கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கல்: வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க உத்தரவு

இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கல்: வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க உத்தரவு
Published on

கோவை:

மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடல் முழுவதும் நகைகள் அணிந்து நடமாடும் நகை கடை போல் வலம் வருவது இவரது வாடிக்கை. இதனால் இவர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராக உள்ளார்.

இந்தநிலையில் வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதற்காக கோவை வந்து பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் பயங்கர ஆயுதங்களுடன் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்வதற்கு முன் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்ய போலீசார் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படையினர் நேற்று இரவு முதல் செல்வபுரம் உள்பட மாநகரம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஓட்டல்கள், லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் வரிச்சியூர் செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ பிடிபடவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்கவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். வரிச்சியூர் செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யுங்கள், அப்போது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றாலோ அல்லது அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலோ அவர்களை சுட்டுப்பிடியுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கோவை காந்திபுரம், உக்கடம் பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவை போலீசார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com