என் மலர்tooltip icon

    சென்னை

    • வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

    இதைத்தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். சிறப்பு விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் NH 57 பகுதியில் நடைபெறும் பேரணியில் காலை 10.30 மணி அளவில் பங்கேற்கிறார்.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
    • 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.

    அதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ல் தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.

    11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள, கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தயாரித்துள்ள, கோவை மாவட்ட மாஸ்டர் பிளான் 2041-ல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய சுமார் 1531 சதுர கிலோ மீட்டருக்கு புதிய கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மாஸ்டர் பிளான் தயாரிப்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் முழுமையாக நடத்தப்படாமல், கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளும், சலசலப்புமும் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இச்சூழ்நிலையில் பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலத்தினை விவசாயம் மற்றும் தொழில் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே வளர்ந்த தொழில் நகரமான கோவையின் நகரப் பகுதியில் நில மதிப்பீட்டுத் தொகை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், நில மாற்றம் செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் ஊழலுக்கு வழிவகை செய்வதுடன், பல்வேறு மோசடிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    நில வகைப்பாடு மாற்றத்தில் ஆளும் திமுக குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் ஜி.ஸ்கொயர் நிறுவனம் மற்றும் திமுக குடும்ப உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலங்கள் என சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நில வகைப்பாட்டிலேயே இருக்கும் வகையில், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ, விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 4 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்திடாத இந்த விடியா திமுக அரசு, பொதுமக்கள் கருத்துக்கேட்பு இன்றி, திட்டமிடப்படாத கிராமப் பகுதிகளையும் இணைத்து கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 தயாரித்து குறிப்பிட்ட தரப்பினர் லாபம் ஈட்டும் வகையில் ஊழலுக்கு வழி ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அரசு ஏதோ சிறப்பாக செயல்படுவதுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, இந்த மாஸ்டர் பிளான் மூலம் விடியா திமுக அரசு முனைகிறது என கோவை மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நில வகைப்பாடு மாற்றங்களால் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    எனவே, தற்போது வெளியிட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நகர ஊரமைப்புத் திட்டத்தில் இணைத்துள்ள பகுதிகளில் நிலவகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தி, அதன்படி திருத்தங்கள் செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்.
    • இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

    எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கல்லூரி பாதை பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்ற அரசாணை வெளியீடு.
    • கல்லூரி பாதையில் இருந்து வீட்டில் பல ஆண்டுகள் ஜெய்சங்கர் வசித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.
    • ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அவரு டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் காலை உணவை சாப்பிட்டனர்.

    அங்கு நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலையிலே இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட உடனே இந்த குழந்தைகள் மாதிரி எனக்கும் 'எனர்ஜி' வந்திருச்சு.

    எப்படி இன்றைக்கு முழுக்க நீங்கள் ஆக்டிவ் ஆக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவ் ஆன டே தான். ஆக்டிவ் ஆன டே மட்டுமல்ல மனசுக்கு ரொம்ப நிறைவான நாள்.

    இந்த திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதை விட மனநிறைவு என்ன இருக்க முடியும். அடுத்து இது மகிழ்ச்சிக்கு உரிய நாளும் கூட. ஏனென்றால் மதிப்புமிகு பஞ்சாப் முதல்-மந்திரி எனது நண்பர் பகவந்த் மான் இங்கு வந்துள்ளார். அவரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன்.

    இதற்கு முன்பு இப்போது நாடே திரும்பி பார்க்கிற புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.

    இப்போது இந்த திட்டத்துக்கு பகவந்த்மான் வந்திருக்கிறார். தனது பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்க கூடிய பஞ்சாப் முதல்-மந்திரிக்கு மனமார்ந்த நன்றி.

    பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லப்பட்டு உள்ளது. வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    கல்வி அறிவை வழங்கும் இடமாக மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது. வயிற்றுப் பசியையும் போக்கணும். நீதிக்கட்சி காலத்தில் நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, அப்போது சென்னை மாநகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெருந்தலை வர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொடர்ச்சியாக காலை உணவு திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம்.

    இந்த திட்டத்தை தொடங்க காரணம் என்ன என்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாளில் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு போனபோது, அங்கிருந்த மாணவிகளிடம் காலையிலே என்ன சாப்பிட்டீர்கள் என்று சாதாரணமாக கேட்டேன்.

    ஆனால் நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். சில மாணவிகள் டீ மட்டும் குடித்து விட்டு வந்துட்டேன். 'பன்' சாப்பிட்டேன் இந்த மாதிரி சொன்னாங்க. இதை மனதில் வைத்துதான் காலை உணவு திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாக அறிவித்தேன்.

    2022-ம் ஆண்டு செப் டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். முதல் கட்டமாக 1,545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்தார்கள்.

    பிறகு 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த திருக்கு வளையில் எல்லா அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தார்கள்.

    இந்த திட்டத்தோட அட்டகாசமான சக்சஸ் பற்றி கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டை பார்த்து இனி நகர் பகுதிகளில் செயல்படுகிற 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம்.

    இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற போகிறார்கள். இனி தமிழ்நாட்டில் செயல்படுகிற 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கக் கூடிய 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினமும் காலையில் சூடாக சுவையாக, சத்தாக சாப்பிட்டு பள்ளி வகுப்பறையில் தெம்பாக நுழையப் போகிறார்கள்.

    ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதை செலவு என்று சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் (முதலீடு) இது.

    எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ் சமுதாயத்துக்கு தரப் போகிற முதலீடு இது.

    என் தமிழ்நாட்டு மாணவ செல்வங்களை நம்பி அவர்களின் திறமை மீது, அறிவு மீது, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம்.

    நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தோட உண்மையான வெற்றி.

    இன்னும் கொஞ்சம் இறுமாப்போடு சொல்ல வேண்டும் என்றால், இனிமேல், பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள், பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம்.

    காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நான் இதை க்ளோசா…மானிட்டர் செய்து கொண்டு வருகி றேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை, பிள்ளைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் இந்தத் திட்டத்தை சிம்ப்பிளாக பார்க்க முடியாது. இதனால்,

    * உணவுண்ணும் பழக்க வழக்கங்களில் இம்ப்ரூவ் மெண்ட் வந்திருக்கிறது.

    * பாசிட்டிவான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    * மற்ற குழந்தைகளுடன் ஈசியா, ஜாலியா பழகுகிறார்கள்.

    * குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.

    * ஸ்கூலுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    * கிளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது.

    * வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.

    எதிர்பாராத பல நன்மைகளையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா – அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது.

    அவ்வளவு ஏன்… டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசுப் பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்குச் செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவுத் திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது.

    கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது.

    ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை! இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன்…

    அது, "ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்! இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், ஆறு மாதம் வரையிலான 14 ஆயிரத்து 901 குழந்தைகளில், 13 ஆயிரத்து 262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், ஆறு மாதத்தில் இருந்து ஆறு வயது வரையிலான 92 ஆயிரத்து 15 குழந்தைகளில், 61 ஆயிரத்து 651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம்.

    அதேபோல, இரண்டாம் கட்டத்தில், ஆறு மாதம் வரையிலான 76 ஆயிரத்து 705 குழந்தைகளில், 67 ஆயிரத்து 913 குழந்தைகளை சத்துள்ள குழந்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.

    இந்தத் திட்டங்கள் மட்டும் கிடையாது, நம்முடைய அரசின் முத்திரை திட்டங்களில் முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம் பேர்!

    பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!

    அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்!

    வேலைக்குச் செல்கின்ற மகளிருக்கு தோழி விடுதிகள்!

    மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று, நேரில் ரேஷன் தருகின்ற தாயுமானவர் திட்டம்!

    ஏழை, எளிய நடுத்தர மக்கள் இருக்கின்ற இடத்திற்கே சென்று பயனளிக்கின்ற உங்களுடன் ஸ்டாலின்! நலம் காக்கும் ஸ்டாலின்!

    இது எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக, நாட்டிலேயே பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி அடைந்திருக்கின்ற மாநிலம் என்றால், அது நம்முடைய தமிழ்நாடு தான்!

    நான் சி.எம். ஆன நாளில் இருந்து எனக்கு இருந்த, இருக்கின்ற ஒரே குறிக்கோள், "தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும்!" இந்த நேரத்தில் நான் பெரிதாக நன்றி சொல்லிக் கொள்ள விரும்புவது… இந்த குழந்தைகளுக்கு சமைக்கின்ற தாய்மார்களுக்குதான்! உங்கள் வீட்டில், உங்கள் குழந்தைகளுக்கு சமைக்கின்றது போல, நன்றாக சமைக்கிறீர்கள்! மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகளுக்கு நான் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். உங்கள் பணியும் சிறப்பாக தொடரவேண்டும்!

    மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… நன்றாக சாப்பிடுங்கள்… நன்றாக படியுங்கள்… நன்றாக விளையாடுங்கள்… உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்!

    முதலமைச்சரான உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், நம்முடைய திராவிட மாடல் அரசும், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து தருவோம்! எங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே! எப்போதும் உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! இருப்போம்! குழந்தைகளுக்கு ஆல் த பெஸ்ட்!நன்றி! வணக்கம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும்.
    • முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.

    சென்னை:

    இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முதற்கட்டப் பயணத்தை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கந்தக்கோட்டத்தில் நடந்த விழாவில் 199 பக்தர்களுக்கு பயண வழி பைகள் வழங்கி ஆன்மிகப் பஸ்சை தொடங்கி வைத்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார். இந்த ஆட்சியின் மீது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என நிருபித்த பெருமை நமது முதலமைச்சரையே சாரும். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்களின் பிம்பம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை விட்டுள்ளார்.

    கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வாசன் முதலமைச்சர் சந்தித்து அழைப்பு விடுத்தபோது ஏற்கனவே திட்டமிட்ட பயணத் திட்டத்தில் மாறுதல் செய்ய இயலாத சூழ்நிலை இருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே தி.மு.க. கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருச்செந்தூர் அர்ச்சகர்களிடம் ஒளிவு மறைவு இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றபோது அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி தீர்ப்பினை பெற்று வருகின்றோம். வெகு விரைவில் ஒழுங்குப்படுத்தி எவ்வித கையூட்டும் இல்லாமல் தரிசனம் செய்கின்ற சூழ்நிலையை நிச்சயம் துறை மேற்கொள்ளும். நடவடிக்கை எடுக்கும்.

    ஸ்ரீரங்கம் கோவிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறிய மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றாலும், அவர்களை அணுகி அனுமதி பெற்று செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சரின் அனுமதியை பெற்று துரை வைகோ சந்தித்து கூட்டணி தர்மத்தோடு விளக்கமாக எடுத்துக் கூற உள்ளேன்.

    விஜய் 2 மாநாடுகளை முடித்திருக்கின்றார். நரியின் வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், ராஜா வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், என்பதுபோல் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பதே எனது கருத்தாகும். அவரது உயரம் அவ்வளவுதான். முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, கோ.செ.மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் ரேணுகா தேவி, முல்லை, உதவி ஆணை யர்கள் சிவக்குமார், பாரதிராஜா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரா ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காலை 8 முதல் 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் காலை 8 மணி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெற்றியை கொடுத்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது தி.மு.க.
    • 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டதாக தி.மு.க. பொய் கூறுகிறது.

    சென்னை தி.நகரில் தி.மு.க. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி விடியல் எங்கே? என்ற பெயரில் புத்தகத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.வின் பொய்யை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.

    * 3 தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர்.

    * வெற்றியை கொடுத்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது தி.மு.க.

    * 99 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டதாக தி.மு.க. பொய் கூறுகிறது.

    * 66 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க. முழுமையாக நிறைவேற்றி உள்ளது.

    * 87 விழுக்காடு வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை

    * தமிழ் வளர்ச்சி மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக 12 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க. அதில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    * ஈழ தமிழர் விவகாரத்தில் 4 வாக்குறுதிகளை கொடுத்து ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    * லோக் ஆயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று.

    * முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் என வாக்குறுதி அளித்தது. சிறப்பு நீதிமன்றங்கள் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    * தி.மு.க. தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றார்.
    • சிரஞ்சீவியும் கட்சி தொடங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது த.வெ.க. குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றார். விருத்தாசலத்தில் தான் எம்.எல்.ஏ. ஆனார். 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்ற கட்சி இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் திரும்பி பார்க்க வேண்டும். நல்ல சித்தாத்தம், நல்ல கருத்துகளை பேசினார். யாரையும் அவர் வசைபாடவில்லை.

    அதேபோல் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கினார். 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சு. காங்கிரசுடன் இணைத்து விட்டார்கள். இப்போ அந்த கட்சி இருக்கிறதா என்றால் அந்த கட்சியே கிடையாது. இதேபோல் பல கட்சிகளை சொல்லலாம்"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பில் பாடம் கற்கும்போது நன்றாக படிக்க முடியும்.
    • காலை உணவுத் திட்டம் என்பது எனக்கு தெரிந்து தமிழ்நாடு தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது

    தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

    நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.

    இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    காலை உணவுத் திட்டத்தில் பல நன்மைகள் இருக்கிறது. சத்துணவாக கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    நம் நாட்டில் ரத்தசோகை அதிகமாக உள்ளது. டயட்டில் புரோட்டின் குறைவாக உள்ளது. காலை உணவுத் திட்டத்தில் சத்தான உணவு வகைகளை சேர்த்துள்ளார்கள்.

    குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பில் பாடம் கற்கும்போது நன்றாக படிக்க முடியும். இது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கணக்கு, அறிவியலில் மதிப்பெண் அதிகம் பெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெறும் வயிற்றில் இருந்தால் வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியாது.

    இந்த திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகள், பெண் குழந்தைகள் பள்ளியில் சேருவது அதிகரித்துள்ளது. இடைநிற்றல் குறைந்துள்ளது. பள்ளியில் காலையில் உணவு கிடைக்கும் என்று தெரிந்து குழந்தைகள் ஆர்வமாக வருகிறார்கள்.

    காலை உணவுத் திட்டத்தால் சமைக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஏழை வீட்டில் இருந்து வந்தால் கூட இங்கு நல்ல சத்துணவு கிடைப்பதால் அவர்களுக்கும் படிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கிறது.

    குழந்தைகள் வளம் பெற்றால் தான் நாடு வளம் பெறும்.

    மதிய உணவுத் திட்டம் நிறைய நாடுகளில் உள்ளது. ஆனால் காலை உணவுத் திட்டம் என்பது எனக்கு தெரிந்து தமிழ்நாடு தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

    காலை உணவுத்திட்டம் ஆரம்ப பள்ளியில் இருந்து ஆரம்பித்து இன்று நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளி என்று விரிவடைந்துள்ளது.

    இதே போல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்த HPV Vaccination திட்டம் 9 வயது முதல் 12 வயதுக்குள் உள்ள பெண் பிள்ளைகளுக்கு தமிழகம் முழுவதும் கொடுக்கப்போகிறார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டின் ஒரு ரோல் மாடலாக இருக்கப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×