என் மலர்tooltip icon

    கடலூர்

    • 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.


    பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் ஜோதி தரிசனத்தை காண மக்கள் வந்து செல்லும் வகையில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
    • நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வடலூர்:

    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இதில் தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆகையால் தைப்பூச ஜோதி தரிசன விழா இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    அந்த வகையில், 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    இதில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் இன்று காலை 7.30 மணி அளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சத்யஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதில், சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

    அதன்படி, நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணிக்கும், 12-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

    ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்காலிக வாகன நிறுத்தங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவையும் வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ந்தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.

    • போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
    • ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடலூர் , நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் இங்கு தினசரி வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பூ மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி பூ மார்க்கெட்டுக்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மேற்கூரைகளை அகற்றி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பூக்கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். தொடர்ந்து ஒரு நாளைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி மூலமாக அகற்றப்படும் என்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று பூக்கடைகளின் மேற்கூரைகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் நாங்கள் கேட்ட கால அவகாசம் முடிவதற்குள் ஏன் கடைகளை அகற்றுகிறீர்கள் என்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
    • குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில், தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த டீசலைக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேரந்த சூர்யா- சினேகா தம்பதியின் 1.5 வயது குழந்தை மைதிலி.

    வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.

    குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    • வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தற்போது இந்த பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் வக்காரமாரி நீர் தேக்கத்தில் விடுகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் ராட்சத முதலை இரவு நேரத்தில் சாலை நடுவே ஒய்யாரமாக நடைபோட்டு இரை தேடி சிதம்பரம்-காட்டுமன்னார் கோவில் செல்லும் சாலையில் சென்றது.

    இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

    முதலையின் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்றனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அந்த முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சுற்று வட்டார பகுதிகளான பழைய கொள்ளிடம், வல்லம் படுகை, வேளக்குடி, அகர நல்லூர், பெராம்பட்டு, திட்டு காட்டூர், அத்திப்பட்டு, அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் பெரிய அளவில் இருந்து சிறிய அளவிலான முதலைகள் காணப்படுகிறது.

    தற்போது இந்த பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் வக்காரமாரி நீர் தேக்கத்தில் விடுகின்றனர் அவ்வாறு விடப்படும் முதலைகள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைவதும் தொடர் கதையாக உள்ளது.

    இவ்வாறு பிடிபடும் முதலைகளை சென்னையில் உள்ள முதலை பண்ணையில் விட வேண்டும் அல்லது இதற்கென நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் முதலைப் பண்ணை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது.

    இங்கு சாலை ஓரத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து ஏராளமானோர் திரண்டு பயத்துடன் பார்வையிட்டு வந்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மனித எலும்பா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட எலும்பு? என்பதனை பார்வையிட்டு சோதனை செய்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்த அனைத்து பொருட்களை சாக்கு முட்டையில் கட்டிக்கொண்டு விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகம் பகுதியில் மந்திரிக்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததால் யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    • பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர்.
    • பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் புதுப்பேட்டை பகுதியில் இன்று காலை வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டு பனிப்பொழிவு ஏற்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பண்ருட்டி கும்பகோணம் சாலை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் சாலை, புதுப்பேட்டை அரசூர் சாலை, அண்ணாகிராமம்-பண்ருட்டி சாலை, கண்டரக்கோட்டை சென்னை சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை 8 மணி வரை தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    மேலும், பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் சீதோஷ்ண மாற்றம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    விழுப்புரம் பகுதியில் நேற்று இரவு முதல் பனி மூட்டம் மிகக்கடுமையாக இருந்தது. அதுவும் குறிப்பாக காலை 8.30 மணி வரை பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.

    இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் எறும்புகள் ஊர்ந்து செல்வதுபோல் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன.

    மேலும் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் பனிப்பொழிவு டெல்லியை மிஞ்சும் வண்ணம் இருந்தது. இதன் காரணமாக காலை 8.30 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைந்தே காணப்பட்டது.

    • கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    பண்ருட்டி:

    முகூர்த்த நாளையொட்டி திருவதிகை வீரட்டானேஸ்வர் கோவிலில் இன்று 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

    அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்துவதற்கு அவர்களின் உறவினர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் கோவிலில் ஆங்காங்கே நின்றவாறு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கோவில் அருகே மணமக்கள் போட்டோஷூட்களை நடத்தினர். தற்போது கோவிலுக்குள் உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாட வீதியில் உள்ள தனியார் வீடுகள், மண்டபங்கள் சாலைகளில் உணவு அருந்தினர். மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 

    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.

    தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

    • காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர்.
    • படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    காரைக்கால்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறை பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை சிறை பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளனர்.

    சமீபத்தில்தான் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது.
    • பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.

    தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.

    • சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா.
    • சுவாமி சகஜானந்தா திருவுருவச் சிலைக்கு கவர்னர் மலரஞ்சலி.

    சிதம்பரம்:

    சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினை விடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.


    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    கவர்னர் சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    சுவாமி சகஜானந்தா நினைவிடத்திற்கு கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அன்சர்ரி, காங்கிரஸ் கட்சி மக்கின், ஜெமினிராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சிதம்பரம் மேலவீதியில் கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    ×