என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு மதுரையில் இருந்து 52 கலசங்கள் வரவழைப்பு
- கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்ஒருபகுதியாக கடந்த ஜூன் மாதம் விமான கோபுரம், ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 65 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்துக்கு ரூ.35 லட்சம் செலவிலும், மற்ற பகுதிகளுக்கு ரூ.25 லட்சம் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.
கடந்த 14-ந்தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜ கோபுரம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், கருவறை விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் ஆகியவை மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு நா.மூ.சுங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தயார்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் ராஜகோபுரத்துக்கு 4 அடியில் 7 கலசங்கள், கருவறை விமானத்துக்கு 3 அடியில் 3 கலசங்கள், திசை கோபுரங்களுக்கு 3 அடியில் 10 கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில் 32 என மொத்தம் 52 கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் மதுரை ஸ்தபதி கார்த்திக் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மொத்தம் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் 12-ந்தேதி காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கோவில் கலசங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.






