என் மலர்tooltip icon

    சென்னை

    • சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்திய ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,280-க்கும், ஒரு சவரன் 1,06,240-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450-க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 318 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

    15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

    14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    17-1-2026- ஒரு கிராம் ரூ.310

    16-1-2026- ஒரு கிராம் ரூ.306

    15-1-2026- ஒரு கிராம் ரூ.310

    14-1-2026- ஒரு கிராம் ரூ.307

    • கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

    பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக திருச்சி சென்னை NH சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நோக்கி வரும் கார்கள், பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பேருந்துகள் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

    சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதையடுத்து செங்கல்பட்டு டோல்கேட், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.
    • ஜன.26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

    சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஜன.26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஜன. 21, 23-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.

    ஜன.26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன.26, ஒத்திகை நடைபெறும் நாட்களான 21, 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

    அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயப்பேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    மயிலாப்பூா் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம்.

    மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே.சாலை.கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

    டாக்டா் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும். டாக்டா்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும்.

    காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆா்.எச். சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டா்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போா் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் விஜய் சென்னை திரும்பினார்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?' என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.

    அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ந்தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜராகிறார். இன்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    • பிக்பாஸ் சீசனில் சபரி இரண்டாம் இடம் பிடித்தார்.
    • விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடம்பிடித்தார்.

    சென்னை:

    நூறு நாட்களைக் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

    இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர்.

    இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர்.

    திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவித்தார் விஜய் சேதுபதி. சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே, கானா வினோத் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

    இந்த சீசனில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

    • தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் அறிவிப்புகள் போல கானல் நீர் அறிவிப்புகளாக மாறிவிடக் கூடாது.
    • காளைகளுக்கு சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம்.

    தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் அறிவிப்புகள் போல கானல் நீர் அறிவிப்புகளாக மாறிவிடக் கூடாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 தை மாதம் முடிவதற்குள் முதல் கட்டமாக இந்த ஆண்டின் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    அலங்காநல்லூர் பகுதியில், காளைகளுக்கு சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் அறிவிப்புகளையும் உடனடியாக அறிவித்தபடி உண்மையுடன் நேர்மையுடன் செயல்படுத்த வேண்டும்.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வங்கி அரசியலுக்காக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை இந்தாண்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    23-ந்தேதி கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    24-ந்தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 19-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 19-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது.
    • சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும்.

    இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.

    சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது.

    16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம்.
    • தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

    * புத்தக வாசிப்புக்காக பல சிறப்பான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

    * புத்தக வாசிப்பு மூலம் தமிழக இல்லங்களில் அறிவு தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * பழமைகளை பொசுக்கி தமிழகத்தை பண்படுத்தியது திராவிட இயக்கம்.

    * புத்தக திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் 4-வது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது.

    * மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம்.

    * தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

    * உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும்.

    * சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    * தமிழக அரசின் சார்பில் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் தேசிய அளவில் விருது வழங்கப்படும்.

    * செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும் என்றார். 

    • கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.
    • பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அப்போது அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து விஜயிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்த நிலையில், பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி அடுத்த நாட்களில் ஆஜராக விஜய் விலக்கு கேட்டு இருந்தார். இதை ஏற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், நாளை சி.பி.ஐ. விசாரணைக்காக ஆஜராக உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நட்சத்திர விடுதி ஒன்றில் விஜய் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!
    • தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?

    நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அஇஅதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

    எது ஒரிஜினல்? எது காப்பி?

    அம்மா மருந்தகம் ஒரிஜினல்- முதல்வர் மருந்தகம் காப்பி!

    அம்மா மினி கிளினிக் ஒரிஜினல்- மக்களைத் தேடி மருத்துவம் காப்பி!

    தாலிக்கு தங்கம் ஒரிஜினல்- அதை உல்டா செய்தது தானே புதுமைப் பெண் திட்டம்?

    இப்படி அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!

    மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!

    ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?

    மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அஇஅதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாக தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- என அறிவித்தோம்!

    மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய "டூப்" முதல்வர் ஸ்டாலினின் அரசு, வேறென்ன செய்து கிழித்தது?

    திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாயே, அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் லேட்டா தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் இன்று வரை, சொன்னபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறதா? தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?

    அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால்,

    ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு ஒன்று வந்தால், தான் கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி விட்டு, வேறொரு வேட்டிக்கு தாவி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளக் கூட தயங்காத இந்த ரகுபதி எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?

    இன்னொருவர் டி.ஆர்.பி. ராஜா. பாக்ஸ்கான் துணை கம்பெனி என்று சட்டமன்றத்திலேயே கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டியவர் தானே இவர்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி..." என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெச்சல்!

    நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே...

    இன்னும் 2 மாசம் தான்!

    Tic Toc Tic Toc...

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×