என் மலர்
அரியலூர்
- 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது.
- மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நேற்று துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து வேட்டை கும்பல் மான்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மான்களை சுட்டு வேட்டை யாடியது யார்? வேட்டைக்கு பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் துப்பாக்கியா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மான்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதில் உள்ளது பால்ரஸ் குண்டா அல்லது துப்பாக்கி குண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் தெரிய வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த பகுதியில் மான்களை வேட்டையாடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் ஒரு மான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும்.
- உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திருமானூர் அருகே இலந்தைக் கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் திருமாவளவன் எம்.பி.மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருமாவளவன் எம்.பி. நேரில் ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கணக்காணவர்களை பலி வாங்கி இருக்கிறது. இதுவரையில் 377 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. நூற்றுக்கனக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் .
வரும் 9-ந் தேதி கேரள மாநில முதல்-மந்திரியை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம்.
தமிழக அரசு அரசு பணியாளர்களின் பணி ஓய்வுக்கான வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயதை நீடிப்பதால் புதிய இளைய தலைமுறைக்கான வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்று கருத்து உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது உடனடியாக தமிழக அரசும் அவர்கள் தங்கி இருக்கிற இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது.
அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேகாலவை சந்தித்து, அரியலூரில் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், ம.தி.மு.க.வின் சார்பிலும் கோரிக்கை வைத்திருக்கிறோம் .
தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாதுவில் அணையை கட்ட முடியாது அதற்கு வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.
அரியலூர்:
2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும் வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கான குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அரியலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனால் அவர் மீது அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாராணைக்கு ஆஜராகாத கந்தர்வக் கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.
அரியலூர்:
அரியலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் விடுத்த கோரிக்கையையடுத்து மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரெயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அரியலூர் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வே ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை கட்சி நிர்வாகிகள் என கூறக்கூடாது. அவர்கள் கட்சி, ஜாதி ரீதியாக செயல்படுவதில்லை ஒரு குழுக்களாக செயல்படுகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங்கை என்ன காரணத்துக்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டறிவது தான் முக்கியமாகும். எனவே தான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இக்கொலை வழக்கில் முக்கியமான நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் திரை மறைவில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் நலனில் கருத்தில் கொண்டு தான் நிதிநிலை தயாரித்து உள்ளார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில்லை.
இப்போதும் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). சம்பவத்தன்று இவரும் இவரது மைத்துனர் சின்னதுரை ஆகிய இருவரும் நேற்று நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றர்.
பின்னர் சமையல் பாத்திரங்களை ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில் உள்ள பாத்திரக்கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள சையது சலீம் என்பவரின் ரெடிமேட் கடையின் முன்பு காரை நிறுத்தினர். உடனே சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சையது சலீம் கார்த்திக்கின் காரின் நான்கு பக்க கண்ணாடிகளையும் கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளார். உடனே இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கடை உரிமையாளர் சையது சலீமிடம் விசாரித்த போது போலீசாரிடமும் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சின்னதுரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக சையது சலீமை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதை அறிந்த சையது சலீமின் நண்பர் அப்பு என்கிற தசரதன் (28) என்பவர் கார் உரிமையாளர் கார்த்திக்கிடம் தகராறு செய்தார். இதுகுறித்து கார்த்திக்கும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து சையது சலீம், தசரதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
- கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் ரதி மன்மதன் கோவில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த சந்தனவேல் (வயது 40) என்பவர் இந்த கோவிலில் பூஜை செய்து வந்தார்.
நேற்று வழக்கம் போல காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமையில் அந்த அமைபினர் திரண்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக பாண்டுரங்கன் என்பவர் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
கோவில் பூசாரி சந்தனவேலே கோவில் சிலையை உடைத்தது தெரியவந்தது. சந்தினவேல் பூஜை செய்யும் போல அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்தனராம். இதனால் அந்த இளைஞர்களை தண்டிக்குமாறு சந்தினவேல் சாமியிடம் வேண்டுதல் வைத்துள்ளார்.
தொடர்ந்து இளைஞர்கள் கிண்டல் செய்ததால் அவர்களது தொல்லை தாங்க முடியாமல். வெறுப்புடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். பின்னர் மது போதையில் சாமி சிலையை அடித்து உடைத்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து பூசாரி சந்தினவேலுவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் வைத்த வேண்டுதலை சாமி நிறைவேற்றாததால் சிலையை உடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
- சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து.
- தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது
சங்கீதா - பாலமுருகன் தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய் சங்கீதா குழந்தையை தூக்கி கொண்டு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை. பின்னர் குழந்தையை தேடியதில் வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூடநம்பிக்கையால் தாத்தா வீரமுத்துவே பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து எனவும் குடும்பத்திற்க்கு கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால் தண்ணீர் பேரலில் போட்டு குழந்தையை அவரது தாத்தாவான வீரமுத்து கொலை செய்தது நாடகம் ஆடியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து வீர முத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
- தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.
அரியலூர்:
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல். திருமாவளவனிடம் வழங்கினார்.
பின்னர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அளவில் 400 இடங்களை வெல்வோம் என்று கூறிய மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இது சங்பரிவார் அமைப்பிற்கும், பொது மக்களுக்கும் இடையே நடைபெற்ற போர். இந்த போரில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது சங்பரிவார் அமைப்புக்கும் மோடிக்கும் பின்னடைவு.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஷின்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்கி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க உதவ வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தற்பொழுது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தார் போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாகியுள்ளது.
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., ஆகியவை அங்கீகாரத்தை இழந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களின் ஆதரவுடன் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாக வாக்களித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2 முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை விட வேற எந்த வளர்ச்சி திட்டங்களையும் என்னால் செய்ய முடியவில்லை.
தற்பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால், ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் என்னால் முடிந்த வளர்ச்சிப் பணிகளை பாராளுமன்ற தொகுதிக்கும், தமிழகத்திற்கும் செய்வேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கா.சொ.க.கண்ணன், சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
- அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன.
- அகழ்வாராய்ச்சி பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு ராட்சத பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரலாறு சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் சோழர்கள் வாழ்ந்த அரண்மனை பகுதி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
தற்பொழுது தமிழக அரசின் உத்தரவுன்படி தொல்லியல் துறை சார்பில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகின்றன. இதில் சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு காசுகளை உருவாக்க அச்சு சுடுமணன் ஆன முத்திரை என அரிய வகையான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் சாலைகள் அமையப் பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன.
மேலும் இந்த அகழ்வாராய்ச்சி பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு ராட்சத பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் பந்தல் அடியோடு சாய்ந்தது.
இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ராட்சத பந்தலை சரிசெய்ய வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பதுங்கி இருந்த மோசாவை போலீசார் கைது செய்தனர்.
- மோசாவை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அறிவு உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் அன்னிமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ப.இளவழகன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் வக்கிலாக பணிபுரிந்து வருகிறார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார். சுற்றுலா வளர்ச்சித்துறை முன்னாள் தலைவராக பதவிவகித்தவர்.
தற்போது இவர் அரியலூர் அழகப்பாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் உள்ள வங்கிக்கு சென்று அவரது கணக்கில் ரூ.50ஆயிரம் எடுத்து காரின் பின்புறம் சீட்டில் வைத்தார். பின்னர் முன்பக்கமாக வந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது அதில் இருந்த பணத்த காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது சம்பந்தமாக அரியலூர் போலீசில் புகார்செய்தார். போலீசார் தீவிர விசாரனை செய்தததில் இளவளகனிடம் பணத்தை திருடி சென்றது ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த மோசா(33) என தெரியவந்தது.
இளவழகன் வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்ட அவர் அவரை பின் தொடர்ந்து வந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து அரியலூர் செந்துறை சாலை அமீனாபாத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பதுங்கி இருந்த மோசாவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மோசாவை போலீசார் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மோசாவை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அறிவு உத்தரவிட்டார். இதையடுத்து மோசா அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுக்குறித்து மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை அலுவலர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் விசாரணை செய்து வந்தார்.
அப்போது சின்ன வளையம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெருவைச் சேர்ந்த மெய்யப்பன் மகன் பாண்டியன் (61), பெரிய வளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மகாமணி மகன் தமிழ்ச்செல்வன் (39) ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
- 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.
- பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன். வீரனார் மற்றும் ஊருக்கு வெளியே காட்டில் காவல் காக்கும் அய்யனார் கோவில் என 3 கோவில்கள் அப்பகுதி மக்களால் திருப்பணி செய்யப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. இதன் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.
இதனையடுத்து ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன், வீரனார் மற்றும் ஐயனார் கோயில் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து நெல் பூக்கள் நவதானியங்களுடன் புனித நீரானது பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
இதில் கிராம நாட்டாண்மைகள், மண்டகபடி வகையறாவினர், நடுவலூர் ஜல்லிக்கட்டு பேரவை உட்பட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் கிறிஸ்துவ பாதிரியார்கள் ராபர்ட், ஜோசப் தன்ராஜ் ஆகியோர் பங்கேற்றது.
இது மதநல்லிணத்தை எடுத்துக்கட்டும் விதமாக அமைந்தது. கும்பாபிசேகம் நடைபெறும்போது பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.
இந்து கோவில் கும்பாபிஷேகத்தில் கிருஸ்வர்கள் கலத்து கொண்டது மத நல்லிணக்கத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையும் எடுத்துக்காட்டுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






