என் மலர்tooltip icon

    சென்னை

    • நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?
    • விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்?

    ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஈரோட்டில் மேடை ஏறிய பொம்மை முதலமைச்சர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார்.

    அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது, எது நடந்தாலும் "ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல,

    "நான் டெல்டாக்காரன்" என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு, மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே,

    இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?

    ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை ஆண்டுகளும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டைக் கூட அளிக்காமல்,

    முறையாக நீரைத் திறக்காததால், கடைமடை வரை நதிநீர் சென்று சேராததால், டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் வரை தொடர்ந்து பாதித்து, விவசாயிகள் தவித்த போது கூட, விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்?

    உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்தன என்னவென்று!

    நூறு ஏரிகளுக்கு நீரேற்றும் சரபங்கா திட்டம் முதல், தலைவாசல் கால்நடைப் பூங்கா, அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக நான் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் போது, இதெல்லாம் நான் கொண்டு வந்த திட்டம் என்று தெரியவில்லையா இந்த பொம்மை முதல்வருக்கு?

    கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

    அவர்களை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன் நான்.

    எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    "அஇஅதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும்" என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட்டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஒரு கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதைத் தான் நாங்கள் எப்போதும் கூறுகிறோம்.

    உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது.

    ஆக, அதிமுக எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று!

    ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையைத் துடைக்க கர்சீப்பைக் கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா திரு. ஸ்டாலின் அவர்களே?

    நான் எப்போதும் என் உயிருக்கு உயிரான தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்! ஆனால், ஒரே ஒரு கேள்வி-

    எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று ராஜினாமா.
    • செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்க வாய்ப்பு.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்த நிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

    த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

    புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்த நிலையில், விஜயை சந்தித்துள்ளார்.

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வரும் 29ம் தேதி அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    தமிழகத்தில் வரும் நவம்பர் 28, 29ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் வரும் 29ம் தேதி அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிகனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    • ஆற்காடு சுரேஷின் மனைவி சார்பில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
    • காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத் தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டியது.

    இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

    காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

    மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து, ஜாமின் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு, ஜாமினை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு ஆகியவற்றோடு காவல்துறை தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.
    • பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.

    பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசிய லமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை.
    • பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.

    ஏற்கனவே, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் தி.மு.க. அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.

    ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும்.

    தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
    • அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், உலகளவில் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான 2025-ஆம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த உயரிய விருது, The Global Energy and Environment Foundation (GEEF)-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2025 (Global Sustainability Awards 2025) நிகழ்வில் வழங்கப்பட்டது. நவம்பர் 20-ந்தேதி புதுடெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்ற உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025-இன் போது இந்த விருது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்த்து விழாவில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்களிடம் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அறிவியல் முறைப்படி மாற்று மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைப்பு அமைப்புகள், தொடர்ச்சியான சத்தம் மற்றும் அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

    இந்த அங்கீகாரம், சென்னை நகரத்திற்கு பசுமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்தன்மை இலக்குகளுக்கான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நிலைத்தன்மை விருதை (Global Sustainability Award) பெற்றுள்ளது என்பதும் சிறப்பித்துக் காட்டப்படுகிறது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் குரல் எழுப்பினார்.
    • பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

    அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

    சமீபத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் குரல் எழுப்பினார்.

    இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினர். இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான். இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன். தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர். இ.பி.எஸ். எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு முறை தோற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா. இ.பி.எஸ்.-க்கு பதவி கிடைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுத்தவன் நான். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இ.பி.எஸ். என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளர்களும் த.வெ.க. சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டையனுக்கு அதிகாரம் தரவும் வாய்ப்பு உள்ளது. த.வெ.க.வின் மாநில நிர்வாகிகள் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொடுக்க அக்கட்சி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செங்கோட்டையன் தி.மு.க.வுக்கு எதிராக பேசியதில்லை என்றும், அவர் தி.மு.க.வின் 'பி-டீம்' எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்த நிலையில், செங்கோட்டையனை தி.மு.க. பக்கம் இழுப்பதற்கான அரசியல் நகர்வுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன் தி.மு.க.விற்கு செல்வாரா? த.வெ.க.விற்கு செல்வாரா? என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரிந்து விடும்.

    • முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
    • தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை.

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் அ.தி.மு.க. சார்பாக 9 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், அதன்பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார். செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

    ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்மட்ட குழுவில் இருந்தபோது, அவரை காங்கேயம் அழைத்து வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது தொடங்கிய விசுவாசம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.

    அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதாவிடம் இருந்தவரை, எந்த தேர்தல் என்றாலும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார்.

    முதல் நாள் தேர்தல் பிரசாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்து விட்டு, அடுத்த நாள், ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது உள்பட அனைத்தையும் நள்ளிரவுவரை சுற்றிப் பார்த்து, ஓர் ஒத்திகை நடத்தி திருப்தியான பின்பே உறங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனால் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஜெயலலிதா ஒப்படைத்து வந்தார்.

    தொண்டர்களின் தலைவனாக இருந்தாலும், கட்சி பதவிகளில் எப்போதும் செங்கோட்டையன் ஆர்வம் காட்டியதில்லை. அதேபோல், தனக்கென ஆதரவாளர் வட்டத்தையும் சேர்க்க அவர் விரும்பியதில்லை.

    கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் சில தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி, ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பின்பும், அதே விசுவாசத்தோடு இருந்தவர் செங்கோட்டையன்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் இருந்தவர் செங்கோட்டையன். 

    • தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக உருவாகியது.

    இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

    நேற்று மலேசியா ஜலசந்திர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த மண்டலம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அதன் பின்னர் இன்று காலையில் அது புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் இந்தோனேசியா பகுதிகளை கடந்து அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

    மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தீவிரமடையும் என்பதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தென் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செ.மீ. ராமேஸ்வரம் 6 செ.மீ. மண்டபம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் வெறிச்சோடியது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார்.

    இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து ஆதரவாளர்களை திரட்டி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்த செங்கோட்டையன் அ.தி.மு.க. இணைப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறி வந்தார். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய செங்கோட்டையன், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தனது கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்காத நிலையில் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கைகோர்க்க உள்ளார்.

    இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் ஏற்கனவே செங்கோட்டையனை சந்தித்து பேசி அவர் த.வெ.க.வில் சேருவதை உறுதி செய்துள்ளனர். இதற்காக சென்னை வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார்.

    கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நாளை செங்கோட்டையன் இணையும் விழா நடைபெறுகிறது.

    அந்த கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார். அவருடன் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    த.வெ.க.வில் இணைய உள்ள செங்கோட்டையனுக்கு அவரது அரசியல் அனுபவத்தை கருத்தில் கொண்டு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    செங்கோட்டையனுக்காக ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளர் என்கிற புதிய பொறுப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகத்துக்கு சென்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் சேர்ந்தார்.

    இதையடுத்து தனது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். அதே போன்றுதான் செங்கோட்டையனும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்த செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
    • சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையில் 'ஆருத்ரா கோல்டு' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், வேலூர், திருவண்ணாமலை உள்பட 26 இடங்களில் கடந்த 2022-ம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 லட்சம் பணம் செலுத்தினால் வட்டியாக ரூ.36 ஆயிரம் தருவோம் என ஆசை காட்டப்பட்டது தெரிய வந்தது. இப்படி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து ஆருத்ரா நிறுவனம் சட்ட விரோத பணபரிமாற்ற விவகாரத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 15 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையின் போது சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் முடிவிலேயே முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×