என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார்.
    • 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 32). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    மத்திய ஜெயில் தொழிற்கூடத்தில் பணியாற்றி வரும் யுகஆதித்தன் கையில் கிடைக்கும் சாதனங்களை கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் உடையவர்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார். இது சிறை அதிகாரிகள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

    இந்த நிலையில் யுகஆதித்தன் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


    கோவை மத்திய சிறையில் சமையற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆட்டோவை சோதனை பயன்பாடு முடிந்த பிறகு ஜெயில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களில் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் அமர்ந்து செல்லும்வகையில் நுழைவுவாயிலில் இருந்து பார்வையாளர் அறை வரை பயன்படுத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    ஜெயில் கைதி யுகஆதித்தன் உருவாக்கி உள்ள சோலார் ஆட்டோவின் மீது சூரியஒளி மின்உற்பத்திக்காக தகடு பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆட்டோவில் டிரைவர் இருக்கைக்கு அடியில் பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மேற்கண்ட ஆட்டோவில் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால் 200 கி.மீ. வரையிலும் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதில் டிரைவர் உள்பட 8 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்.

    மேலும் எல்.இ.டி. விளக்கு, ஹாரன், ஹேண்ட் பிரேக், டேப் ரிக்கார்டர் போன்ற வசதிகளும் உள்ளன.

    ரூ.1.25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ஆட்டோ தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
    • திமுக வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான்.

    திமுகவை எதிர்க்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " திமுக வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் என்டிஏ கூட்டணிக்கு வரலாம்" என்றார்.

    • தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் வசிப்பவர் செந்தில் (40). இவர் அதே ஊரில் தனது வீட்டின் முன்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    செந்தில் இல்லாத சமயங்களில் இந்த கடையை அவரது மனைவி மோனிகா (35) கவனித்து வந்தார். நேற்று மதியம் மோனிகா கடையில் இருந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதாகவும், குடிக்க தண்ணீர் கொடுக்குமாறும் கேட்டார். உடனே மோனிகா தண்ணீர் எடுப்பதற்காக பின்புறம் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அந்தசமயத்தில் தண்ணீர் கேட்ட நபர், கல்லாபெட்டியில் இருந்த பணத்தை லாவகமாக திருடி தப்பிச் சென்று விட்டார்.


    மோனிகா தண்ணீர் எடுத்து வந்தபோது அங்கிருந்த நபரை காணவில்லை. பின்னர் தனது கடையின் கல்லாப்பெட்டியை சோதித்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதுபற்றி மோனிகா தனது கணவர் செந்திலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடைக்கு நேரில் வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.

    தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் அடையாளம் தெரியாமல் இருக்க முக கவசம் அணிந்து வந்துள்ளார். செல்போன் கடையை பல நாட்களாக நோட்டமிட்ட நபர், தண்ணீர் கேட்பது நடித்து மோனிகாவின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து செந்தில் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திருடிய மர்ம நபர் அதே பகுதியைச் சேர்ந்தவரா, அல்லது வேறு எங்காவது இருந்து வந்து கைவரிசை காட்டினாரா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    • ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ள ஒரு கைதி நேற்று மாலை டவர் பிளாக் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசிடம், நான் மேலதிகாரியை பார்க்க வேண்டும் என கூறினார். இதனை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை மீண்டும் அறைக்குள் செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது அவருடன் மேலும் ஒரு கைதியும் சேர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர்கள் ஜெயிலில் இருந்து தப்ப முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிறை வார்டன்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து கைதிகளை சமரசப்படுத்தி மீண்டும் சிறை அறையில் அடைந்தனர்.

    இதற்கிடையே கோவை சிறைச்சாலையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் அருகே உள்ள முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீம் (வயது 32) என்பதும், அவருக்கு உடந்தையாக இருந்து போலீசாரை தாக்கியது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புதுத் தெருவை சேர்ந்த அப்துல் சலீம் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக ஆசிப், அப்துல்சலீம் ஆகியோர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
    • பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.

    கோவை:

    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்கள் என்னென்ன ஊருக்கு செல்லும், எந்த வழித்தடம் வழியாக செல்லும் என்ற விவரங்கள் பக்கவாட்டு பகுதியில் எழுதப்பட்டுஇருக்கும். ஆனாலும் எழுத படிக்க தெரியாதவர்கள் கிராமங்களில் இருந்து வருவதால், அவர்களுக்கு பஸ்கள் எந்த ஊர்களுக்கு செல்கின்றன என்பது பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இல்லை.

    எனவே கண்டக்டர்கள் அந்த பஸ் செல்லும் ஊர்களின் பெயரை உரத்த குரலில் கூறி பயணிகளை அழைப்பார்கள். இந்த நடைமுறை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.

    அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

    இருப்பினும் பஸ் நிலையத்திற்குள் வண்டி நுழைந்ததும் கண்டக்டர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவை மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் குளிர்சாதன மற்றும் சொகுசு பஸ்களில் சம்பந்தப்பட்ட வாகனம் செல்லும் வழித்தடம் மற்றும் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி வழங்கப்பட்டு உள்ளது.

    சிறிய ரேடியோ போல இருக்கும் மேற்கண்ட சாதனம் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதில் சம்பந்தப்பட்ட பஸ் செல்லும் வழித்தடம், எந்தெந்த ஊர்களில் நிற்கும் என்பவை பற்றிய விவரங்கள் குரல் வழியில் பதிவு செய்யப்படுகின்றன.

    பஸ் நிலையங்களுக்குள் வண்டி வந்ததும் மேற்கண்ட கருவியை வண்டியின் முன்பகுதியில் கண்டக்டர்கள் எடுத்து வைத்து சுவிட்சை போட்டு விடுகின்றனர்.

    அதன்பிறகு தானாகவே கருவியில் இருந்து குரல்வழிப்பதிவு ஒலிபரப்பாக தொடங்கி விடுகிறது. சேலம், ஈரோடு, கரூர் என பஸ் இயக்கப்படும் ஊர்களின் பெயரை மாறி, மாறி ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறது.

    இதன் மூலம் பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.

    அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் நடைமுறைக்கு வந்து உள்ள இந்த குரல் ஒலிபரப்பு சாதனம், கண்டக்டர்களின் பணிப்பளுவை குறைக்கும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து கோவை அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:-

    பஸ்சில் ஏறுவோருக்கு டிக்கெட் போடுவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, பயணிகளை பத்திரமாக ஏற்றி இறக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் ஏகப்பட்ட சத்தம்-கூச்சல்களுக்கு மத்தியில் ஊர்கள் பெயரைக் கூறி பயணிகளை கூவி கூவி அழைத்து வந்தோம். இதனால் எங்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. தற்போது தானியங்கி மைக் ஒலிபரப்பு சாதனம் எங்களின் பணிப்பளுவை வெகுவாக குறைத்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. பயணிகளும் மகிழ்ச்சியுடன் பஸ்சில் ஏறி பயணிக்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது.
    • 7 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன.

    தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்று வர்ணங்கள் தீட்டப்பட்டு கோவில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது.

    இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் யாக சாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், திருமுறை பாராயணம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் நடக்கிறது. அன்று 9.15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூல ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடக்கிறது.


    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    12-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்ததும் 7 டிரோன்கள் மூலம் பக்தர்கள் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.

    பக்தர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள், 3 ஆம்புலன்சுகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

    மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வர வசதியாக இன்று முதலே ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் கோவை, பொள்ளாச்சி, உடுமலை உளளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
    • புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தர்ஷனா என்ற பிரியா(29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு மணிகண்டன் ரூ.6½ லட்சத்துக்கு புதிதாக கார் வாங்கினார். அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் செலுத்தினார். மீதமுள்ள பணத்துக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் தவணை தொகை செலுத்த வேண்டும்.

    ஆனால் அந்த தவணை தொகையை மணிகண்டன் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அவர் 20 மாதத்துக்கும் மேல் தவணை தொகையை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள், தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் காரை பறிமுதல் செய்வோம் என்று கூறினர்.

    இதன்படி அந்த நிதிநிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெகதீஷ்(45), சுரேஷ், கதிரவன் ஆகிய 3 பேரும் மணிகண்டனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது மணிகண்டனும், அவரது மனைவியும் தங்களிடம் பணம் இல்லை என்றனர்.

    இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் தங்களிடம் இருந்த சாவியை வைத்து அந்த காரை எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஓடிவந்த மணிகண்டன் திடீரென காரை ஸ்டார்ட் செய்து, அங்கிருந்து ஓட்டிச்சென்றார். ஜெகதீஷ் உள்பட நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் காரை நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... என்று கூறியபடி பின்னால் ஓடினர். இருந்தாலும் மணிகண்டன் நிறுத்தாமல் காரை ஓட்டிச்சென்று விட்டார்.

    அப்போது அங்கு நின்றிருந்த பிரியா, தான் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த நாயை அவிழ்த்து விட்டதுடன், ஜெகதீஷ் உள்பட 3 பேரை பார்த்து அவர்களை விடாதே, கடி.. கடி.. என்று கூறினார். உடனே அந்த நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.

    நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த ஜெகதீசை அவர்கள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.

    • விமான நிலையத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
    • கோவையில் நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

    கோவை:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (6-ந் தேதி) நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், வால்

    பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பஸ்நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதேபோல ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    ரெயில் நிலைய நுழைவு வாயில்களில் உள்ள மெட்டல் டிடெக்டர் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. ரெயில்களிலும், ரெயில் தண்டவாளங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனையில் ஈடுபடுகிறார்கள். ரெயில்களில் வரும் பார்சல்களை மோப்பநாய் கொண்டு போலீசார் சோதிக்கிறார்கள். விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    விமான நிலையத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் முக்கிய கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

    • கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
    • தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை விமான நிலையத்துக்கு நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவர் ஆந்திர மாநிலம் கண்டசாலா பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (வயது 36) என்பதும், அவர் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்தது. மேலும் வேறு ஒருவரின் முகவரியில் புகைப்படத்தை ஒட்டி போலி பாஸ்போர்ட் தயாரித்து சிங்கப்பூருக்கு சென்று வீட்டு வேலை பார்த்த விவரமும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவரை விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரி கிருஷ்ணஸ்ரீ, பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி நடத்திய விசாரணையில் கனகதுர்காவிற்கு போலி பாஸ்போர்ட் எடுக்க, நாகேஸ்வரராவ் என்பவர் உதவி செய்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டதாக கனகதுர்காவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது.
    • எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.

    ஆனால் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி அவர் ஐ.பி.எஸ். ஆனார். தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும். எங்கள் கட்சியை குறை சொல்லத்தான் ஐ.பி.எஸ். படித்தாரா? மோதுவோம் என்றாகி விட்டது. வா மோதுவோம்.

    நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.

    தமிழகத்தில் இதுவரை பாதித்த புயல் பாதிப்புகளுக்கு, மத்திய அரசு இதுவரை உதவி செய்யவில்லை. மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துக் கொண்டு, பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவுவது இல்லை. குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுபற்றி கேள்வி கேட்டால் ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள்.

    அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கேவலமானது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் உணவை உறுதி செய்ய வேண்டும். உணவு, உடை என்பது அவரவர் உரிமை. மாடு புனிதம் என்றால், எதற்காக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
    • ஜெகதீஷ் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 45). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பணியாற்றும் நிறுவனத்தில் வெள்ளலூர் மகாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மனைவி தர்ஷனா என்ற பிரியா (29) கார் லோன் வாங்கி இருந்தார்.

    இந்தநிலையில் தர்ஷனா சரியாக மாத தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. 20 மாதங்களாக பணம் கட்டாததால் இதுகுறித்து கேட்பதற்காக ஜெகதீஷ், அவருடன் வேலை பார்க்கும் சரவணன் மற்றும் சுரேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு தர்ஷனாவின் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் நின்ற காரை ஜெகதீஸ் மற்றும் ஊழியர்கள் பறிமுதல் செய்ய முயன்ற போது காரை தர்ஷனாவின் கணவர் மணிகண்டன் வெளியில் ஓட்டி செல்ல முயன்றுள்ளார். காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது தர்ஷனா அவர்கள் வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாயை அவிழ்த்து ஏவி விட்டுள்ளார். பாய்ந்து சென்ற அந்த நாய் ஜெகதீசனை பல இடங்களில் கடித்தது. இதில் அவரது கால் மற்றும் அடிவயிறு உள்ளிட்ட 12 இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஊழியர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து ஜெகதீஷ் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தர்ஷனாவை கைது செய்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    கோவை:

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டார். போராட்டத்தில் கோவை மாநகர் மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி, வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதியை மீறி இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தையொட்டி அங்கு காட்டூர் துணை கமிஷனர் கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    முன்னதாக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவின் ஆட்சி எதிர்க்கட்சிகள் மற்றும் ராணுவத்தின் சதியால் அகற்றப்பட்டுள்ளது. அங்கு புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    சிறுபான்மை மக்களான இந்துக்கள் அதிகளவில் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள், பொருட்கள், கோவில்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இஸ்கான் நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். அவரை ஜாமினில் எடுக்க முயன்ற வக்கீல் கொல்லப்பட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அண்டை நாடான வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களை ராகுல் காந்தியோ, மம்தா பானர்ஜியோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் வங்காள தேச இந்துக்களின் பாதுகாப்புக்காக போராட அனுமதி கேட்டோம். அதற்கும் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதேபோல் பொள்ளாச்சியில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் குண்டுக்கட்டாக ஏற்றி கைது செய்தனர்.

    30 பெண்கள் உள்பட மொத்தம் 155 பேர் கைதானார்கள். 

    ×