என் மலர்
கன்னியாகுமரி
- 121-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
- இன்று காலை அன்ன பூஜை நடந்தது.
கன்னியாகுமரி:
"வீரத்துறவி" என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது.
இதையொட்டி காலை 10 மணிக்கு நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.
மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப்படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது. இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்த அன்ன பூஜைக்காக நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து 21 டன் அரிசி சேகரிக்கப்பட்டது.
- குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, களியல், குழித்துறை, தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்ட இருக்கிறது.
முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 22.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 328 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்தனர்.
அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.19 அடியாக இருந்தது. அணைக்கு 1715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் மதகுகள் வழியாக 662 கன அடி தண்ணீரும், உபரிநீராக 2028 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.26 அடியாக உள்ளது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 17.02 அடியாக உள்ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 17.12 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 45.77 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 22.20 அடியாகவும் உள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் நேற்று 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரங்கோணம் பகுதிகளில் ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. களியல், பாலமோர், மோதிர மலை, குற்றியாறு, தச்சமலை பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. களியலில் அதிகபட்சமாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நேற்றை விட பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தாலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து 4,048 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்தி பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முக்கடல் மாம்பழத்துறை ஆறு அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.85 அடியாக இருந்தது. அணைக்கு 2,237 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 632 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,048 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 1,059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.79 அடியாக உள்ளது. அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 15.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 45.19 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.80 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 9.4, பெருஞ்சாணி 7.4, சிற்றாறு 2-4, கன்னிமார் 2.8, மயிலாடி 2.2, நாகர்கோவில் 4.2, பூதப்பாண்டி 3.2, முக்கடல் 2, பாலமோர் 11.4, தக்கலை 5.2, குளச்சல் 6.4, இரணியல் 6.2, அடையாமடை 1.6, குருந்தன்கோடு 2.6, கோழிப்போர்விளை 3.6, மாம்பழத்துறையாறு 3, களியல் 16.2, குழித்துறை 8.4, சுருளோடு 7.2, ஆணைக்கிடங்கு 2.6, திற்பரப்பு 6.5.
- வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.
இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.
அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.
அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 28.8,
பெருஞ்சாணி 32.4,
சிற்றார் 1-16.4,
சிற்றார் 2-18.2,
கன்னிமார் 6.2,
கொட்டாரம் 3,
மயிலாடி 4.8,
நாகர்கோவில் 5.4,
பூதப்பாண்டி 12.4,
முக்கடல் 10.4,
பாலமோர் 52.4,
தக்கலை 10,
குளச்சல் 5,
இரணியல் 6,
அடையாமடை 21,
குருந்தன்கோடு 3.8,
கோழிப்போர்விளை 12.4,
மாம்பழத்துறையாறு 6.4,
களியல் 18.6,
குழித்துறை 12.4,
புத்தன் அணை 29.2,
சுருளோடு 6.2,
ஆணைக்கிடங்கு 5,
திற்பரப்பு 14.8,
முள்ளங்கினாவிளை 14.8.
- படுகாயம் அடைந்த செல்வி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து செல்லுதல் உள்ளிட்ட அடிப்படை மனப்பக்குவம் இல்லாததால் கொலை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதிலும் மது குடிக்க பணம் தராததால் கொலை, பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட சொற்ப காரணங்கள் இன்றைக்கு நடைபெறும் கொலைகளுக்கு காரணமாக அமைகிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செண்பகராமன்புதூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வி. இவரது கடைக்கு நேற்று செல்வன் என்பவர் வந்தார். அவர் செல்வியிடம் புகைப்பிடிக்க தீப்பெட்டி தருமாறு கூறியுள்ளார்.
செல்வி தீப்பெட்டியை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வன், செல்வியை அரிவாள்மனையால் சரமாரி வெட்டியுள்ளார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதை கண்ட செல்வன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து படுகாயம் அடைந்த செல்வி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
- சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் பலர், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் மெத்தன போக்கே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் நாளை நடைபெறும் போராட்டத்திற்காக நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அறிந்த போலீசார் தடுத்தனர்.
மேலும் சுவரொட்டி ஒட்டிய 2 பேரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநில நிர்வாகிகள் ராஜன், சந்துரு, ராணி பகுதி செயலாளர்கள் முருகேஸ்வரன், ஜெய கோபால், அணி செயலாளர்கள் ரபீக், ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளை ஒப்படைக்க வேண்டும். பிடிபட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட வர்களை போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுவரொட்டிகள் ஓட்டியதாக பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.
- செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் நீட் முறைகேடுக்கு எதிராக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
- அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது.
7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
காலை முதலே மழை பெய்து வந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதற்கு சுணக்கம் காட்டினார்கள். பெற்றோர் அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு வந்தனர். குடை பிடித்தவாறு வந்தாலும் ஒரு சில மாணவிகள் மழையின் வேகத்தினால் நனைந்தனர். சீருடைகள் நனைந்ததால் மாணவிகள் அவதிப்பட்டனர்.
பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இடலாக்குடி பகுதியில் சாலையில் உள்ள பள்ளம் எங்கு கிடக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.
சுசீந்திரம், கன்னியாகுமரி, கொட்டாரம், அஞ்சுகிராமம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குருந்தன்கோடு, சுருளோடு, மயிலாடி, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கோழிப்போர் விளை பகுதியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மட்டுமின்றி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும்,பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 40.76 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கன்னிமார் 17.2, கொட்டாரம் 27.8, மயிலாடி 15.2, நாகர்கோவில் 32.4, ஆரல்வாய்மொழி 13, பூதப்பாண்டி 25.2, பாலமோர் 34.4, தக்கலை 49.6, குளச்சல் 40, இரணியல் 14.4, அடையாமடை 23, குருந்தன்கோடு 28.2, கோழிப்போர்விளை 62.2, மாம்பாழத்துறையாறு 29, சிற்றாறு 1-10.2, சிற்றாறு 2-28.4, களியல் 14.2, பேச்சிப்பாறை 32.8, பெருஞ்சாணி 44.6, புத்தன் அணை 39.8, சுருளகோடு 31.2, ஆணைக்கிடங்கு 28.4, திற்பரப்பு 13, முள்ளங்கினாவிளை 43.8.
- இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
- பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள நெய்யூர் செட்டியார் மடம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 38). இவரது மனைவி சோபிகா (37). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நவநீதன் (45), அவரது மனைவி அமுதா (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று சோபிகா வீட்டின் குப்பைகளை அந்த பகுதியில் தீ வைத்து எரித்த போது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா இருவரும் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது சோபிகாவின் மாமனார் மணி அதை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நவநீதன் இரும்பு கம்பியால் மணியை அடிக்க வந்தார். இதை பார்த்த சோபிகாவின் கணவர் ஜெகதீஷ் தடுத்த போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஜெகதீஷை, அமுதாவும் சரமாரியாக தாக்கினார்.
இதை தடுக்க வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18) என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த ஜெகதீஷ், மணிகண்டன் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சோபிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் நவநீதனை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமுதாவை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
- வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அயராது மக்களுக்காக உழைத்து வரும் அன்பு தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
மக்களின் பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் மக்களின் ஆசி மற்றும் பிரார்த்தனையால் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
- போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது58). மாற்றுத் திறனாளியான இவர், திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதி அ.தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. அவரது வீட்டுக் கதவும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சேகர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததால் அவரது சாவில் சந்தேகம் ஏதாவது உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக சேகர் உடலை உறவினர்களிடம் இதுவரை ஒப்படைக்காமல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிண அறையில் கடந்த 2 நாட்களாக போலீசார் பாதுகாப்பாக வைத்து உள்ளனர். இதனால் சேகர் சாவில் குழப்பம் நீடிக்கிறது.
- மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஓட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமானோர் சாப்பிட வருவதுண்டு.
மார்த்தாண்டம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், தனது மகன் ரோகித்திடம் இரவு சாப்பாட்டுக்கு மாட்டு இறைச்சி பிரை வாங்கி வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர், அந்த ஓட்டலுக்குச் சென்று மாட்டு இறைச்சி பிரை வாங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் வைத்து பார்சலை பிரித்த போது, இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லி கிடந்துள்ளது. இதனை பார்த்து ரோகித்தும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ரோகித் புகார் செய்தார். அப்போது பல்லி கிடந்த இறைச்சியையும் அவர் காண்பித்தார்.
அதனை பெற்றுக்கொண்ட போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் மற்றும் பணியாளர்கள், குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தனர்.

இதில் சந்தேகம் இருந்ததால் இறைச்சியை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அந்த சம்பவம் மக்கள் மனதை விட்டு மறைவதற்குள் இறைச்சியில் பல்லி கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டல்களில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், அசைவ உணவு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






