என் மலர்
கடலூர்
- சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி தொடங்கி பூதங்குடி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு நீர்வரும். இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் தீர்த்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழையால் பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் வீராணம் வடக்கு நீர் போக்கி மூலமாக வெளியேற்றப்பட்டு, ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொள்ளிடம் வடவாற்றில் இருந்தும், மழைநீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடிக்கு தற்போதைய நிலவரப்படி 47.40 அடியை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடவாறு வழியாக வினாடிக்கு 1330 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று நடைபெறுகிறது.
- 142 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 142 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று நடைபெறுகிறது. இந்தியாவிலேயே குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு ராஜ கோபுரத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெறுகிறது.
அதன் படி இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்திய தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து நடராஜப் பெருமானின் திருவடியில் வைத்து பூஜிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க நடராஜப் பெருமானின் கனக சபையிலிருந்து வெள்ளித் தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து வேத மந்திரங்கள், தாள வாத்தியங்கள் முழங்க 142 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் வெங்கடேச தீட்சதர் மற்றும் தீட்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திண்டிவனம் வருகை.
- நாளை மறுநாள் விழுப்புரத்தில் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் நடைபெறும் தி.மு.க. நிரவாகிகள் கூட்டத்தில் முதல்-அமை ச் ச ர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து நாளை மறுநாள் விழுப்புரத்தில் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக அவர், நாளை (திங்கட்கிட்கிழமை) மாலைசென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிறார்.
அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சேகர், தெற்குமாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்த வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ேஜ.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
அதன் பிறகு அந்த மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகை தரும் அவர், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பின்னர் அதன் அருகில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.
இவ்விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார். விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி அவரை வரவேற்று திண்டிவனம் நகரம், விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களிலும் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலை களிலும் விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள் உள்ளிட்டவற்றை தி.மு.க. வினர் வைத்துள்ளனர்.
- சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகிறார்.
- ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
சிதம்பரம்:
சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சிதம்பரத்துக்கு அவர் வருகை தருகிறார்.
காலை 11.10 மணியளவில் சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு செல்கிறார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினைவிடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகிறார்.
விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாணவர்களுடன் கவர்னர் சாப்பிடுகிறார்.
கவர்னர் சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பெரிய அளவிலான பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது.
- சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், நீதி மன்றங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தம் என்பதால் கடலூரில் இருந்து புதுச்சேரி, பண்ருட்டி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும் நின்று பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் பெரிய அளவிலான பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இங்கிருந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி சென்று வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் சரியான முறையில் பஸ் நிறுத்தத்துக்குள் நிறுத்தாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் நிறுத்தாமல் சென்ற 11 பஸ்கள் தெரிய வந்தது. இதன் காரணமாக போலீசார் 11 பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்களை நிறுத்தாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
- பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம்.
- நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்வோம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சீமானின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே பெரியார் பற்றிய எனது கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவரான வீரமணி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
திருமண விழாவில் பேசிய அவர், "பெரியாரை பற்றி யார் யாரோ பேசுவதை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்பவர்கள், பைத்தியம் பிடித்தவர்களுக்கு அல்ல. பைத்தியம் பிடித்தவர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர பதில் அல்ல.
ஒருவரின் பெயரை சொல்லி இப்படி பேசுகிறாரே என்று என்னிடம் கேட்டார்கள். அடுத்ததாக இன்னொருவர் பெயரை சொல்லி அவரை இவர் ஆதரிக்கிறாரே என்று கேட்டார். நான் கேட்டேன் ஓர் ஒரு பைத்தியம் தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்" என்று தெரிவித்தார்.
- பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரியாரின் பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீமானின் தொடர்ச்சியான அவதூறுகளால் பெரியார் மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரியாரின் பணிகள் குறித்து தற்போது பேசி வருகின்றனர்.
அவ்வகையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "வீட்டில் கோலம் போட்டு, சாணம் அள்ளிக் கொண்டிருந்த பெண்ணும் மேயர் ஆகி இருப்பதற்கு காரணம் பெரியார் தான்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
- ராஜேந்திர சோழகன் கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினமும், நேற்றும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
இன்று காலை அவர்கள் கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டனர்.
மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர் நவீன் தலைமையில் உதவி இயக்குனர் பிரித்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே, சென்னை எப்.சி.ஐ. தரக்கட்டுபாடு மேலாளர் பாஸ்கர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர்.
முதலில் முட்டத்தில் அவர்கள் பாதித்த பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் ராஜேந்திர சோழகன் கிராமத்திற்கு சென்றனர். அங்கு சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து விரைவில் தங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- மருத்துவமனையில் இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிறுவர்கள் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களும் அதிக அளவில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிக அளவில் பனிமூட்டம் இருந்து வந்த நிலையில், சில நாட்களாக தொடர் மழையும் பெய்தது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகை போகி அன்று அதிகளவில் பொருட்கள் எரிய வைத்ததால் மேலும் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன
இதன் காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிறுவர்கள் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களும் அதிக அளவில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் நேரில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் இதுபோன்ற காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து காணப்படுகின்றதோ அதனை கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
- பொது கழிப்பறை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் விழுந்து கிடந்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என நேற்று மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்திற்கு இன்று காலை மாவட்ட கண்காணிப்பாளர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பொது கழிப்பறை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொது கழிப்பறையை ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் விழுந்து கிடந்தார். இதை பார்த்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் அந்த வாலிபரை உடனே மீட்டு தாசில்தார் பலராமன் வாகனத்தில் ஏற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலிப்பு ஏற்பட்ட வாலிபரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல் அதிகாரிகள் உடனடியாக தாசில்தார் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது.
- பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இன்று மாவட்ட முழுவதும் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.
மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகளுக்கு பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
ஆற்று திருவிழாவின்போது பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது மட்டுமின்றி ஆறுகளில் தண்ணீர் உள்ளதால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஆற்றுத் திருவிழாவில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சிவாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- கம்பெனி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கிழக்கு ராமபுரத்தை சேர்ந்தவர் சிவா (வயது 21) இவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சிவா அங்குள்ள கன்வேயர் பெல்டில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .
அப்போது சிவாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர் . பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இறந்த சிவா குடும்பத்திற்கு 1 1/2 கோடி நிவாரண தொகையும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பொது மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கம்பெனி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.






