search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lulu Market"

    • வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
    • வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    தமிழக அரசு அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் லுலு வணிக குழுமத்தை தமிழகத்தில் மார்க்கெட் அமைக்க அனுமதித்துள்ளது.

    இதன்படி கோவையில் லுலு மார்க்கெட் கடந்த மாதம் திறக்கப்பட்டது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் லுலு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    சிறு வணிகர்களுக்கு சவாலாக உருவாகி உள்ள லுலு மார்க்கெட்டை விரட்டியடிப்போம் என்று தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கூறி வருகின்றன.

    இந்நிலையில் லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டை விட்டு விரட்டும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிட போவதாக போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னின்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலையில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகையிட வணிகர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலும் நடந்தது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் பெருங்குடி சவுந்தரராஜன், போராட்ட கள அமைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச் செயலாளர் கே.சி.ராஜா மற்றும் மின்னல் எச்.ஸ்டீபன், முத்து ரமேஷ், ஆலந்தூர் பி.கணேசன், சங்கரலிங்கநாதன், செல்வகுமார், எஸ்.ஆர்.பி.ராஜா, மாரீஸ்வரன், சைதை ஜெயராஜ், வேளச்சேரி செல்வராஜ், மகாராஜா உள்பட 1000-க்கும் மேற்பட்ட வணிகர்களை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.

    வணிகர்களின் போராட்டத்தையொட்டி தலைமை செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • போராட்டத்திற்கு த.வெள்ளையன் தலைமை தாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
    • ஆடி வருவதற்குள் ஆற்றல் மிகு முதல்வரிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் லுலு மார்க்கெட் வருவதற்கு வணிகர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த போது லுலு மார்க்கெட்டை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் லுலு மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வணிகர்கள் அமைப்பினர் ஒன்று சேர்ந்து லுலு மார்க்கெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் நிறுவன தலைவர் ஆர். சந்திரன் ஜெயபால் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ. முத்துக்குமார், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த. ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் எம். மாரித்தங்கம், மின்னல் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது செயலாளர் சௌந்தரராஜன் (எ) ராஜா அனைவரையும் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச் செயலாளர் கே. சி. ராஜா நன்றி கூறினார்.

    தமிழ்நாட்டின் வணிகர்கள் அந்நிய நிறுவனமான லுலு மார்க்கெட்டை தமிழகத்தில் திறக்கக் கூடாது என பல போராட்டங்கள் நடத்தியதையும் 2022 மே 5-ந்தேதி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட லுலு மார்கெட் எதிர்ப்பு மாநாடு நடத்தியதையும், வணிகர்ளைப் பற்றி துளிக்கூட கவலைப்படாமல் இப்போது கோவையில் லுலு மார்க்கெட்டை திறக்க அடிகோலிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

    கோவையில் திறக்கப்பட்ட அந்நிய லுலு மார்க்கெட்டை மூடிட போராட்டங்கள் நடத்த தமிழக அனைத்து வணிகர் சங்கங்களும் கூட்டாக போராட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை - தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு - தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் ஆகிய வணிக அமைப்புகள் சம்மதம் தெரிவித்து அந்நிய லுலு மார்க்கெட்டை எதிர்த்து போராட 11 பேர் கொண்ட போராட்டக்குழு அமைக்க தீர்மானித்து அதன்படி த. வெள்ளையன், அ. முத்துக்குமார், ஆர். சந்திரன் ஜெயபால், கொளத்தூர் த.ரவி, எஸ். சௌந்தர்ரராஜன் (எ) ராஜா, எம். மாரித்தங்கம், 5. பீர் முகமது, கே. தேவராஜ், கே. சி. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். போராட்டத்திற்கு த.வெள்ளையன் தலைமை தாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    கோவையில் துவங்கப்பட்ட அந்நிய லுலு மார்க்கெட் மூடப்படும் வரை கோவையில் தொடர் முற்றுகை போராட்டங்கள் நடத்துவது என்றும் அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி திங்கள் கிழமை, 50,000 வணிகர்கள் கலந்து கொள்ளும் முதல் முற்றுகை போராட்டம் நடத்துவது.

    படித்த வேலை கிடைக்காத இளைஞனின் கடைசி புகலிடம் வணிகம் தான். அந்த வணிகத்தை காப்பாற்ற சொந்த நாட்டின் மக்களின், இளைஞனின், பசி, பிணி தேவையறிந்து கோவையில் திறந்த லுலு மார்க்கெட்டை உடனே மூடிட தமிழ்நாடு வணிகர்கள் முதல்வரை கேட்டுக்கொள்வது.

    போராட்டம் நடத்த இன்னும் ஒரு மாதம் உள்ளது. ஆடி வருவதற்குள் ஆற்றல் மிகு முதல்வரிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.

    என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×