என் மலர்
கோயம்புத்தூர்
- கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை விமான நிலையத்துக்கு நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவர் ஆந்திர மாநிலம் கண்டசாலா பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (வயது 36) என்பதும், அவர் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்தது. மேலும் வேறு ஒருவரின் முகவரியில் புகைப்படத்தை ஒட்டி போலி பாஸ்போர்ட் தயாரித்து சிங்கப்பூருக்கு சென்று வீட்டு வேலை பார்த்த விவரமும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரி கிருஷ்ணஸ்ரீ, பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி நடத்திய விசாரணையில் கனகதுர்காவிற்கு போலி பாஸ்போர்ட் எடுக்க, நாகேஸ்வரராவ் என்பவர் உதவி செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டதாக கனகதுர்காவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.
- விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது.
- எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.
ஆனால் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி அவர் ஐ.பி.எஸ். ஆனார். தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும். எங்கள் கட்சியை குறை சொல்லத்தான் ஐ.பி.எஸ். படித்தாரா? மோதுவோம் என்றாகி விட்டது. வா மோதுவோம்.
நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.
தமிழகத்தில் இதுவரை பாதித்த புயல் பாதிப்புகளுக்கு, மத்திய அரசு இதுவரை உதவி செய்யவில்லை. மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துக் கொண்டு, பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவுவது இல்லை. குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுபற்றி கேள்வி கேட்டால் ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள்.
அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கேவலமானது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் உணவை உறுதி செய்ய வேண்டும். உணவு, உடை என்பது அவரவர் உரிமை. மாடு புனிதம் என்றால், எதற்காக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
- ஜெகதீஷ் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 45). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் பணியாற்றும் நிறுவனத்தில் வெள்ளலூர் மகாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மனைவி தர்ஷனா என்ற பிரியா (29) கார் லோன் வாங்கி இருந்தார்.
இந்தநிலையில் தர்ஷனா சரியாக மாத தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. 20 மாதங்களாக பணம் கட்டாததால் இதுகுறித்து கேட்பதற்காக ஜெகதீஷ், அவருடன் வேலை பார்க்கும் சரவணன் மற்றும் சுரேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு தர்ஷனாவின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் நின்ற காரை ஜெகதீஸ் மற்றும் ஊழியர்கள் பறிமுதல் செய்ய முயன்ற போது காரை தர்ஷனாவின் கணவர் மணிகண்டன் வெளியில் ஓட்டி செல்ல முயன்றுள்ளார். காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது தர்ஷனா அவர்கள் வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாயை அவிழ்த்து ஏவி விட்டுள்ளார். பாய்ந்து சென்ற அந்த நாய் ஜெகதீசனை பல இடங்களில் கடித்தது. இதில் அவரது கால் மற்றும் அடிவயிறு உள்ளிட்ட 12 இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஊழியர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து ஜெகதீஷ் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தர்ஷனாவை கைது செய்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
கோவை:
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டார். போராட்டத்தில் கோவை மாநகர் மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி, வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதியை மீறி இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தையொட்டி அங்கு காட்டூர் துணை கமிஷனர் கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவின் ஆட்சி எதிர்க்கட்சிகள் மற்றும் ராணுவத்தின் சதியால் அகற்றப்பட்டுள்ளது. அங்கு புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
சிறுபான்மை மக்களான இந்துக்கள் அதிகளவில் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள், பொருட்கள், கோவில்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இஸ்கான் நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். அவரை ஜாமினில் எடுக்க முயன்ற வக்கீல் கொல்லப்பட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அண்டை நாடான வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களை ராகுல் காந்தியோ, மம்தா பானர்ஜியோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் வங்காள தேச இந்துக்களின் பாதுகாப்புக்காக போராட அனுமதி கேட்டோம். அதற்கும் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல் பொள்ளாச்சியில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் குண்டுக்கட்டாக ஏற்றி கைது செய்தனர்.
30 பெண்கள் உள்பட மொத்தம் 155 பேர் கைதானார்கள்.
- தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
- உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
கோவை:
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் இருவேலம்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்தபடி பேசி உள்ளார்.
கோபம் அடைந்த மக்கள் காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா என கூறி அவர் மீது சேற்றை வீசி உள்ளனர்.
நிர்வாக திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க. அரசால் பெருமழை பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்குச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இதனால் தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகால தி.மு.க. அரசுக்கு மக்கள் வழங்கிய சான்றிதழ் தான் இந்த சம்பவம்.
இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
- பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
சூலூர்:
பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி உள்ளிட்டவற்றை கோவை அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
சூலூர் அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஐசக் ஜெபக்குமார், மருதீஷ் மற்றும் ஜே. வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல், கற்பித்தல் ஆய்வுக் கூடத்தில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக், ஸ்மார்ட் கண்ணாடி ஆகிவற்றை உருவாக்கி உள்ளனர்.
சென்சார் மற்றும் சிப் போர்டுகளைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வாக்கிங் ஸ்டிக்கானது அதிர்வுகளை உணர்ந்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்கிறது.
இதன் மூலம் பார்வையற்றோர் தடைகள் மற்றும் படிக்கட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இது பயனாளருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, ஒலி மூலம் எச்சரிக்கையும் செய்கிறது.
தங்களது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இந்த கருவிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த கருவிகள் பார்வையற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளி மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு, பிற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
- மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்:
ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி இசைவாணி, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். வாராகி மந்திராலயத்தின் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கல்லாறு அகத்தியர் பீடத்தின் சுவாமிகள் சரோஜினி மாதாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்ப சுவாமி குறித்தும், ஐயப்ப பக்தர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் கல்ச்சுரல் கிளப் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள்.
- அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும்.
கோவை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 3 மாத படிப்பு முடிந்து லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து மாலையில் அவர் விமானம் மூலம் கோவை வந்தார். சென்னை மற்றும் கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லண்டனில் இருந்து திரும்பியதும் முதல் நிகழ்ச்சியாக கோவையில் நடந்த வாய்ஸ் ஆப் கோவை மாநாட்டில் பங்கேற்று பேசினார். மாநாட்டில் அவர் சர்வதேச மற்றும் இந்திய அரசியல் பார்வை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அண்ணாமலை பேசியதாவது:-
நல்லதை நல்லது என்று சொல்லவும், கெட்டதை கெட்டது என்று சொல்லி சுட்டிக்காட்டவும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு தொடங்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் கூட மக்களின் குரலாக இருக்க வேண்டும்.
தன்னார்வ அமைப்பு கள் உங்கள் குரலாக ஒலிக்கும்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. உலக அரசியல் மிக முக்கியம். ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வு, நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்றவுடன் சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள 1.20 கோடி பேரை வெளியேற்றப் போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இதுவும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
பா.ஜ.க. சார்பில் 2020 அக்டோபர் முதல் அசாம் மாநிலத்தில் 37 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.830 தரப்படுகிறது. தி.மு.க. மகளிர் உதவித்தொகை தரும் முன்பே அசாமில் கொடுக்க தொடங்கி விட்டோம்.
இந்த ஆண்டு மார்ச் முதல் சத்தீஸ்கரில் 70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1000, மகாராஷ்டிராவில் ஜூலை முதல் 1.70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1500, ஒடிசாவில் செப்டம்பர் முதல் 80 லட்சம் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஆட்சியில் 40 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிகடன், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மோடி அரசு, உள்கட்டமைப்புக்கு ரூ.48 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. எல்லா மக்களுக்கும் எல்லாவித சலுகைகளும் வர வேண்டும் என நினைக்கும் அரசாக பா.ஜ.க. உள்ளது.
ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை என்றாலும் அனைத்தும் இலவசம் என்கிறார் ராகுல்காந்தி. அப்படியென்றால் நாடு எப்படி முன்னேறும். அறிவு பூர்வ மக்கள் இருக்கும் இதுபோன்ற இடங்களில் அரசியல் சாராதவர்கள் பேசும் கருத்துகள், அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளாக மாறும் வாய்ப்புள்ளது.
மக்களுக்கு பயன்படும் அரசியல் பேச வேண்டும். அதை பேசுவதில்லை. ஆக்கப்பூர்வ முறையில் மக்களிடம் கருத்து கேட்கும் அரசு தமிழகத்தில் இல்லை.
கோவை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. வெட்கிரைண்டர் உற்பத்தியில் தலைநகராக கோவை இருந்தது. தற்போது அது அகமதாபாத் நகராக மாறி விட்டது. கோவையின் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லை. விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் தர இழுத்தடிக்கின்றனர். அறிவாளிகளை அடிமை வாதிகளாக மாற்றும் அரசியல் நிலவரம் இங்கு இருக்கிறது.
லண்டன் அருங்காட்சியகத்தில் 67 லட்சம் பொருட்கள் உள்ளன. அதில் டைனோசர் எலும்பு முதல் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பொக்கிஷங்கள் வரை உள்ளன. நம் பாரம்பரிய, கலாசாரம் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. கலாசாரத்தை மீட்டெடுக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் நமது கலாசாரம் சார்ந்த வேர்களை கொண்டுவர வேண்டும். அதை பிரதமர் மோடி மீட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இருந்து 640 புராதன பொருட்களை மோடி அரசு மீட்டுள்ளது.
அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க இளைஞர்கள் சபதம் ஏற்க வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இருந்து இயற்கையோடு இணைந்து வாழும்போது தான் அறிவு சார்ந்த விஷயங்கள் நடக்கும். நடுத்தர மக்கள் அறிவுசார்ந்த விஷயங்களை பேச வேண்டும். தமிழக அரசியலை மாற்றும் வலிமை நடுத்தர மக்களின் குரலுக்கு உண்டு.
கேள்வி கேட்டால் உங்களிடம் வர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள். அவர்கள் தானாக உங்களிடம் வருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவை கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
- நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் உணவு திருவிழாவில் திரண்டுள்ளனர். ஆனால் ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் ஒவ்வொரு உணவையும் வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றதே இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
- கழிவறையை சுத்தப்படுத்தும் பிரஸ்சில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
- செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன.
நேற்று கழிவறைக்கு சென்ற பெண்நர்சுகள், கழிவறையில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா காமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் செய்தனர். அவரும், டாக்டர்களும் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேனா காமிரா இருந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு பயிற்சி ஆர்த்தோ டாக்டராக பணியாற்றும் வெங்கடேஷ் (வயது 33) என்பவர் கழிவறையில் பேனா கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெங்கடேஷ் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கைதான டாக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த இவர் பட்ட மேற்படிப்புக்காக கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
அங்கு சபல புத்தியால் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கேமரா பொருத்தி போலீசில் சிக்கிக் கொண்டார். கழிவறையில் காமிரா இருந்ததை நர்சுகள் பார்த்து முதலில் வெங்கடேசிடம் தான் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர் கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்துவிட்டு விசாரிப்பதாகக் கூறி இருக்கிறார். பிரச்சனை பெரிதானதும் வெங்கடேசும் அங்கு சென்று விசாரிப்பது போல் நடித்துள்ளார்.
ஆனால் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வெங்கடேஷ் கழிவறைக்கு சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பேரிலேயே அவரை போலீசார் பிடித்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வாயிலாக பேனா கேமராவை வெங்கடேஷ் வாங்கியிருக்கிறார். அதனை யாருக்கும் தெரியாமல் கழிவறையில் மறைத்து வைத்துள்ளார்.
அந்த கேமராவில் பதிவான காட்சிகளை செல்போனில் பார்த்து ரசித்துள்ளார். ஆனால் கேமரா வைத்த சில நாட்களிலேயே சிக்கிக் கொண்டார்.
அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் இப்படி செய்தாரா அல்லது பணியாற்றிய வேறு இடங்களில் இடங்களிலும் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக அவரது செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் இழிவான செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- தொழில் அதிபரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர். பயணிகள் அனைவரையும் மற்றும் அவர்களது உடைமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதன்பின்னர் பயணிகள் விமானத்தில் ஏறினர். அப்போது இந்த விமானத்தில் பயணிப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு ஒருவர் வந்தார். அவர் கையில் கைப்பை வைத்திருந்தார்.
விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் அவரை சோதித்து, விட்டு அவர் கையில் வைத்திருந்த கைப்பையும் சோதனை செய்தனர்.
அதில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அந்த துப்பாக்கியில் 2 குண்டுகள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான பாதுகாப்பு படை போலீசார், உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்களும் விரைந்து வந்து, அந்த நபரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அவரிடம் துப்பாக்கியை எதற்காக எடுத்து வந்தீர்கள். எந்த ஊர், எதற்காக கோவைக்கு வந்தீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் என்பது தெரிய வந்தது. இவர் சொந்தமாக கேரவன் வாகனம் வைத்துள்ளார்.
அந்த வாகனத்தை சர்வீஸ் விடுவதற்காக கோவைக்கு வந்துள்ளார். வாகனத்தை சர்வீஸ் விட்டு விட்டு, மீண்டும் சென்னை செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, தான் எப்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கியையும் தவறுதலாக எடுத்து வந்தது தெரியவந்தது. துப்பாக்கிக்கான லைசென்சும் அவரிடம் இருந்தது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை போலீசார், தொழில் அதிபரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது.
- காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில் நான் அரசியல் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டார்களை பார்த்ததும் பலர் பயந்து விட்டார்கள் என தெரிவித்தார்.
தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என்று பெருமிதப்படுத்திக் கொண்ட சீமானின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில் வருமாறு:-
சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும். அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது.
காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.






