என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
    • உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் இருவேலம்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்தபடி பேசி உள்ளார்.

    கோபம் அடைந்த மக்கள் காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா என கூறி அவர் மீது சேற்றை வீசி உள்ளனர்.

    நிர்வாக திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க. அரசால் பெருமழை பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

    முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்குச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

    இதனால் தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    கடந்த மூன்றரை ஆண்டுகால தி.மு.க. அரசுக்கு மக்கள் வழங்கிய சான்றிதழ் தான் இந்த சம்பவம்.

    இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.

    தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
    • பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

    சூலூர்:

    பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி உள்ளிட்டவற்றை கோவை அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

    சூலூர் அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஐசக் ஜெபக்குமார், மருதீஷ் மற்றும் ஜே. வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல், கற்பித்தல் ஆய்வுக் கூடத்தில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக், ஸ்மார்ட் கண்ணாடி ஆகிவற்றை உருவாக்கி உள்ளனர்.

    சென்சார் மற்றும் சிப் போர்டுகளைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வாக்கிங் ஸ்டிக்கானது அதிர்வுகளை உணர்ந்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்கிறது.

    இதன் மூலம் பார்வையற்றோர் தடைகள் மற்றும் படிக்கட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இது பயனாளருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, ஒலி மூலம் எச்சரிக்கையும் செய்கிறது.

    தங்களது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இந்த கருவிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த கருவிகள் பார்வையற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

    அரசு பள்ளி மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு, பிற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாடகி இசைவாணி, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். வாராகி மந்திராலயத்தின் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கல்லாறு அகத்தியர் பீடத்தின் சுவாமிகள் சரோஜினி மாதாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்ப சுவாமி குறித்தும், ஐயப்ப பக்தர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் கல்ச்சுரல் கிளப் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    • வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள்.
    • அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும்.

    கோவை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 3 மாத படிப்பு முடிந்து லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து மாலையில் அவர் விமானம் மூலம் கோவை வந்தார். சென்னை மற்றும் கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    லண்டனில் இருந்து திரும்பியதும் முதல் நிகழ்ச்சியாக கோவையில் நடந்த வாய்ஸ் ஆப் கோவை மாநாட்டில் பங்கேற்று பேசினார். மாநாட்டில் அவர் சர்வதேச மற்றும் இந்திய அரசியல் பார்வை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அண்ணாமலை பேசியதாவது:-

    நல்லதை நல்லது என்று சொல்லவும், கெட்டதை கெட்டது என்று சொல்லி சுட்டிக்காட்டவும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு தொடங்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் கூட மக்களின் குரலாக இருக்க வேண்டும்.

    தன்னார்வ அமைப்பு கள் உங்கள் குரலாக ஒலிக்கும்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. உலக அரசியல் மிக முக்கியம். ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வு, நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    அமெரிக்காவில் வெற்றி பெற்ற டிரம்ப் பதவியேற்றவுடன் சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள 1.20 கோடி பேரை வெளியேற்றப் போவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இதுவும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பா.ஜ.க. சார்பில் 2020 அக்டோபர் முதல் அசாம் மாநிலத்தில் 37 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.830 தரப்படுகிறது. தி.மு.க. மகளிர் உதவித்தொகை தரும் முன்பே அசாமில் கொடுக்க தொடங்கி விட்டோம்.

    இந்த ஆண்டு மார்ச் முதல் சத்தீஸ்கரில் 70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1000, மகாராஷ்டிராவில் ஜூலை முதல் 1.70 லட்சம் தாய்மார்களுக்கு ரூ.1500, ஒடிசாவில் செப்டம்பர் முதல் 80 லட்சம் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடி ஆட்சியில் 40 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிகடன், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    மோடி அரசு, உள்கட்டமைப்புக்கு ரூ.48 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. எல்லா மக்களுக்கும் எல்லாவித சலுகைகளும் வர வேண்டும் என நினைக்கும் அரசாக பா.ஜ.க. உள்ளது.

    ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை என்றாலும் அனைத்தும் இலவசம் என்கிறார் ராகுல்காந்தி. அப்படியென்றால் நாடு எப்படி முன்னேறும். அறிவு பூர்வ மக்கள் இருக்கும் இதுபோன்ற இடங்களில் அரசியல் சாராதவர்கள் பேசும் கருத்துகள், அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளாக மாறும் வாய்ப்புள்ளது.

    மக்களுக்கு பயன்படும் அரசியல் பேச வேண்டும். அதை பேசுவதில்லை. ஆக்கப்பூர்வ முறையில் மக்களிடம் கருத்து கேட்கும் அரசு தமிழகத்தில் இல்லை.

    கோவை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. வெட்கிரைண்டர் உற்பத்தியில் தலைநகராக கோவை இருந்தது. தற்போது அது அகமதாபாத் நகராக மாறி விட்டது. கோவையின் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லை. விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் தர இழுத்தடிக்கின்றனர். அறிவாளிகளை அடிமை வாதிகளாக மாற்றும் அரசியல் நிலவரம் இங்கு இருக்கிறது.

    லண்டன் அருங்காட்சியகத்தில் 67 லட்சம் பொருட்கள் உள்ளன. அதில் டைனோசர் எலும்பு முதல் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பொக்கிஷங்கள் வரை உள்ளன. நம் பாரம்பரிய, கலாசாரம் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. கலாசாரத்தை மீட்டெடுக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    உலகம் முழுவதும் நமது கலாசாரம் சார்ந்த வேர்களை கொண்டுவர வேண்டும். அதை பிரதமர் மோடி மீட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இருந்து 640 புராதன பொருட்களை மோடி அரசு மீட்டுள்ளது.

    அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க இளைஞர்கள் சபதம் ஏற்க வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இருந்து இயற்கையோடு இணைந்து வாழும்போது தான் அறிவு சார்ந்த விஷயங்கள் நடக்கும். நடுத்தர மக்கள் அறிவுசார்ந்த விஷயங்களை பேச வேண்டும். தமிழக அரசியலை மாற்றும் வலிமை நடுத்தர மக்களின் குரலுக்கு உண்டு.

    கேள்வி கேட்டால் உங்களிடம் வர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துங்கள். அவர்கள் தானாக உங்களிடம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவை கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.
    • நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.

    கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் கொங்கு திருமண உணவு திருவிழா நடைபெற்றது.

    இந்த உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

    இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் உணவு திருவிழாவில் திரண்டுள்ளனர். ஆனால் ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் ஒவ்வொரு உணவையும் வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றதே இந்தக் குழப்பங்களுக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர். 

    • கழிவறையை சுத்தப்படுத்தும் பிரஸ்சில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
    • செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன.

    நேற்று கழிவறைக்கு சென்ற பெண்நர்சுகள், கழிவறையில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா காமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் செய்தனர். அவரும், டாக்டர்களும் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேனா காமிரா இருந்ததை உறுதி செய்தனர்.

    பின்னர் அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு பயிற்சி ஆர்த்தோ டாக்டராக பணியாற்றும் வெங்கடேஷ் (வயது 33) என்பவர் கழிவறையில் பேனா கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெங்கடேஷ் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கைதான டாக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த இவர் பட்ட மேற்படிப்புக்காக கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சபல புத்தியால் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கேமரா பொருத்தி போலீசில் சிக்கிக் கொண்டார். கழிவறையில் காமிரா இருந்ததை நர்சுகள் பார்த்து முதலில் வெங்கடேசிடம் தான் தெரிவித்துள்ளனர்.

    உடனே அவர் கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்துவிட்டு விசாரிப்பதாகக் கூறி இருக்கிறார். பிரச்சனை பெரிதானதும் வெங்கடேசும் அங்கு சென்று விசாரிப்பது போல் நடித்துள்ளார்.

    ஆனால் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வெங்கடேஷ் கழிவறைக்கு சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பேரிலேயே அவரை போலீசார் பிடித்தனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வாயிலாக பேனா கேமராவை வெங்கடேஷ் வாங்கியிருக்கிறார். அதனை யாருக்கும் தெரியாமல் கழிவறையில் மறைத்து வைத்துள்ளார்.

    அந்த கேமராவில் பதிவான காட்சிகளை செல்போனில் பார்த்து ரசித்துள்ளார். ஆனால் கேமரா வைத்த சில நாட்களிலேயே சிக்கிக் கொண்டார்.

    அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் இப்படி செய்தாரா அல்லது பணியாற்றிய வேறு இடங்களில் இடங்களிலும் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக அவரது செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் இழிவான செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • தொழில் அதிபரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

    இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர். பயணிகள் அனைவரையும் மற்றும் அவர்களது உடைமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதன்பின்னர் பயணிகள் விமானத்தில் ஏறினர். அப்போது இந்த விமானத்தில் பயணிப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு ஒருவர் வந்தார். அவர் கையில் கைப்பை வைத்திருந்தார்.

    விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் அவரை சோதித்து, விட்டு அவர் கையில் வைத்திருந்த கைப்பையும் சோதனை செய்தனர்.

    அதில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அந்த துப்பாக்கியில் 2 குண்டுகள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான பாதுகாப்பு படை போலீசார், உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்களும் விரைந்து வந்து, அந்த நபரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அவரிடம் துப்பாக்கியை எதற்காக எடுத்து வந்தீர்கள். எந்த ஊர், எதற்காக கோவைக்கு வந்தீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் என்பது தெரிய வந்தது. இவர் சொந்தமாக கேரவன் வாகனம் வைத்துள்ளார்.

    அந்த வாகனத்தை சர்வீஸ் விடுவதற்காக கோவைக்கு வந்துள்ளார். வாகனத்தை சர்வீஸ் விட்டு விட்டு, மீண்டும் சென்னை செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

    சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, தான் எப்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கியையும் தவறுதலாக எடுத்து வந்தது தெரியவந்தது. துப்பாக்கிக்கான லைசென்சும் அவரிடம் இருந்தது.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை போலீசார், தொழில் அதிபரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது.
    • காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில் நான் அரசியல் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டார்களை பார்த்ததும் பலர் பயந்து விட்டார்கள் என தெரிவித்தார்.

    தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என்று பெருமிதப்படுத்திக் கொண்ட சீமானின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில் வருமாறு:-

    சூப்பர் ஸ்டார் பட்டம் அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும். அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தான். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது.

    காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
    • அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.

    லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதன்படி, லுலு சூப்பர் ஃப்ரைடே மற்றும் லுலு பியூட்டி திருவிழா, அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது. 

    லுலு சூப்பர் ஃப்ரைடே: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை

    எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளில் ஆச்சரியமூட்டும் தள்ளுபடியுடன் உங்கள் விடுமுறை ஷாப்பிங்கைத் தொடங்குங்கள்.

    அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதற்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசுகளைக் கண்டறிவதற்கும் இது சரியான வாய்ப்பு.

    தேதி: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை.

    சலுகைகள்: பல்வேறு வகைகளில் 50% தள்ளுபடி வரை சலுகை.

    லுலு பியூட்டி திருவிழா: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை 

    தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான பொருட்களுக்கு பிரத்யேக சலுகைகளுடன் அழகு சாதணங்களை அள்ளுங்கள்.

    தேதி: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை

    சலுகைகள்: அழகு சாதனப் பொருட்களில் 50% வரை தள்ளுபடி.

    பியூட்டி திருவிழா போட்டிகள்: டிசம்பர் 7

    டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் லுலு பியூட்டி ஃபெஸ்ட் கோ கிளாம் போட்டியில் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். உற்சாகமான சவால்களில் பங்கேற்று, அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

    நிகழ்வு தேதி: டிசம்பர் 7

    போட்டிகள்:

    * மெஹந்தி போட்டி: அற்புதமான மெஹந்தி வடிவமைப்பை உருவாக்குங்கள்.

    * நெயில் ஆர்ட்: உங்கள் நகத்தை படைப்பாற்றலுடன் பெயிண்ட் செய்யுங்கள்.

    * ஐலைனர் சவால்: தலைசிறந்த ஐலைனர் வடிவமைப்புகளை உருவாக்கவும்.

    நிகழ்வு தேதி: டிசம்பர் 7

    தகுதி: 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்

    பதிவு: நவம்பர் 28 ஆம் தேதி முதல் லுலு வாடிக்கையாளர் சேவை மேசையில் தொடங்குகிறது.

    இந்த விழாக்காலத்தை லுலு ஹைப்பர் மார்க்கெட்டுடன் உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றவும். மேலும் விவரங்களுக்கு லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூரின் சமூக ஊடக சேனலை பின்பற்றுங்கள்.

    • சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
    • சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் அ.தி.மு.க. மாநில நிர்வாகியான சஜீவனிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். எனவே, அவரிடம் கொடநாடு வழக்கு மற்றும் எஸ்டேட் தொடர்பான விவரங்களை பெற முடிவு செய்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பினர்.

    அதனை ஏற்று இன்று சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது.
    • நாம் தமிழர் கட்சியில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.

    தி.மு.க.வில் இணைந்தவர்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    அதனை தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என நினைத்தோம்.

    அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு சரியான, வலுவான தலைமை உள்ள தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்டுள்ளோம்.

    தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது சிரித்த முகத்துடனான பண்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது எங்களையும் ஈர்த்துள்ளது.

    அதன் காரணமாக நாங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட பலர் உள்ளனர். 

    • கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்ஒருபகுதியாக கடந்த ஜூன் மாதம் விமான கோபுரம், ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 65 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்துக்கு ரூ.35 லட்சம் செலவிலும், மற்ற பகுதிகளுக்கு ரூ.25 லட்சம் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.

    கடந்த 14-ந்தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜ கோபுரம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், கருவறை விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் ஆகியவை மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு நா.மூ.சுங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தயார்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில் ராஜகோபுரத்துக்கு 4 அடியில் 7 கலசங்கள், கருவறை விமானத்துக்கு 3 அடியில் 3 கலசங்கள், திசை கோபுரங்களுக்கு 3 அடியில் 10 கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில் 32 என மொத்தம் 52 கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் மதுரை ஸ்தபதி கார்த்திக் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மொத்தம் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 12-ந்தேதி காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×