என் மலர்
சென்னை
- தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
- வரும் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. எல்லா மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர் எந்த அளவுக்கு வாக்கு வங்கி அரசியல் எண்ணத்தோடு செயல்படுகிறார் என்பது தெரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி. தமிழகத்தில் அ.தி.மு.க.வு டன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடுகளை நடத்தி அடிமட்டத்தில் பா.ஜ.க.வின் வலிமையினை வெளிப்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் அவலநிலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கருத்து திணிப்புகளை புகுத்தி தி.மு.க. தான் முன்னிலையில் இருப்பது போல் கூறி வருகிறார்கள்.
ஆனால் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராகவே உள்ளது. அதை மறைக்கவே நாடகம் போடுகிறார்கள். தி.மு.க.வின் செல்வாக்கு மிகப்பெரிய அளவு சரிந்து இருக்கிறது. இன்னும் 8 மாதத்தில் மேலும் குறையும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியானது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சித்தாந்தமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகிறது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அதை மக்கள் நேரிலேயே பார்த்தார்கள்.
இந்த அவல ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை தேர்தல் மூலம் மக்கள் கொண்டு வருவார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணிக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்பது போல் பேசி வருகிறார். ஆனால் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தபோது மாற்றத்தை தருவார் என்று மக்கள் நம்பினார்கள். ஆரம்பத்தில் காமராஜர், அஞ்சலை அம்மாள் போன்றோரின் படத்தை போட்டு மக்கள் மத்தியில் வலம் வந்தார்.
ஆனால் இப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் படத்தை போட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். ஆக இவருக்கு நிலையான கொள்கை எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். அரசியல் பின்புலம் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வந்தவர். விஜயகாந்தும் அரசியல் அனுபவத்தோடு தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் விஜய் ஒவ்வொரு மாநாட்டை நடத்தும் போதும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.
அவர் அரசியலில் வெற்றிக்கு பக்கம் கூட நெருங்கவில்லை. தொண்டர்கள் கூட நெருங்க முடியாத தலைவராக தான் விஜய் இருக்கிறார். எந்த கட்சியிலும் கேள்விப்படாத பவுன்சர் கலாச்சாரம் அந்த கட்சியில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்.
- எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.
"அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இருபெரும் தலைவர்களின் தலைமையில் சிறப்புடன் செயலாற்றி வந்துள்ளது. கழகத்தை தோற்றுவித்து தொடர் வெற்றிகளைப் பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தமிழ் மண்ணில், மக்களுக்கான மகத்தான நல்லாட்சியை நடத்தியவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு மாற்றார் பலரும் இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கமே இருக்காது. அது சிதறுண்டு விடும் என கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில், இதோ தாயாக நான் இருக்கிறேன்.
கழகத்தையும் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பேன் என சூளுரைத்து, விரோதிகளின் சதிச்செயல்களையெல்லாம் துணிச்சலுடன் முறியடித்து, சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்து, 6 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
இவற்றிற்கெல்லாம் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "ஆண்டுகளை கடந்தும் அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நின்று நிலைத்திருக்கும், அண்ணாவின் உருவம் பொறிந்த கொடி என்றும், எங்கும், எப்பொழுதும் பட்டொளி வீசி பறக்கும்" என்று புரட்சித்தலைவர் கூறினார். "இன்னும் 100 ஆண்டுகளையும் கடந்து மக்களுக்காகவே நம் இயக்கம் இயங்கும்" என்று தம் புரட்சித்தலைவி சட்டப்பேரவையிலேயே குளுரைத்தார்.
ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏலனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட, அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம்.
கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மனமாச்சர்யங்களை மறந்து, கருந்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம் கட்சியின் நலன் முக்கியம், கட்சியின் எதிர்காலம் முக்கியம் கட்சியின் வெற்றி முக்கியம் அந்த வெற்றி தி.மு.க. என்ற தீய சக்தியை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.
எந்த தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித்தலைவரும். புரட்சித்தலைவியும் பாடுபட்டார்களோ, அந்த தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.
கழகம்தான் எனது ஒரே குடும்பம். யாராலும் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. நான் எப்பொழுதும் சுயமாக சிந்தித்து அதன்படி செயல்படுகிறேன். எனக்கு நம் கழகத்தினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. நான் இதைவிட கடினமான சூழ்நிலைகளையெல்லாம் எனது சிறு வயதிலேயே கடந்து வந்துவிட்டேன். நம் இருபெரும் தலைவர்களிடம் நான் பெற்ற பயிற்சி என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது.
கழகத்தின் நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜி.ஆரின் அணுகுமுறை எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களில் ஒருத்தியாக உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். கட்சியின் நலன் கருதியும். தமிழக மக்களின் நலன் கருதியும் தான் இதுநாள் வரை ஒவ்வொரு முடிவுகளையும் நாள் மேற்கொண்டு இருக்கிறேன்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட கழகம் வெற்றிபெற என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன் ஆனால் கழகம் வெற்றியை பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் கழகம் இன்றுவரை வெற்றி பெறமுடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஆனால், இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும். மேலும், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய அநீதியாகிவிடும். எனவே "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இவி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். தம் இருபெரும் தலைவர்களின் எண்ணங்களையும் அது ஈடேற்றிடும்.
இது தொண்டர்களின் இயக்கம், தொண்டர்களின் முடிவே இறுதியானது, உறுதியானது. அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்தி செல்வோம். ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடம் தந்து விடக்கூடாது.
"ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க. இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சி என்பதை நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்.
ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் தமிழக மக்களும் கழகத்தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பல்வேறு கூட்டணி கட்சியினரும் இதைத்தான் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி. எனவே கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார்.
- கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
இதற்காக கோவையில் கடந்த மாதம் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர் இதுவரை 3 கட்டங்களாக பிரசாரம் செய்து உள்ளார். 118 சட்டமன்ற தொகுதிகளில் 60 லட்சம் பேரை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாளில் (1-ந்தேதி) இருந்து 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார். இந்த பிரசாரம் 13-ந்தேதி கோவையில் முடிவடைகிறது.
இப்படி தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான கருத்துக்களை கேட்டார். இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடித்திருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நிச்சயம் நமது உழைப்பு அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.1720 உயர்வு.
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரந்துக் கொண்டே வருகிறது.
கடந்த திங்கள் அன்று சவரனுக்கு ரூ. 80, செவ்வாய்கிழமை அன்று சவரனுக்கு ரூ. 400, புதன்கிழமை ரூ. 280, வியாழக்கிழமை அன்று ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, நேற்று தங்கம் விலை இருமுறை உயர்ந்தது. அதாவது, காலையில் ரூ.520-ம், மாலையில் ரூ.520-ம் என சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக உயர்ந்து ரூ. 76,280-க்கும் விற்பனையானது
இந்தநிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85, சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களில் ரூ.1720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000 நெருங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.134க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280
28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240
27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120
26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840
25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-08-2025- ஒரு கிராம் ரூ.134
28-08-2025- ஒரு கிராம் ரூ.130
27-08-2025- ஒரு கிராம் ரூ.130
26-08-2025- ஒரு கிராம் ரூ.130
25-08-2025- ஒரு கிராம் ரூ.131
- அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு க. ஸ்டாலின்.
- திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8ம் தேதி நாடு திரும்புகிறேன். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில்10.62 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களுடன் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் காரணமாக, 32.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தமிழகம் வளர்ந்துள்ளதா என கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதிலாக உள்ளது.
திமுகவை நோக்கி புதிய கட்சிகள் வருகின்றனவோ இல்லையோ. புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு.
விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அதிகம் பேசமாட்டேன், சொல்வதைவிட செயலில் காட்டுவேன்.
எந்த கருத்துக்கணிப்பு இருந்தாலும் கருத்துக்கணிப்புகளை மிஞ்சி திமுக அமோக வெற்றி பெறும்.
முதல்வராக இருந்தபோது இபிஎஸ் சென்ற வெளிநாட்டு பயணங்களை போல் எனது பயணத்தையும் நினைத்து அவர் விமர்சனம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.100க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளது.
- GST வரி விகிதத்தை 5%ஆக குறைக்கக்கோரி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர்.
சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான GST வரி விகிதத்தை 5%ஆக குறைக்கக்கோரி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர்.
தற்போதைய நிலவரப்படி சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரி ரூ. 100 வரையிலான டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமும், ரூ. 100க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளது.
இதனால், சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான GST வரி விகிதத்தை 5%ஆக குறைக்க கோரிக்கை விடுத்தனர்.
- விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
* திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை
* சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.
* விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
- பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
- விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டாவையொட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மற்ற மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
அதன்பிறகு விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- இன்று காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 30.8.2025 – சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்.
- முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.
- LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் 42.23 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி சேர்க்கை விகிதம், 2024 - 2025 கல்வி ஆண்டில் 39.17 சதவீதமாக குறைந்து, 2025 - 2026 நடப்புக் கல்வி ஆண்டில், 37.92 சதவீதமாக மிகவும் குறைந்திருக்கிறது.
நடப்புக் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, 2.39 லட்சமாக இருக்கையில், 12,929 தனியார் பள்ளிகளில், 5.26 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இரண்டு மடங்குக்கும் அதிகமாக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த தொகுதி உட்பட, பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லாமல், மரத்தடியில் வகுப்பறைகள் செயல்படுவதும், பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும், அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய வன்மம் அதிகரித்து, மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதால், அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது. வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் நேரத்தில், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட LKG, UKG உள்ளிட்ட தொடக்கக் கல்வி, இன்று தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை.
மேலும், அரசுப் பள்ளிகளில், ஆண்டாண்டு கால திமுகவின் புரட்டுகளை பாடத்திட்டத்தில் திணித்திருப்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை, தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எளிய குடும்பங்களும், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
இதனால், பெருந்தலைவர் காமராஜர், அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது. தமிழகப் பெற்றோர்களும், பெரும் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன. அதில், பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
- மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட போதே, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதையும், இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் காரண, காரியங்களுடன் விளக்கியிருந்தேன்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டிருப்பதன் மூலம் அப்போது நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது புதிய புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை முட்டாள்களாக்க நினைப்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






