என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
    • ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார்.

    இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் வைத்தார். ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.

    சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.

    நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 



    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் 2009ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தார்.
    • தெலுங்கானா முதல் மந்திரியாக காங்கிரசின் ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

    ஐதராபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவர் 2009ம் ஆண்டில் காங்கிரsil சேர்ந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சபையில் முகமது அசாருதீனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நியமன மந்திரியாக முகமது அசாருதீன் இடம்பெற்றுள்ளார். தெலுங்கானா மந்திரியாக அசாருதீன் இன்று பதவியேற்றார்.

    கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வி அடைந்தார். தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசாருதீன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
    • குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்தவர் 78 வயது முதியவர். இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.

    குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிபிஐயின் நோட்டீஸ்களை காட்டினார். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முதியவர் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.51 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கு முடிந்த பிறகு நீங்கள் அனுப்பும் பணத்தை மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் என கூறினார்.

    போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் டிஜிட்டல் கைது மூலம் தான் ஏமாற்றப்பட்டுதை அறிந்த முதியவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.

    வரும் வெள்ளிக்கிழமை அன்று அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நவம்பர் 11 அன்று ஐதராதாபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

     2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார்.
    • சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    கிராமத்தில் யாராவது விமானத்தில் பயணம் செய்தால், முழு கிராமமும் அதைப் பற்றி விவாதிக்கும். தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து அசத்தி உள்ளனர்.

    நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டலம், குட்லனர்வா கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் நேற்று இரவு ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் குதூகலமாக பயணம் செய்தனர்.

    மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகராட்சியின் முன்னாள் மேயரான மேகலா காவ்யாவின் தந்தை மேகலா அய்யப்பா, இவர் தனது சொந்த கிராம மக்களுக்கு மறக்கமுடியாத ஒன்றைச் செய்ய விரும்பினார்.

    கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, அவர் சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    தனது சொந்த கிராம மக்கள் 500 பேரை 2 விமானங்களில் கோவாவுக்கு அழைத்துச் சென்றார்.

    இந்த நிகழ்வில் பேசிய காவ்யா, தனது தந்தை ஒரு எளிய விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ந்தார்.

    அவருடைய கிராம மக்களின் கண்களில் மகிழ்ச்சியைக் காண கோவாவில் மகன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தார். அனைத்து கிராம மக்களையும் விமானத்தில் அழைத்து வந்தார். கிராம மக்கள் 500 பேரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர்களின் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கருதி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெடா அடுத்த கோஹோடாவை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் ராகேஷ் ( 21) மற்றும் ஸ்ரீஜா (18).

    3 பேரும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் வைஷ்ணவிக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வைஷ்ணவி இறந்த தகவல் ராகேஷுக்கு தெரிய வந்தது. இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அவர் அந்த அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது. நெருங்கிய நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அதிகாலை ஸ்ரீஜாவின் தந்தை வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். படுக்கை அறைக்குச் சென்ற ஸ்ரீஜா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
    • மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.

    தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பர் 11-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறகிறது. பாரத ராஷ்டிர சமிதி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. கோபிநாத்தின் மனைவி சுனிதா போட்டியிடுகிறார்.

    அங்கு பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் நள்ளிரவைத் தாண்டியும் மனுக்கள் பெறப்பட்டன. 211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. சிலர் இருமுறை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. 81 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 130 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.

    • பிரம்மோற்சவ விழாவின்போது சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
    • இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய படி நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் ஜட் சர்லா அடுத்த கங்காபுரத்தில் லட்சுமி சென்ன கேசவ சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின்போது சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.

    பின்னர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களின் தலையில் சாமியின் செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றனர்.

    இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய படி நடந்து வருகிறது. சாமியின் செருப்பால் ஆசீர்வாதம் வாங்கும் பக்தர்களை சாமி நலமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை என தெரிவித்தனர். 

    • சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை
    • ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    தெலுங்கானாவில் மகன் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். BC சமூகத்தை சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்ற பட்டியலின (ST) பெண்ணை காதலித்து மணந்தார்.

    சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்து வந்துள்ளார்.

    தற்போது ராணி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சட்டையாவின் சாதிவெறி ரத்த வெறியாக மாறியுள்ளது. நேற்று(சனிக்கிழமை) கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கமின்றி கோடரியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சட்டையாவை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.   

    • போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
    • அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.

    பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
    • விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதாபத்தில் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருந்து மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    ரஹமான் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இவரது அட்டூழியம் தினமும் நீடித்தது.

    இதனால் 3 மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ரஹமான் மாணவிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 5 போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.

    ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் விடுதிக்கு சென்று அங்கு தங்கி உள்ள மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி மிரட்டி பலாத்காரம் செய்ததாக சில மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    காவலாளி ரஹமான் மேலும் சில மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி நிர்வாகிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    அதிக அளவில் பாலியல் புகார்கள் வந்ததால் போலீசார் ரஹ்மானை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×