என் மலர்
சென்னை
- பிணையில் வருவதை "தியாகமாக" கருதும் இந்த "ஊழல் திலகங்களின்" ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?
- ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) தலைமை அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
இதுபோக, தி.மு.க.வினருடன் தொடர்புள்ள சாராய நிறுவனங்கள், பத்து ரூபாய் பாட்டில் புகழ் அமைச்சர் தியாகி பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் "கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்" தான் பதில்!
விஞ்ஞான ஊழலை நிறுவனமயமாக்கி, தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை வரும் வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் அரசு தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை முடக்கி, மக்களை நேரடியாக பாதிக்கின்ற ஊழல்களின் ஊற்றிடமான தி.மு.க.-வின் ஆட்சியில், அதுவும், ஊழல் செய்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிணையில் வருவதை "தியாகமாக" கருதும் இந்த "ஊழல் திலகங்களின்" ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?
10 ஆண்டுகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடன்கள், மக்கள் நலத் திட்டங்களாக தமிழ்நாடெங்கும் மிளிர, 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனோ, இத்தகைய ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்!
இவர்களுக்கான பதிலை 2026 களம் சொல்லும்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து இருந்தது.
அதன்படி, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் ஏறி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
- கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள்.
- தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்த நேற்று திட்டமிட்டனர். இதற்கிடையே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அங்கு தமிழிசை சவுந்தரராஜன் வந்து மக்களிடம் கையெழுத்து பெறும் பணியில் ஈடுபட முயன்றார். உடனே போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,
தமிழிசையின் கையெழுத்து இயக்கத்தை பற்றி சொல்வது என்றால், நேற்று அவர் நடந்துகொண்ட நடவடிக்கையை நிச்சயம் அவர் தந்தை குமரி அனந்தன் பார்த்திருந்தால் மிகுந்த வருத்தப்பட்டு இருப்பார். துயரம் அடைந்து இருப்பார்.
இவருக்கா போய் நாம் தமிழிசை என்று பெயர் வைத்தோம் என்று மிக மிக வருத்தத்தோடு இருந்து இருப்பார்.
கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த இல்லத்திற்கு சென்று வாங்கினார்கள். அவர்களை சுற்றி பா.ஜ.க.வை சார்ந்த 10 பேரை நிற்க வைத்துக்கொண்டு, ஊடகங்களில் அவர் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அவர் எண்ணி இருந்த பதவிகள் எதுவும் கிடைக்காததால், அந்த கையெழுத்து இயக்கத்தை அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த தோழர்களை வைத்து நடத்திக்கொண்டார்.
அதோடு அவர் காலாவதி என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருக்கிறார்.
காலாவதி ஆனவர் யார்? புதுச்சேரியில் காலாவதி ஆனவர், தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.
அவரை காலாவதி ஆக்குவதற்கும், அவர் சார்ந்த இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கும் தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில் தயாராக இருக்கிறார்கள் என்பதை அக்கா தமிழிசைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
- மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.
சென்னை:
இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள் என்று முதலமைச்சர் டேக் செய்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு வரவேற்பு பெற்று வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை கூட தி.மு.க.வால் நடத்த முடியவில்லை.
இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள். தி.மு.க.வின் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதணை உணராதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.
- இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதைப் பாடத்திட்டமாகக் கொண்ட ஒரு தனியார் CBSE பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.
இத்தனை ஆண்டு காலம் இவர்களின் இதுபோன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும். நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
http://puthiyakalvi.in இணையதளத்தில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்யவும் என கூறியுள்ளார்.
- எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20606) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20666) மாம்பலம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து 9-ந்தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி குருவாயூர் செல்லும் ரெயில் (16127) எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து 9-ந்தேதி திருச்செந்தூர் செல்லும் ரெயில் (20605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) 9-ந்தேதி 30 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
இதேபோல, ஏற்கனவே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்ட வந்தே பாரத் (20665), சார்மினார் (12759) பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 9-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
- தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
சென்னை:
2022-23-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களை சார்ந்து இருப்பதை குறைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த பூஞ்சோலைகள் உள்ளூர் மக்களுக்கு தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் இதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கமும் குறைகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.25 கோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிர்வாக ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியது.
ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 639 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் நுழைவுவாயில், நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த பூஞ்சோலைக்குள் தடிமரம், எரிபொருள், தீவனம், காய்-கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை நடவு செய்யப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக மாநில அரசினால் 83 மரகத பூஞ்சோலைகள் அமைக்க 2 கட்டமாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இதுவரை 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
தற்போது மேலும் 5 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 25 லட்சம் செலவில் திண்டுக்கலில் 5 பூஞ்சோலைகள், பெரம்பலூரில் 4 பூஞ்சோலைகள், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 3 பூஞ்சோலைகள், திருவண்ணாமலையில் 2 பூஞ்சோலைகள் என மொத்தம் 17 பூஞ்சோலைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
- பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது.
- 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
சென்னை :
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெப்பம் முன் கூட்டியே பதிவாகத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது. அந்தவகையில் ஈரோட்டில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), கரூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), மதுரை 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), சேலம் 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), திருப்பத்தூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என மொத்தம் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.
- நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவுடன் நிறைவடைகிறது.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
- ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
- சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும், 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள இந்த படையின் மண்டல பயிற்சி மையத்தில் இன்று நடைபெறுகிறது.
விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். விழாவில் அவர், ஜம்மு-காஷ்மீரில் 32 அறைகள் அடங்கிய சி.ஐ.எஸ்.எப்-ன் முகாம் அலுவலகம், கொல்கத்தாவில் ஆயுதங்கள் வைப்பிடம், நொய்டாவில் 240 வீரர்களுக்கான குடியிருப்பு, சிவகங்கையில் உள்ள 4-வது பட்டாலியன் பிரிவில் 27 அதிகாரிகள் தங்கும் விடுதி மற்றும் 128 வீரர்களுக்கான குடியிருப்பு, ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் அவர், காணொலி வாயிலாக, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சி.ஐ.எஸ்.எப். இயக்குனர் ஜெனரல் ஆர்.எஸ்.பாட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
- பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது.
- தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கையில் தெளிவாக இருக்கிறது.
ஒன்றியத்தில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நின்றது.
அப்போதெல்லாம், இந்தியை நுழையச் செய்யும் திட்டங்கள்தான் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழ்நாட்டின் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்தவில்லை.
பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது.
'இந்தி திவஸ்' கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பா.ஜ.க.வினரும் தெரிவிக்கிறார்கள்.
இதன் உள்நோக்கத்தைத் தமிழ்நாடு உணர்ந்திருப்பதால்தான் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டு மாணவர்களின் பெருமை மீது பொறாமை கொண்டுதான் பா.ஜ.க. வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்த அளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்குக் குறைவாக இருக்கிறார்கள்?
இதே வாதங்களை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆங்கில நெறியாளரிடம் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் - என் அன்பிற்குரிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வைத்தார்.
ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, அன்னைத் தமிழைக் காத்திடச் சூளுரைத்துள்ள தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியினர் முழுமையாக இணைந்து நிற்கிறனர். அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் மும்மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அந்தக் கட்சிகள் அனைத்திற்கும் என் நன்றி.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை. மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன், உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்!
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.
- ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தனியார் மதுபான நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. டாஸ்மாக் ஒப்பந்ததாரர் தலைமை அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கால்ஸ் மதுபான ஆலையில் நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.






