என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும்.
    • அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்தது.

    கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை எங்களது கோரிக்கையை ஏற்று சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. சென்னை மாநகராட்சி 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோவை மாநகராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும்.

    வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள். விளைநிலங்கள் வழியாக கியாஸ் லைன் பதிப்பது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் வித்தியாசத்தை காண முடிகிறது. சீமான் போக்கில் மாற்றம் தெரிகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள்.

    தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்றி கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான 'டைனிங் டேபிள்' அமைக்கப்பட்டு இருந்தது.
    • வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    திருமணம்...!

    வீடுகளில் எளிமையாக நடைபெற்ற காலம் மாறி, தற்போது மண்டபங்களில்தான் பெரும்பாலும் நடக்கின்றன. சிலர், நடுக்கடலிலும், நடுவானிலும் கூட திருமணத்தை நடத்துகின்றனர்.

    திருமண விழாக்களில் தங்களது வசதிக்கு ஏற்ப மண மேடை, உணவு அரங்கு உள்ளிட்டவற்றை அமைத்து கொள்கின்றனர். அப்படி ஓர் திருமண விழாதான், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று உள்ளது.

    அதாவது, பொள்ளாச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. வழக்கமாக உணவு சாப்பிட 'டைனிங் டேபிள்'தான் போடப்பட்டு இருக்கும். ஆனால், பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால், தேங்காய் வடிவில் 'டைனிங் டேபிள்' அமைத்து இருந்தனர். 100-க்கும் மேற்பட்ட தேங்காய் வடிவிலான 'டைனிங் டேபிள்' அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனை திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் தேங்காய் வடிவில் உள்ள 'டைனிங் டேபிளில்' மகிழ்ச்சியுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். அத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.



    • கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.

    இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
    • விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கோவை:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால்.

    இவர் கடந்த 17-ந் தேதி கேரளாவில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு டெல்லி செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவரை வழியனுப்பி வைக்க கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். அந்த சமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களை சமாதானம் செய்து விட்டு, டெல்லி புறப்பட்டு சென்றார்.

    காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், அங்கு நின்றிருந்த காங்கிரஸ் ஐ.என்.டியூ.சி நிர்வாகி கோவை செல்வன் மீது மோதியதாக தெரிகிறது.

    இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆனது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி கோவை செல்வன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். விமான நிலையத்தில் மயூரா ஜெயக்குமாரும், அவருடன் வந்தவர்களும் வேண்டும் என்றே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் தாக்க முயன்றனர். எனவே அவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர்.

    சத்குரு அகாடமி சார்பில் "இன்சைட்" எனும் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    ஈஷாவில் இன்சைட் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

    இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத்," இஸ்ரோவின் வளர்ச்சி பயணம் மற்றும் வெற்றிக்கான மக்களை உருவாக்குதல்" எனும் தலைப்பில் பேசினார். 

    அப்போது, இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தலைமை தாங்கிய புகழ்பெற்ற தலைவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரோவை தலைமை தாங்கிய ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர். இது கால்களுக்கு கடிவாளமிடும் மிகக்குறைவான பட்ஜெட்டுகளில் கூட மகத்தான விண்வெளி பயணங்களை சாத்தியப்படுத்தும் ஊக்கத்தையும், உந்துதலையும் பல குழுக்களுக்கு அளித்தது" என்றார்.

    தொடர்ந்து, இஸ்ரோவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் குறித்து அவர் பேசுகையில், "ராக்கெட்டுகளை உருவாக்கிய அனைத்து மனிதர்களின் உருவாக்கத்தில் அவர் பணிபுரிந்தார். மனிதர்களிடம் சிறந்த சக்தி உள்ளது அதனைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நீங்கள் உருவாக்கி விட முடியும் என்று அவர் நம்பினார்" எனக் கூறினார்.

    மேலும், இஸ்ரோவிற்கான பொருளாதாரத்தை திரட்டுவதில் இருந்த சிரமங்கள், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் நலன்களை விளக்கி அரசியல் அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது முதல் இன்று உலகிலேயே அதிகப் புகழும், மதிப்பும் பெற்ற விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இன்றைய நிலை வரை, இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.

    முன்னதாக இன்சைட் நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் பேசுகையில், "நம் பாரதம் முன்பு உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆனால் கடந்த 250 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, நம்மை நம்பிக்கையற்ற வெறும் கிளார்க் பணிகளை தேடும் மக்களாக மாற்றி உள்ளது. 

    அதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறை அந்த மனநிலையை கைவிட்டு வருகிறது. நம் நாட்டில் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அதாவது 100 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போதைய தேவை நம் நாட்டின் தொழில்கள் விரிவடைய வேண்டும். இதற்காக தான் இன்சைட் நிகழ்ச்சி" எனக் கூறினார்.

    இந்தாண்டு இன்சைட் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர். டைடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கட்ராமன், வெல்ஸ்பன் லிவிங் லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஶ்ரீமதி தீபாளி, டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான ஶ்ரீ வேலையன் சுப்பையா ஆகியோர் முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர்.

    இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன்.
    • சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர்.

    நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் இன்று தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.

    கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறியதாவது:-

    கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதலமைச்சர் ஆவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.

    ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.

    அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர்.

    இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.

    சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
    • கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    கோவை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.கவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகளையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.

    தமிழகம் வந்த சில நாட்களிலேயே அண்ணாமலை கோவைக்கு வருகை தர உள்ளார்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.

    இதற்காக 1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து அவர் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    லண்டன் சென்று விட்டு 3 மாதம் கழித்து முதல்முறையாக அண்ணாமலை கோவைக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கோவை மாவட்ட பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளனர்.

    கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னதாக வருகிற 30-ந் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.

    அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.

    • எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
    • எலினாவுக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார்.

    ரெயில் பயணத்தில் மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணைகுப் பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கூடைப்பந்து விளையாட்டின் போது வயிற்று மற்றும் மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர்.
    • 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள்.

    ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மொத்தம் 55 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளுடன் கூடிய கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் கிராமங்களுக்கு இடையேயான வாலிபால், துரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது.


    162 இடங்களில் நடைபெறும் முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகளும் மொத்தம் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்கின்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் 70 இடங்களிலும், த்ரோபால் போட்டிகள் 24 இடங்களிலும் நடைபெற்றது.

    இதில் 6,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 30,000 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அணிகள் பங்கேற்றன. வாலிபால் போட்டிகளில் 22,522 வீரர்களும், துரோபால் போட்டிகளில் 5,098 பெண்களும் போட்டிகளில் விளையாடினர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சென்னை பூந்தமல்லியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தென்காசியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி, திருத்தணியில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் நேரில் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    அதேபோன்று ஒசூரில் போட்டிகளை மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயனி தொடக்கி வைத்தார்.

    அதுமட்டுமின்றி மதுரை கள்ளந்தரி மற்றும் காரைக்குடி புதுவயல் பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


    இந்த போட்டிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகள் அடுத்து டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

    இதைத்தொடர்ந்து தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், ஈஷா கிராமோத்சவ திருவிழா ஆண்டுதோறும் கிராமப்புற விளையாட்டுகள், கிராமிய கலைகள் மற்றும் உணவு முறைகளை கொண்டாடி புத்துயிர் அளிக்கும் விதமாகவும், உற்சாகமான கிராமிய வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது.

    • பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.
    • முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை.

    கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு' என்று முத்தரசன் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.

    பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    உண்மை என்ன என்பதை நேரடியாகவோ அல்லது ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் என பொதுவெளியில் எளிதில் கிடைக்கும் அரசு ஆவணங்களை கூட தேடி படிக்காமல், உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பமும் இல்லாமல், ஏதோவொரு கட்டாய நிர்பந்தத்தின் பேரில், யாரோ சிலர் எழுதிக் கொடுத்த அவதூறுகளை முத்தரசன் ஊடகங்களுக்கு முன் படித்து காட்டியது முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளரே இப்படி செய்வது வருத்தத்திற்கு உரியது.

    2022-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் கூட்டு ஆய்வு அறிக்கையில், "ஈஷா யோக மையத்தின் எல்லைகளை அளவீடு மேற்கொண்டதில் அவர்கள் காப்புக்காடு (வனப்பகுதி) பகுதியில் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அத்துமீறல்களோ செய்யவில்லை என நில அளவையிலான அடிப்படையில் தெரிய வருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

    பழங்குடியினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் 44.3 ஏக்கர் அளவிலான நிலங்கள் எதனையும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிக்கவில்லை என்பதை வருவாய்த்துறை ஆவணங்களும், ஆர்.டி.ஐ. தகவல்களும் தெளிவாக கூறுகின்றன.

    ஈஷாவில் பல்வேறு நிலைகளில் இருக்ககூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஈஷா பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவே கூறியுள்ளனர். இதனை காவல்துறையும் அதன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

    சமீபத்தில் உச்சநீதிமன்றம், இரு பெண் துறவிகள் குறித்த வழக்கில் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் ஈஷாவில் இருப்பதாக மிகத்தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. மேலும் ஒரு அமைப்பை இழிப்படுத்துவதற்காக மனுக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது.

    ஈஷாவின் நற்பணிகளால் தினமும் பல்லாயிரகணக்கான விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மத, இன பேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் யாதும் இன்றி பல கோடி மக்களுக்கு இந்த மண்ணின் ஆன்மீகத்தை அதன் தூய வடிவில் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது.

    ஆகவே உண்மைக்கு புறம்பான, பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.
    • தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கோவையில் கடந்த மாதம் 27-ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நக்கீரன் கோபால் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ஓம்கார் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதற்கு ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்தனர்.

    ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    தடையை மீறி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கோனியம்மன் கோவில் அருகே போலீசார் கைது செய்தனர். மொத்தம் 25 பேர் கைதானார்கள். அவர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

    இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தால் கோவையில் இன்று பரபரப்பு நிலவியது.

    • கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர்.
    • மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

    இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் முதல் சென்னை, கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று 2-வது நாளாக கோவை, சென்னையில் சோதனை நடந்தது. இதற்கிடையே சென்னையில் உள்ள மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் மருத்துவக்கல்லூரியில் சோதனை நடந்தது. இதேபோன்று மார்ட்டினின் உறவினர்களான கோவை சிவானந்தபுரத்தில் உள்ள ஜான் பிரிட்டோ என்பவரது வீடு, சிவானந்தா காலனியில் உள்ள அந்தோணியா ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×