என் மலர்
கோயம்புத்தூர்
- 3 பேரின் முகவரியையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- கருமத்தம்பட்டி போலீசார் மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி பைக் ரேசில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும், சம்பவ இடத்திற்கு சென்று, அதிவேகமாக வாகனத்தை இயக்கிய வாலிபர்களை பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன் மற்றும் தமிழ் நாதன் என்பதும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரின் முகவரியையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர்கள், தாங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றதையும் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த கருமத்தம்பட்டி போலீசார் மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வாலிபர்களின் பெற்றோர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததால் 3 பேரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
இதற்கிடையே வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதும், போலீஸ் வளாகத்தில் ரிலீஸ் பதிவிட்டு அதை பகிர்ந்ததும் தவறு என்பதை உணர்ந்துள்ளோம். எங்களை பார்த்து யாரும் இப்படி செய்யாதீர்கள் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
- 20-க்கும் மேற்பட்டோர் வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர்.
- போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
கோவை:
தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ந் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது.
இந்த திரைப்படத்தில், இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். இல்லையென்றால் அந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் அறிவித்தார்.
கோவை-சத்தி சாலையில் பிரபலமான மால் ஒன்று உள்ளது. இந்த மாலில் உள்ள ஒரு தியேட்டரில் ஜாட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதனை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு அந்த வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர். அவர்கள் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கூறி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.
கோவை:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.
பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.
நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
- கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடல் முழுவதும் நகைகள் அணிந்து நடமாடும் நகை கடை போல் வலம் வருவது இவரது வாடிக்கை. இதனால் இவர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராக உள்ளார்.
இந்தநிலையில் வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதற்காக கோவை வந்து பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் பயங்கர ஆயுதங்களுடன் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்வதற்கு முன் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்ய போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தனிப்படையினர் நேற்று இரவு முதல் செல்வபுரம் உள்பட மாநகரம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஓட்டல்கள், லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் வரிச்சியூர் செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ பிடிபடவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்கவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். வரிச்சியூர் செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யுங்கள், அப்போது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றாலோ அல்லது அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலோ அவர்களை சுட்டுப்பிடியுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கோவை காந்திபுரம், உக்கடம் பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவை போலீசார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜான் ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- கைதான ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37).
இவர் காந்திபுரம் பகுதியில் செயல்பட்ட கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் போதகராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பாடல்களில் பாப் இசையை புகுத்தி பாடல்கள் பாடி வந்ததால் ஜான்ஜெபராஜ் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
இவர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெபக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ஜான்ஜெபராஜ் மீது கோவையில் 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் ஜான்ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான்ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான்ஜெபராஜ் மீது கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜான்ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜான்ஜெபராஜை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.
இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜான்ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனால் அவரை தேடி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.
மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று போலீசார் ஜான்ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.
இவ்வாறு ஜான்ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மூணாறு சென்று ஜான்ஜெபராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இன்று அவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதி வரை ஜெபராஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜான்ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார்.
- மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைதாகி உள்ளார். கேரள மாநிலம் மூணாறு அருகே பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
கோவை:
கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில், அரசு பஸ் மூலமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவ்வாறு ஒரு நாளும் நடைபெறாது. அரசு போக்குவரத்து கழகம் ஒரு போதும் தனியார் மயமாகாது.
அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11,000 புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் தற்போது இன்று புத்துயிர் பெற்று வருகிறது.
எனவே தனியார் மையம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்காக அவர்களுக்கு உயர பிரச்சனை காரணம் ஏற்பட்டபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு 10 சென்டிமீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.
எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோவை:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் நடைபெற்று என தினமும் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக நேற்று காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்தும் அந்த கும்பல் அதிர்ச்சியாகியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றனர்.
போலீசார் உடனடியாக 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 12 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தினமும் நடக்கும் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும், இவ்வளவு ரன் அடிக்கும், என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- அதிர்ச்சியான நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி ரமேஷை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ரமேஷ் (வயது 42) என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோவில் அடிவாரம் வந்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறிய, ரமேஷ் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கீழே 6-வது மலையில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடும் குளிர் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதைப்பார்த்ததும், அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.
இதுகுறித்து, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரமேசின் உடலை கைப்பற்றி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்துபோன ரமேசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இறந்துபோன ரமேசுக்கு திருமணமாகி ரேவதி (32) என்ற மனைவியும், 7 வயதிலும், 4 வயதிலும் இரு மகள்களும் உள்ளனர்.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
- கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூ ர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
கோவை சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறும்போது, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன என்றார்.
இன்று தொடங்கிய போராட்டமானது வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது.
- மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
- பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா செங்குட்டுப்பாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 5-ந் தேதி பூப்பெய்தி உள்ளார்.
தற்போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவியை வகுப்பறையில் தனியாக அமர செய்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவியின் பெற்றோர் கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 7-ந் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் அமர செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். தனது தாயாரிடமும் இது குறித்து தெரிவித்தார்.
கடந்த 9-ந் தேதியும் இதேபோன்று மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று, பள்ளி முதல்வரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு பள்ளி முதல்வர் சரியாக பதில் அளிக்காமல் மிரட்டல் தொனியில் பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குனர் வடிவேலும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
அப்போது மாணவியின் பெற்றோரிடம் பேசிய அதிகாரிகள் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
மேலும் இதுபோன்ற செயல்கள் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நெகமம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
- கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத்த வைத்த விவகாரத்தை அடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை செங்குட்டைபாளையம் சுவாமி சித்பவானந்தர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






