என் மலர்
சென்னை
- வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040
18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520
17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-12-2025- ஒரு கிராம் ரூ.226
20-12-2025- ஒரு கிராம் ரூ.226
19-12-2025- ஒரு கிராம் ரூ.221
18-12-2025- ஒரு கிராம் ரூ.224
17-12-2025- ஒரு கிராம் ரூ.222
- தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க.விற்கு 65 ஆயிரத்து 210, அ.தி.மு.க.விற்கு 63 ஆயிரத்து 703, பா.ஜ.க.விற்கு 54 ஆயிரத்து 258, காங்கிரசிற்கு 27 ஆயிரத்து 158 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
- ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் நாகர்கோவில் சென்றடையும்.
- வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை செகந்திராபாத் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு, ஈரோடு-நாகர்கோவில், செந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு ஜங்சன் செல்லும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.
இதேபோல, ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24,31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
மேலும், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும் என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்
சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவராஜ்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் சினிமா பிரபலங்களான MGR முதல் விஜய் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் கர்நாடகாவில் ஏன் அப்படி இல்லை" என்று சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார், "மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வரணும்... நடிகராக இருந்துகொண்டே உதவி பண்ணலாம். காரணம் இது என்னுடைய பணம்... யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்" என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால் கரூர் கூட்டநெரிசலில் 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
- சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார்.
- சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.
சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.
2026 ஜனவரியில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
25-ந்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
26 மற்றும் 27ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21-12-2025 மற்றும் 22-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
- அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கடந்த 16-ந்தேதி தமிழகத்தில்; இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான 2 தினங்களில் அதாவது கடந்த 18-ந்தேதி மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்திவிட்டார்கள்.
பல லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
எனவே, அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
- சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புறநகர் மின்சார ரெயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யலாம் என்பதாலும் அதில் பயணிப்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
சென்னையில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது ரெயில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வழக்கமாக உள்ள அதே கட்டணமே நீடிக்கிறது. இதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
- என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சென்னை:
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.
அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன்.
அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.
அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை.
என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.
பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். இதற்கு பிறகு அவரும், எனது உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர்.
என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தினார்கள்.
மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர். இதில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து டாக்டர் கார்த்திகேயனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிசியோதெரபிஸ்ட் டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரியை நடத்தி வரும் நிலையில்தான் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த கொடுங்கையூர் மாணவியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இதையடுத்து கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்ற போதுதான் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதற்காக கோககோலா குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து தயாராக வைத்திருந்து உள்ளார்.
இதைதான் மாணவிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கற்பழித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிசியோதெரபிஸ்ட் டாக்டரான கார்த்திகேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு உள்ளது. பி.என்.எஸ். 123-குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை சாப்பிட கொடுத்தல், பி.என்.எஸ். 63-கற்பழிப்பு, பி.என்.எஸ். 64-கற்பழிப்புக்கான தண்டனையை உறுதி செய்யும் பிரிவு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் டாக்டர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த பாலியல் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகம் மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து 2026- 27-ம் கல்வியாண்டுக்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2026-27 கல்வியாண்டிற்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு 180-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்ற தகுதியான மாணவர்களுக்கு 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப், உயர்கல்விக்கான ஸ்காலர்ஷிப், ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கான ஸ்காலர்ஷிப் ஆகியவையும் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, 2026-27-ம் ஆண்டிலும் தகுதியான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. திறமைகளை மேம்படுத்துவதும், நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கம் ஆகும்.
2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. அதாவது 10, 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் வரை தொடர்ந்து நல்ல மதிப்பெண்களை பெற்று, பிளஸ் 2 தேர்வில் 185-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெறுவதில் நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.
தேசிய அல்லது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், உயர்கல்வி பெறுபவர்கள், ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் ஆகியோருக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.2.2026 ஆகும். விண்ணப்பங்களை https://forms.gle/Vfvry5Wru4beQ64JA என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
- இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
- 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இட்மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது சரியானதல்ல. ஏனெனில் இது மக்கள் உயிர் சார்ந்த பணி என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், அவர்களை தூண்டி விடுபவர்களும் உணர வேண்டும்.
ஒப்பந்த நர்சுகளை பொறுத்தவரை 2014-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்களை பணி அமர்த்திய போதே 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு கூலி பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற விதியையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதை ஏற்றுதான் பணியிலும் சேர்ந்துள்ளார்கள்.
ஆனால் நான்கைந்து ஆண்டுகள் யாரையும் பணி நிரந்தரம் செய்யாமல்விட்டு விட்டார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகுதான் ஆண்டு தோறும் உருவாகும், காலி பணியிடங்கள் உடனுக்குடன் விதிப்படி நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
நாளை மறுநாள் (செவ்வாய்) 169 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க இருக்கிறேன். போராட்ட குழுவினரின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.
புதிய வேலை வாய்ப்புகள் என்பது மருத்துவத்துறையின் கட்டமைப்புகள், மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கை, நிதி ஆதாரம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து அரசு எடுக்கும் கொள்கை முடிவு சார்ந்தது.
மருத்துவத் துறையில் 18 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு 35 ஆயிரம் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வளவு வெளிப்படை தன்மையாக நிர்வாகம் நடந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னதாக நேரில் சந்தித்து பேசி இருக்கலாம். அவர்களும் துறையின் அங்கத்தினர்கள் தான் தேர்தல் நேரத்தில் யாரோ தூண்டி விடுகிறார்கள். உண்மை நிலையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






