது. சிலர் அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் விரைந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குமரி மாவட்ட கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலோரப் பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சுமார் 10அடி முதல் 15 அடி உய ரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
கடல் சீற்றம் காரணமாக நேற்று மதியம் நிறுத்தப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து இன்று காலையும் ரத்து செய்யப்பட்டே இருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கடல் சீற்றம் தணிந்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர்.
குளச்சல் கடலில் எழுந்த ராட்சத அலைகள், மணற் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை இழுத்து சென்றதால் அவை சேதமடைந்தன. ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் கூறினர்.
- பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருவிதாங்கோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தி.மு.க. துண்டு பிரசுரங்கள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த சுமார் 12,000 துண்டு பிரசுரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் பறக்கும் படை சோதனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 3 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.2,66,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதியில் ரூ.65,400 குளச்சல் தொகுதியில் ரூ.2 லட்சத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 927 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
- 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரெயில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ஜாஷ்பூரை சேரந்தவர் சுஷாந்த் சாஹூ(வயது41). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் மங்களூருவில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் பயணித்துள்ளார்.
அந்த ரெயில் காசர்கோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து சுஷாந்த் சாஹூ இறங்கியுள்ளார். அப்போது ரெயில் புறப்பட்டுவிட்டது. இதனால் ஓடும் ரெயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது சுஷாந்த் சாஹூ தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர் உடல் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்களூரு-சென்னை ரெயில் நிறுத்தப்பட்டது. சுஷாந்த் சாஹூவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த ரெயில் புறப்பட்டது. காசர்கோடு-கும்ப்ளா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது அந்த ரெயிலில் இருந்து ஒரு வாலிபர் விழுந்தார். இதனை அந்த பெட்டியில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது காசர்கோடு ரெயில் நிலையம் அருகே அந்த வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூர் குத்து பரம்பு பகுதியை சேரந்த ரபி என்பவரிரன் மகன் ரனீம்(18) என்பது தெரிய வந்தது.
அவர் மங்களூருவில் உள்ள என்நிஜூயரிங் கல்லுரியில் படித்து வந்திருக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
- அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.
நாகர்கோவில்:
மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.
ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.
டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.
ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.
மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
- கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.
அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.
கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
- தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.
- நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தந்தையை வணங்கி, அன்னையின் ஆசி பெற்று, நமது அன்னைக்கு மரியாதை செலுத்தி, தலைவர்கள் ஆதரவு மற்றும் தோழர்களின் அன்புடன் வேட்புமனு தாக்கல் செய்தேன்.#Vote4INDIA #Vote4Congress pic.twitter.com/VFKOjiIuQu
— VijayVasanth (@iamvijayvasanth) March 27, 2024
- இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தியா கூட்டணி கட்சிக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை வகித்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம் வேர்கிளம்பியில் நடைபெற்றது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி தோழர் ராஜ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக நிர்வாகி காதர் மொய்தீன் மதிமுக நிர்வாகி ஜேபி சிங், உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இந்தியா கூட்டணி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மரியஜெனிபர் போட்டியிடுகிறார். விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (28-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
நாளை காலை 9 மணிக்கு விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனையில், அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு அழகிய மண்டபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
11 மணிக்கு திங்கள்நகரிலும், 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசலியான் நசரேத், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் எடப்பாடி பழனிசாமி தங்கி உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் பசலியான் நசரேத், ராணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., பார்வர்ட் பிளாக், புரட்சி பாரதம் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் மதியமே தொண்டர்கள் வர தொடங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் நாகராஜா திடலுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு சங்கரன்கோவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
- புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
- கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவனந்தபுரம்:
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.
அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-
தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.
ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
- காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.

கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கனிமொழி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி நேற்று தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களுடன் பேச்சு நடத்தி அவர்கள் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
— VijayVasanth (@iamvijayvasanth) March 25, 2024
கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த மாண்புமிகு… pic.twitter.com/a9FIsblEzx
- இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
- திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் என்ஜினீயரின் வீட்டாரும் மணமகளின் வீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்கள். இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று காலையிலேயே திருமண வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து இருந்தனர்.அவர்களுடன் மாப்பிள்ளை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திருமண வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்ததால் திருமண வீடு களைகட்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் மணமகள் வீட்டிற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






