என் மலர்
நீங்கள் தேடியது "mrk panneerselvam"
- தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?
- தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது.
கடலூர் கிழக்கு மாவட்டக் திமுக செயலாளரும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சருமான திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
"2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்'' என திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி? அன்புமணி சொல்வது போலத் தருமபுரியைப் புறக்கணித்திருந்தால், இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்குமா? இந்தக் கணக்குகூட தெரியாமல் அன்புமணி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என அவதூறுகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
"தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்: காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள்" எனச் சொல்லியிருக்கிறார். சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம். தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும் காட்டாமல் தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது. அதனை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவு காட்டும்.
"தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்காக ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை" என்று சொல்லியிருக்கிறார் அன்புமணி. மொரப்பூர் - தருமபுரி புதிய அகல இரயில் பாதை திட்டத்திற்கான நிர்வாக அனுமதி 17.04.2023 அன்று வழங்கப்பட்டு, கடந்த வருடம் மட்டும் 78.54 ஹெக்டேரில் 54.14. ஹெக்டேர் நில எடுப்புக்காக அறிவிக்கை செய்யப்பட்டது. 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. புறம்போக்கு நிலங்கள் 13.72.0 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2000 பட்டாதாரர்களுக்கு இதுவரை ரூ.29 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24.40.02 ஹெக்டர், ரயில் நிலையம் மூக்கனூரில் அமைவது குறித்துத் திருத்திய நில அட்டவணை தயாரிக்கும் பணியில் உள்ளது. நில எடுப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
ஒன்றிய அரசின் ரயில்வே திட்டங்களில் கூட தமிழ்நாடு அரசைக் குறை சொல்லும் அன்புமணி என்றைக்காவது மோடி அரசைப் பற்றி விமர்சனமாவது வைத்திருக்கிறாரா? ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தைகூட இடம்பெறவில்லை. அதையாவது கண்டித்திருக்கிறாரா? "ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 25 எம்.பி.க்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்" என்று இறுமாப்புடன் சொன்னார் அன்புமணி ராமதாஸ்.
அப்படிச் சொன்னவர் நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்? அவருடைய பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் என்ன தெரியுமா? அன்புமணி மக்களவையில் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில் மொத்தம் 304 நாட்கள் அவை நடைபெற்றன. அதில் வெறும் 92 நாட்கள் மட்டுமே அன்புமணி அவைக்குப் போனார். அதாவது அவரது வருகைப்பதிவு சதவிகிதம் வெறும் 30-தான். நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களுக்கு என்ன பெற்றுத் தந்தார்?
தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில் காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பைத் தவிரப் புதியதாகப் பாசனப்பரப்பைக் காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது எனக் காவிரி நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. காவிரி வடிநிலத்தின் உபரிநீரைப் பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் தீர்ப்பு கிடைத்த பின்னரே காவிரியில் நீரேற்று திட்டங்களைக் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும். இவையெல்லாம் தெரிந்தும் தருமபுரி மக்களை ஏமாற்றுவதற்காக வெற்று நாடகம் போட்டிருக்கிறார் அன்புமணி.
சிப்காட் தொழிற் பூங்கா திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார் அன்புமணி. தருமபுரி தொழிற் பூங்காவிற்கு ஆரம்பக்கட்டப் பணிகளான அணுகு சாலை மற்றும் நுழைவாயில் தகவல் பலவை, தெரு விளக்குகள் மற்றும் இதர பணிகள் அமைக்கும் பணி ரூபாய் 12.39 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு பணிகள் ரூ. 93 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலமாக 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோர்களுக்காக நிலம் ஒதுக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, தன் கட்சியிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் இடமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அன்புமணி இனியாவது விவரங்களை அறிந்து பேச வேண்டும். அல்லது அவரது சொந்தக் கட்சி பதற்றம் தீரும் வரை இப்படி அரைவேக்காட்டு அறிக்கை விடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
- உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை:
கருணாநிதி தலைமையில் கடந்த 1996-2001 மற்றும் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி வேல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல் முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல் முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும் படி, கடலூர் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.
- கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
- சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.
கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் 25 க்கும் மேற்படட் அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.
இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் இளம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பேங்கேற்க உள்ளன.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளது. 2.7 மெட்ரிக் டன் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம்.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய சிறுதானிய ரகங்கள் உருவாக்கப்பட உள்ளது.
சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழக அரசு 82 கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களது நிலதத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தரமான விதைகளையும் கொடுக்கும்.
பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
- பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் துவாரகாபுரி கிராமத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிருபவர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், புயல் காரணமாக 3 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வேளாண் பயிர் நீரால் முழுங்கி நாசமாகி உள்ளது. வேளான் துறை அதிகாரிகள் பாதிப்பு குறித்து நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விலை நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இழப்பீடு வழங்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நீர்வழி ஆக்கிரமிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்வது போலாகும். வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சாட்டினால் அந்த பாதிப்புக்கு முழு பொறுப்பு அவர்கள் தான். காரணம் 10 ஆண்டுகள் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது. அவர்கள் நேரடியாக பார்வையிட்ட பின் பாதிப்பு குறித்து கூறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
- தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இன்று (வெள்ளிக்கிழமை) வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு, கண்காட்சியை தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
வடிகால் வாய்க்கால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்தார். இதனால் மழை புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பயிர்கள் பாதிப்புக்காக ரூ.1,023 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும்.
மத்திய அரசு நாம் கேட்ட நிவாரணத்தை வழங்கவில்லை.
இருந்தாலும், தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நாம் பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு மத்திய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரியாரின் பணிகள் குறித்து பேசி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீமானின் தொடர்ச்சியான அவதூறுகளால் பெரியார் மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரியாரின் பணிகள் குறித்து தற்போது பேசி வருகின்றனர்.
அவ்வகையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "வீட்டில் கோலம் போட்டு, சாணம் அள்ளிக் கொண்டிருந்த பெண்ணும் மேயர் ஆகி இருப்பதற்கு காரணம் பெரியார் தான்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சிதம்பரம்:
நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், சிதம்பரம் நகராட்சி சீர் கேட்டை கண்டித்தும் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணைச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் கிழக்கு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.
மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் நகராட்சியை பொறுத்தவரை மக்கள் குடியிருக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சாலை, குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் ஆகியவை சீர்கெட்டு உள்ளது.
மக்களுக்கு எந்தவித திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. இந்த அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜாபர்அலி, ஒன்றிய செயலாளர்கள் மனோகர், சபாநாயகம், வாக்கூர் முருகன், ராயர், சோழன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர துணை செயலாளர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார். #propertytaxhike






