என் மலர்
சென்னை
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள்.
- தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி வருமாறு:-
தூத்துக்குடியில் இன்று 4-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரசாரம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
கேள்வி: ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது?
பதில்: தாமதம் எல்லாம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்து விட்டார்களா? யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களா? இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. நீங்கள் தான் (பிரபல பத்திரிகையாளர்கள்) அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
பிப்ரவரி 20-ந்தேதிக்கு பிறகுதான் தேர்தல் தேதியே அறிவிக்கப் போகிறார்கள். எனவே இப்போதே அவசரம் ஒன்றுமில்லை. தே.மு.தி.க. எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகம் உள்ளன. எந்த நேரத்தில் அந்த குழந்தையை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய நல்ல முடிவை எடுப்பேன்.
கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: எல்லா பக்கமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் தினமும் ஒரு செய்தியை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் தெளிவாக பல முறை கூறி உள்ளேன். உரிய நேரத்தில் நல்ல முடிவை நிச்சயம் எடுப்போம்.
கேள்வி: தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?
பதில்: அப்படியெல்லாம் ரகசியம் ஒன்றும் இல்லை. அதுபோல் எதுவும் இருந்தாலும் வெளிப்படையாகவே பேசி கூட்டணி அமைப்போம்.
கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: அதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருப்பதாக கூறுகிறார்கள். எதுவுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுதான் உண்மையாகும்.
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணியையும் அமைக்கலாம். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.
கேள்வி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. 2026-ம் ஆண்டில் நல்லது நடக்கும். நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். எனவே எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
- தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
- கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக களமிறங்கிய அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதா கட்சியும் வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க உள்ளன. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் சேர்ந்துள்ள நிலையில் பல்வேறு சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டி.டி.வி. தினகரன் மற்றும் பா.ம.க.வும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பது அதிரடி திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கட்சிகளோடு சேர்ந்து அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் திகழும் 10 கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர்ந்து இருப்பதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருப்பதாக அந்த கட்சியினர் கூறி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.
அ.தி.மு.க.வில் சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இதுபோன்று தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் கடந்த 10,12 ,13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்றது. இந்த நேர்காணலின்போது சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தகுதியான நபர்களை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்திருக்கிறார்.
இதன் பிறகு பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ஆகியவை இருந்ததால் நேர்காணல் உடனடியாக நடத்தப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 5-வது நாள் நேர்காணல் 24-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணலை நடத்தினார்.
இன்றைய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்ற பிறகு கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடனே வரவேற்றார்கள்.
இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
காலை 9.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வினரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.
இன்று மாலையில் திருவண்ணாமலை கிழக்கு திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் இதன் பிறகு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் மக்களை கவரும் வகையில் குறிப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யார் யார் என்பதை? எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ரகசிய சர்வே மூலமாக கண்டறிந்து வைத்துள்ளார். அதுபோன்ற நபர்களில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு துடிப்பான அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது நடைபெற்று உள்ளது முதல் கட்ட நேர்காணல் என்றும் அடுத்தடுத்து 2 அல்லது 3 நேர்காணல்களை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இப்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்கிற பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்காக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது போக 170 தொகுதிகளில் அ.தி.மு.க.வை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. குறி வைத்து உள்ள இந்த 170 தொகுதிகள் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று ஏற்பட்டால் 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு 150 தொகுதிகளுக்கு குறையாமல் அ.தி.மு.க. களமிறங்கும் என்று தெரிகிறது.
பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 17 தொகுதிகள், டி.டி.வி. தினகரனுக்கு 7 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதேபோன்று கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 இடங்கள் வரையிலும் சில கட்சிகளுக்கு ஒரு இடம் வரையிலும் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான தொகுதி பங்கீடு விரைவில் முடிவடைந்து எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.
இப்படி தொகுதி பங்கீடு முடிவடைந்ததும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.
- 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.
- எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்?
* 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.
* எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
* பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான்.
* பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
- தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* சோதனை எனக்கு புதிதல்ல சோதனையை வென்று வளர்ந்த என்னை எதிர்ப்போர் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்.
* அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
* என்னை சீண்டி பார்ப்பவர்கள் மனதுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர என்னை ஒன்றும் செய்ய முடியாது.
* தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.
* 5 ஆண்டுகளாக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு திட்டம் தீட்டி உழைத்திருக்கிறேன். உழைக்க காத்திருக்கிறேன்.
* தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான். தமிழ்நாட்டு மக்கள் மீது கூடுதலாக நம்பிக்கை உள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் முடிவு.
* உறுதியாக சொல்கிறேன்... தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும்.
* நாங்கள் தான் மீண்டும் வருவோம். மீண்டும் வருவோம். மீண்டும் மீண்டும் வெல்வோம் என்று கூறினார்.
இதையடுத்து சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
- குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* ரூ.1088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.
* அங்கன்வாடி உதவியாளர், சமையலர், உதவியாளர், தூய்மை பணியாளருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.
* அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியத்தொகை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* பணி நிறைவு பெறும் நாளில் தரப்படும் ஒட்டுமொத்தத்தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.
* முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி விண்ணப்பிதித 80,000 பேருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும்.
* உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வுத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
- பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.
- அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
அப்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.
* அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
* பணிக்காலத்தின் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறினார்.
- தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
- ஆளுநரின் பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
* நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்கள் நாங்கள்.
* அரசு தயாரித்த உரையை படிக்காத ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்.
* தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
* கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காரணத்தை சொல்லி உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார்.
* தமிழ்நாட்டு நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
* ஆளுநர் தான் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறார்.
* ஆளுநரின் பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக உள்ளது.
* 5 ஆண்டுகளாக மக்களுக்காக வாழ்ந்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
* தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* முக்கிய தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சியை ஒப்பிடும்போது குற்றச்செயல்கள் குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
* அதிக சுற்றுலா பயணிகள் வந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
* தமிழகத்தில் மதச்சண்டை, சாதி சண்டை, கும்பல் வன்முறை இல்லை என்று பேசினார்.
- மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர்.
- உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் பயில்கின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு தொடங்கியது. ஆளுநர் உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை வழங்க உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
* 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் சீரழிந்து இருந்தது.
* 5 ஆண்டு கால ஆட்சி முடிவுறும் நிலையில் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன்.
* மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதே எனது மகிழ்ச்சிக்கு காரணம்.
* இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை அண்ணாந்து பார்க்கின்றன.
* என்னுடைய இலக்கில் நான் வென்று விட்டேன்.
* தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும்போது எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவில் இருக்கும்.
* மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர்.
* மகளிர் உரிமை தொகை திட்டத்தில ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம்.
* உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் பயில்கின்றனர்.
* அரசியல் ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளோம்.
* 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
* ஆட்சி பொறுப்பேற்று 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.
* சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிக்கு வரும் சாலையில் உள்ள பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று முதல் மார்ச் 23-ந்தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
சென்னை:
சென்னையில் வருகிற திங்கட்கிழமை அன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடக்கும் பிரமாண்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைப்பார். இதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி நடக்கும் உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து நிகழ்ச்சிக்கு வரும் சாலைகள் உள்ள பகுதி, இதேபோல, கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிக்கு வரும் சாலையில் உள்ள பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு அருகிலுள்ள வான்வெளியைச் சுற்றி அல்லது வேறு வழியில் லேசர் கற்றை விளக்குகள், சூடான காற்று பலூன்கள் இணைக்கப்பட்ட பலூன் மற்றும் ஒளி உமிழும் பொருட்கள், பறக்கும் கிளைடர்கள் மற்றும் பிற பறக்கும் பொருட்களை வெளியிடுவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முதல் மார்ச் 23-ந்தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
- நேற்று தங்கம் விலை காலையில் உயர்ந்தும், மாலையில் குறைந்தும் காணப்பட்டது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இப்படியான விலை ஏற்றம் தங்கத்தை வாங்க நினைப்பவர்களுக்கு பெரிய 'ஷாக்' கொடுத்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் விலை காலையில் உயர்ந்தும், மாலையில் குறைந்தும் காணப்பட்டது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கும், கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,16,400-க்கும், கிராமுக்கு ரூ.14,550-க்கும் விற்பனையானது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ஏற்றத்தை வைத்து மட்டும் பார்த்தால், கிராமுக்கு ரூ.1,480-ம், பவுனுக்கு ரூ.11 ஆயிரத்து 840-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400
22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320
20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-1-2026- ஒரு கிராம் ரூ.345
22-1-2026- ஒரு கிராம் ரூ.340
21-1-2026- ஒரு கிராம் ரூ.345
20-1-2026- ஒரு கிராம் ரூ.340
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
- தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.
- திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில், தமிழகத்திற்கு 3 ரெயில்களும் அடங்கும்.
அதாவது நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காளம் நியூ ஜல்பாய்குரி, திருச்சி-நியூ ஜல்பாய்குரி, தாம்பரம்-சந்திரகாச்சி ஆகிய 3 ரெயில்களாகும்.
பிரதமர் மோடி நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி ஆகிய 3 வழித்தடங்களுக்கான அம்ரித் பாரத் ரெயில் சேவை மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே தொடங்கப்பட்டுள்ள அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 11 தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள், 8 உட்காரும் வசதி உடைய முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரெயில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் சென்டிரல், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.
இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பகல் 11.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மங்களூரு சென்றடையும். புதன்கிழமை மங்களூருவில் இருந்து காலையில் புறப்பட்டு அதே நாள் இரவு நாகர்கோவிலை வந்தடையும்.
இதேபோன்று திருவனந்தபுரத்தில் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் சேவை வரும் 28-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு 24-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
- பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும்.
- நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் 'ஜனநாயகன்' திரைப்படத்தை முடக்குவதில் மத்திய அரசு வேகமாக செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
* 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
* அப்படி பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும். பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் மௌனித்து இருக்கிறார்.
* அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பா.ஜ.க.வும் சேர்ந்து அவருடைய திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்குரிய நெருக்கடி தருகிறதா என்ற கேள்விக்கு விஜய் அவர்களால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.
* ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அவர் பா.ஜ.க.வையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை, அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
* இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது.
* விஜயை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறது.
* விஜய்க்கு வியூகம் வகுத்து வரும் சிலரையும் பா.ஜ.க. அச்சுறுத்துவதாக தகவல் வருகிறது.
* நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும்.
* விஜய்க்கு பா.ஜ.க. நெருக்கடி தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சிகளை பா.ஜ.க. மிரட்டி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






