என் மலர்
சென்னை
- கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
- அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும்.
* கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
* அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்.
* அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் எனது பங்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
- மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் 76 மாவட்டக் கழக செயலாளர்களும், மாநகர செயலாளர்களும் இணைந்திருந்தனர்.
- இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வரும் 2026 ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
தேர்தல் களத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது. வலுவான கூட்டணியுடன் இருக்கும் தி.மு.க. தேர்தல் களத்தில் முந்தும் அளவுக்கு தனது கட்டமைப்பை வலுவாக்கி உள்ளது.
ஏற்கனவே கட்சி ரீதியாக எங்கெங்கு பிரச்சனை நிலவுகிறதோ அந்த தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்று அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து விசாரித்து வருகிறார்.
அது மட்டுமின்றி வாக்குச்சாவடி முகவர்களான பி.எல்.ஏ.2 நிர்வாகிகள் கூட்டத்தையும் தொகுதி வாரியாக நடத்தி முடித்திருக்கிறார். இவர்கள் தான் ஒவ்வொரு பூத்களை நிர்வகிப்பவர்கள். இவர்களை நம்பித்தான் பணமும் செலவழிக்கப்படும்.
அது மட்டுமின்றி 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை தி.மு.க. நியமித்தும் உள்ளது. அவர்களிடம் எந்தெந்த வீடுகளில் எத்தனை ஒட்டுகள் உள்ளது. அதில் தி.மு.க. ஓட்டு எத்தனை என்ற பட்டியலும் கைவசம் இருக்கிறது. இது தவிர கட்சி சாராத பொது மக்களின் ஓட்டு லிஸ்டும் தனியாக வைத்துள்ளனர். இதை வைத்து கட்சியினர் செயல்படுகின்றனர்.
இப்போது ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தின் மூலம் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை சொல்வதுடன் உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தி வருகின்றனர். இந்த பிரசார இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் கடந்த 3-ந்தேதி தொடங்கி வைத்தார். வீடு வீடாக அவர் நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக செயலாளர்கள் கவுன்சிலர்கள் என நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க.வுக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்துவிட்டனர். இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்தினார். இந்த கூட்டத்தில் 76 மாவட்டக் கழக செயலாளர்களும், மாநகர செயலாளர்களும் இணைந்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் தனது இல்லத்தில் இருந்தபடி காணொலியில் கூட்டத்தை நடத்தினார்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டோட மண்-மொழி-மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ந்தேதி தொடங்கினோம்.
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன் பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம். நன்றி.
நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கிறது. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள மற்றும் இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வது தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். நாம உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர் வரும் சட்டன்றத் தேர்தலுக்கும் தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கையில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
- பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.
சென்னை:
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தை முன் வைத்து கோவையில் பிரசாரத்தை தொடங்கினார்.
தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கமே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சென்ற சட்டமன்றத் தேர்தலில் சொன்னது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. பி.ஜே.பி.யோடு இருந்த காரணத்தினால் தமிழகம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி.யால் வளைக்கப்படுகிறது. கபளீகரம் செய்யப்படுகிறது.
ஆகவே தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிற அரசியல் முழக்கத்தை நாங்கள் வைத்தோம். அந்த முழக்கத்தை இரவலாக பெற்று இப்போது எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அவர் கோவையில் பேசுகிறபோது, கம்யூனிஸ்டுகளே இல்லை. அவர்களது முகவரியே இல்லை. காணாமல் போய் விட்டார்கள் என்று மேட்டுப்பாளையம் கூட்டத்தில் பேசினார்.
ஒரு வாரம் இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என தெரியவில்லை. சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
கம்யூனிஸ்டுகள், வி.சி.க. போன்ற கட்சிகள் எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோவையில் கம்யூனிஸ்டு கட்சிகள் இல்லை என்று கூறிவிட்டு சிதம்பரத்தில் கம்யூனிஸ்டு கட்சி எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று பேசுவது நல்ல நகைச்சுவையாகும்.
எங்கள் அணிக்கு வந்தால் ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் ஏற்கனவே சேர்ந்திருக்கிற பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.
அந்த ரத்தக்கறை படிந்த கம்பளத்தில் எடப்பாடி பயணம் பண்ணுகிறார். அதன் ஆபத்தை உணராமல் அல்லது ஆபத்தை உணர்ந்தும் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அவர் பயணம் பண்ணுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர்.
- தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.
சென்னை சைதாப்பேட்டை கோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர்.
* கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை.
* வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?
* உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?
* தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: வயர்லெஸ் ஸ்டேஷன் சாலை, ஆர்.இ.நகர் 5வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1-வது அவென்யூ முதல் 7-வது அவென்யூ வரை, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
பெசன்ட் நகர்: கங்கை தெரு, அப்பர் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி ரோடு, கடற்கரை ரோடு, திருமுருகன் தெரு, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ருக்மணி சாலை விரிவு, ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன், பாரி தெரு, பாண்டியம்மன் கோவில் தெரு, கம்பர் தெரு.
- வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
- மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பிறகு வெற்றி பெறும் கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே பேசும் பொருளாகி விட்டது.
ஆளும் கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்து உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று தி.மு.க. தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் காங்கிரசார் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்றும் பேசி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசும் போது, 'நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள்' என்று கூறினார்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் மலரும். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால்தான் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் பேசி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவிக்கையில், 'திருச்சி வேலுச்சாமி ஒரு மூத்த தலைவர். அவரது கூற்றுகள் எப்போதும் சரியானவை' என்று கூறி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை சாத்தியம் இல்லை. மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல் வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள். எனவே கூட்டணி அரசாங் கங்களுக்கு ஏற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இது குறித்தும் விவாதிக்கலாமே தவிர இப்போது அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என கேள்வி எழுப்பினார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது.
த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சிவப்பு, மஞ்சள்- சிவப்பு நிறம் பதிவு செய்யப்பட்ட சபை முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், ஆண்கள், முகவர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், வர்த்தக முத்திரை என்பது சரக்குக்கு மட்டும் இல்லாமல் சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று த.வெ.க. மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.
- பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்.
- நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுக.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மனது வேதனை அடைகிறது... எளிமையின் சிகரமாகவே வாழ்ந்த மாபெரும் தலைவனான காமராஜருக்கு ஏசி வைத்து கொடுத்தோம் என்றும் ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கலைஞரைப் பார்த்து சொன்னார் என்றும்.. கருத்துக்களை திருச்சி சிவா திருச்சி கூறியது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது..
இன்று பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அவர் மீதான பழி "சொற்களை" சரியாக எதிர்க்கவில்லை என்பதே மக்கள் கருத்து.. எல்லாவற்றையும் விட மனதை ரணப்படுத்துவது... அவரின் அறையில் ஏசி இருந்தது என்று திமுக 200 உடன்பிறப்புகள்.. அவர் இருந்த எளிய அறையில் ஏசியை வட்டமிட்டு போடுவதும்... கடைசி நாள்.. அவர் படுத்து இருக்கும்போது கூட ஏசி ஓடிக் கொண்டிருந்தது.. என்று கொச்சையாக.. பதிவு போடுவதும்.. மிகவும் கண்டிக்கத்தக்கது...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் நேரான இயக்க உடன்பிறப்புகளையும்.. 200க்கான இணைய உடன்பிறப்புகளையும்.. கட்டுப்படுத்த வேண்டும்.
நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுகவுடன்.. ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும்... காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது.
பெருந்தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதை காங்கிரஸ் எதிர்ப்பதும் வெறும் பெயரளவில் தான் இருக்கிறது என்பதும் வேதனை...
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.
- அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
சென்னை:
தாய் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நம் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விழா சென்னை அடையாறில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவையில் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேரறிஞர் அண்ணாவும் தமிழும்' என்ற தலைப்பில் வக்கீல் த.ராம லிங்கம், 'இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
தொடர்ந்து அவர், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வரவேற்புரையாற்றுகிறார். செயலர் வே.ராஜாராமன் முன்னிலை வகித்துப்பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
- தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர் இன்றைக்கும் அவரது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றுகிறோம். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டான தலைவராக தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர். பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
வருங்கால சமுதாயத்தினர் முன் மாதிரியான, நல்வழிகாட்டியான தலைவராக பெருந்தலைவரை ஏற்றுக்கொள்வது 100 சதவீதம் பொருத்தமானது. அப்பேற்பட்ட ஓர் உயர்ந்த தலைவரைப் பற்றி தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தவறான தகவலை பொதுவெளியில் தெரிவித்தது மிகுந்த வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது. அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது போன்ற உத்தம தலைவரை, தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






