என் மலர்
இந்தியா

டிஜிட்டல் கைது மோசடி - ரூ.51 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்
- செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
- குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்தவர் 78 வயது முதியவர். இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிபிஐயின் நோட்டீஸ்களை காட்டினார். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முதியவர் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.51 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கு முடிந்த பிறகு நீங்கள் அனுப்பும் பணத்தை மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் என கூறினார்.
போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் டிஜிட்டல் கைது மூலம் தான் ஏமாற்றப்பட்டுதை அறிந்த முதியவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






