என் மலர்tooltip icon

    சென்னை

    • திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை.
    • திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.

    கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் என்பவரை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக அதிமுக தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

    இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார்.

    ஏன் பதறுகிறீர்கள் திமுக ? என்ன தவறு செய்தீர்கள்?

    வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?

    நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?

    திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.

    வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தினமும் காலை மற்றும் பிற்பகல் என தங்கம் விலையில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
    • தங்கம் விலை அதிகரித்து, சவரன் ரூ.93,000-ஐ நெருங்குகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்தது. இதுமேலும் அதிகரித்து, சவரன் ரூ.93,000-ஐ நெருங்குகிறது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், மாலை மேலும், ரூ.440 உயர்ந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,640க்கு விற்பனையாகிறது.

    ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
    • சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.

    கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    தொடர்ந்த, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ, தேர்தல் பரப்புரைக்கு வந்த தவெக-வுக்கோ சம்பந்தப்பட்ட வழக்கு என்று மூடி மறைக்க கூடாது. இது 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.

    அதனால்தான் நாங்கள் நேரடியாக 41 உயிர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் தான் ஒருநபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறினோம்.

    சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.

    பாஜகவின் 2 தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.

    கரூர் விவகாரத்தில் தொடர்புடைய எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி எந்த அரசியல் பிரமுராக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
    • ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதிமொழியை அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ச்சியாக பல்வேறு முதலீடுகளை ஈர்த்த வண்ணம் இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடு, அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஐபோன்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் அடுத்த கட்டமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. சென்னை அருகே மிகப்பெரிய ஆலையையை அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலை தொடங்கப்பட்டால், 14,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஃபாக்ஸ்கான் இந்தியாவின் பிரதிநிதி ராபர்ட் வூ இதனை உறுதி செய்துள்ளார்.

     

    இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,

    தமிழ்நாட்டின் பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதிமொழியை அளித்துள்ளது.

    ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது.
    • ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    மத்தியபிரதேச மாநிலத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்த 24 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதேபோல் ராஜஸ்தானிலும் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை காஞ்சீபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்த இருமல் மருந்தை தயாரித்த போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான 'புரோப்பிலின் கிளைக்கால்' பயன்படுத்தியதால், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவு மிகவும் அதிகரித்து அந்த குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருந்து நிறுவன உரிமையாளரான சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 75) கைது செய்யப்பட்டார். ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

    23 குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து தமிழகம், கேரளா, மத்தியபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த இருமல் மருந்து நிறுவனத்துக்கு தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் 2011-ம் ஆண்டு உரிமம் வழங்கியது. அதன்பிறகு இந்த நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக தமிழக அரசு அதிகாரிகள் சரியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மோசமான உட்கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை மீறியும் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் 'சுகம்' இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து நிறுவன விவகாரத்தை தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் முறையாக ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு சட்ட விரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குனர் தீபாவின் வீடு சென்னை திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ளது. அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குனராக பணிபுரியும் கார்த்திகேயன் வீடு சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ளது. இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை 7.15 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    கார்த்திகேயன் வீட்டில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். கார்த்திகேயன் தனது அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தாமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜுனா நகர் 2-வது தெருவில் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    தனது மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரங்கநாதன் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து இருக்கிறாரா என்பதை அறிய அவரது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

    அதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டால், யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்து அந்த அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறார்களா? அப்படி ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் யார்? அவர்கள் முறையாக ஆய்வு செய்தார்களா அல்லது பெயரளவுக்கு நடத்தினார்களா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • பா.ம.க. சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும். கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அண்மையில் மறைந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி சிபுசோரன், கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு சட்டசபையில் கொண்டு வரப்படுகிறது.

    மேலும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    அத்துடன் நாளைய சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து மற்ற 3 நாட்களில் வழக்கம் போல வினாக்கள் விடைகள் இடம்பெறும். பா.ம.க. சட்டமன்ற தலைவர் மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் எனது பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    • விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள்.
    • தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த வருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சி.பி.ஐ. விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாநில உரிமைக்கு மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை?. சி.பி.ஐ. விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?

    எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளையா உள்ளது?. தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது சி.பி.ஐ. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்து செயல்படும் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல அவர்கள் செயல்படுவார்கள். அதனால் அதைப் பேசி பயனில்லை.

    சி.பி.ஐ. விசாரணையில் என்ன வந்துவிடும் இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். அப்படி என்றால் அஜித் குமார் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கூறியது தமிழக அரசு தானே என்ற கேள்விக்கு, அரசு தோல்வி தான் என ஒப்புக்கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை என்பது காலத்தை கடத்தும் திசை திருப்பிவிடும்.

    நாளையிலிருந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கி விடுமா?. சி.பி.ஐ.யின் புலன் விசாரணை சரியாக இருக்காது. கேப்டன் விஜய காந்த் நடித்த புலன் விசாரணை படம்கூட சுவாரசியமாக இருக்கும். தனிநபர் நீதிபதி தலைமையில் விசாரணை என்பதெல்லாம், திசை திருப்பி விடுவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசை கைகாட்டுகிறது தி.மு.க. அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் தி.மு.க. அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாக பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம் யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?.

    கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி திருட்டு என்று சொல்ல வேண்டாம் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்கிறார்கள். மது குடிப்பவர்களை மது பிரியர்கள் என்று சொல்ல வேண்டுமாம். அப்படி என்றால் லஞ்சம் வாங்குபவர்களை ஊழல்வாதிகளை பணப் பயனாளிகள் என்று சொல்ல வேண்டியது தானே.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது. அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை.

    ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க. அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்தது தான்.

    விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள் தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.

    எதையாவது செய்து விஜய்யை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும் அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் 10 நாட்களாக நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
    • ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.
    • கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    * ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது.

    * நீதித்துறை, போலீஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.

    * பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.

    * கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு செய்துள்ளார்.

    * கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
    • கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கரூர் விபத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் மிகவும் துயரமானவை. காவல்துறையினர், பரப்புரைக் கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே கூறி வருகிறது. ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களில் தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அளவுக்கு அதிகமான பதட்டம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே , காவல்துறை சார்பில், தங்கள் மீது இதில் எந்தத் தவறும் இல்லை என்று தாமாக முன்வந்து அளிக்கப்பட்ட விளக்கம் ஆகியவை தான் இந்த விபத்தின் பின்னணியில் சதி வேலைகள் இருக்குமோ? என்ற ஐயத்தை வலுப்படுத்தியது.

    அதனால் தான் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரிய முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி மேற்பார்வையில் விசாரணை நடத்த ஆணையிட்டிருப்பதன் முலம் இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது.

    உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் தான் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.

    • மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.
    • த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    * ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உயரதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    * அரசு தரப்பு நியாயத்தை மட்டும் உள்துறை செயலர் பேசியது ஏன்?

    * த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக ஐகோர்ட் கடுமையான வார்த்தைகளை கூறியது.

    * விசாரணையே இல்லாமல் த.வெ.க. மீது தான் தவறு என்பது போல் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    * எங்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன.

    * மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.

    * த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். த.வெ.க.வை முடக்க முயற்சிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சாதி அடையாள பெயர்களை நீக்குவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தமிழகத்தில் உள்ள பல சமூக மக்கள் இடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர். அவர்கள் நினைவாகவும், அவர்களை போற்றி நினைவு கூறும் வகையில் அவர்களின் பெயர் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் குல பெயர் உடன் முழுமையாக பெயரை கொண்டு அவர்கள் பெயர் அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூட்டப்பட்டது. அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடிய தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்கள் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் சமுதாய மற்றும் குல பெயர் உடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது. நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது.

    இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும் ஆங்காங்கே முரண்பாடுகள் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதேசமயம் ஒரு சமுதாயத்தின் பெயர் நீக்கப்படும் இடத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் பெயர்தான் சூட்டப்பட வேண்டும். அப்போது தான் அந்தப் பகுதி மக்களிடத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரும். இது அனைத்து சமுதாயப் பெயர்களுக்கும் பொருந்தும்.

    அந்தந்த பகுதி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் முழு பெயர்களை அந்தந்த பகுதியில் தான் சூட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைவுகளை அந்த பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள். அதை தவிர்த்து தன்னிச்சையாக அரசு நிர்வாகம் பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல.

    தமிழ்நாடு முழுக்க இப்படி சமூக அடையாள பெயர்களை அகற்ற நினைத்த தமிழக அரசு 9-ஆம் தேதி கோவையில் தமிழக முதல்வர் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு "ஜி.டி.நாயுடுவின்" பெயரினை வைத்துள்ளது அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. நாயுடு என்பது சாதிய பெயர் இல்லையா ? அப்படி எனில் தலைவர்களின் பெயருடன் வருகின்ற அவர் அடையாள பெயரும் சாதிய பெயர் அல்ல என கொள்ள வேண்டும்.

    சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது. சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும்.

    எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×