என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பவே பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி- வானதி சீனிவாசன்
- சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.
கோவை:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.
பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.
நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






