என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர்.
    • தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    மதுரை:

    மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலியான விவகாரத்தில் மதுரை கே.கே. நகர் தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    • ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
    • ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

    அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்து இருந்தது.

    இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
    • தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. அணையில் இருந்து தடுப்பணை வழியாக பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    ஆழியாறு வரும் சுற்றுலாபயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆறு மற்றும் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடையை மீறி குளித்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து தடுப்பணையில் சுற்றுலாபயணிகள் குளிப்பதை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை, அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஏற்கனவே அணை, தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடையை மீறி செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தடுப்பணை, அணை பகுதிகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. மேலும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே உள்ள பகுதி, பாலம், பள்ளி விளங்கால் தடுப்பணைக்கு செல்லும் பகுதி, தடுப்பணை என 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி அரசிடம் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
    • இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.

    விழாவின் முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சம்-சிம்ம வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.

    2-ம் நாளில் (30-ந்தேதி) காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு பூதம்-அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார்கள். 1-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    4-ம் நாளில் (2-ந்தேதி) காலை 9 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சின்னடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளுகிறார்கள். மாலை 6 மணி அங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி-அம்பாள், மாலை மீண்டும் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.

    5-ம் நாள் (3-ந்தேதி) காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் மாசி வீதிகள் வழியாக வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் எழுந்தருளுகிறார்கள். இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.

    6-ம் நாள் (4-ந்தேதி) காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் வீதி உலாவும், இரவு தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் நாள் (5-ந்தேதி) காலை கங்காளநாதர் மர சிம்மாசனத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதி வழியாக உலா வருகின்றனர். இரவு நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.

    8-ம் நாள் (6-ந்தேதி) காலை தங்க பல்லக்கில் சுவாமி-அம்பாள் அருள் பாலிக்கின்றனர். இரவு 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் வைபவம் நடக் கிறது. மறுநாள் (7-ந்தேதி) காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து மீனாட்சி அம்மன் வெற்றி பெறும் திக்குவிஜயம் நடக்கிறது. இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.

    மறுநாள் (9-ந்தேதி) அதிகாலை 5.05 மணி முதல் 5.28-க்குள் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங் குகிறது. பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வரும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று இரவு சப்தவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.

    12-ம் நாள் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். இத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே12-ந்தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.

    • நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சம்பவத்தன்று இரவு நடுவட்டம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.

    தொடர்ந்து ஒவ்வொரு அறையாக சென்று சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தது. ஆனாலும் போலீஸ் நிலையத்தில் சிறுத்தைக்கு தீனி எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுத்தை பின்னர் மெதுவாக வெளியே புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.

    இந்த காட்சிகள் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ச்சியாக காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    • ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.
    • நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    சமீப காலமாக இளைஞர்களும், இளம்பெண்களும் சமூக வலைதளங்களால் தங்களது எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர். தனது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தை உணராமல் வீடியோ எடுக்கச்சென்று உயிரினை இழப்பதும், ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பொது மக்களின் கண்டனங்களை பெறுவதோடு போலீசாரின் நடவடிக்கைக்கும் உள்ளாகி தங்களது எதிர்காலத்தை இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் சிறுவர்-சிறுமிகளும் இன்ஸ்டா மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு ரீல்ஸ் செய்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் இடம், பொருள் அறியாமல் அனைத்து இடங்களிலும் ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமி ஜோடி ஒன்று தக்லைப் படத்தின் புதிய பாடல் ஒன்றுக்கு முகம் சுளிக்கும் வகையில் ஆட்டம் போட்டு அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    ஹயகிரீவன் என்பவரது இன்ஸ்டா பக்கமான விஜே ஹயாஸ் என்ற பக்கத்திலும், அதே போல் சாக்கோ 36 என்ற இன்ஸ்டா பக்கத்திலும் நடிகர்கள் கமல்ஹாசன்-சிம்பு ஆகியோர் ஆடும் அந்த பாடலுக்கு சிறுவர்-சிறுமி 2 பேரும் சேர்ந்து ஆடிய அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    பாண்டிய நாட்டின் பெருமைமிகு சிவ தலமான நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்களுடன் கூடிய தனித்தனி சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.

    கோவிலில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருவதுடன் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு கண்காணிக்க கூடிய பணி நடந்து வருகிறது.

    அப்படியிருக்க, சிறுவர்-சிறுமி இருவரும் ரீல்ஸ் நடனமாடியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்டா மோகத்தில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் தற்போது நெல்லையப்பர் கோவிலிலும் அந்த சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடத்தில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடக்காது என சிவனடியார்கள் கூறுகின்றனர்.

    • 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    • பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதலமைச்சரால் 18.11.2023 அன்று சட்டசபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந்தேதியன்று பிறப்பித்த தீர்ப்பின்படி, அந்த மசோதாக்களுக்கு 18.11.2023 அன்றே ஒப்புதல் பெறப்பட்டதாக கருதப்படுகிறது.

    அந்த பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும், மாற்றுத்திறன் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016-ன் (மத்திய சட்டம்) 3-ம் பிரிவின்படி, பல்கலைக்கழகங்களின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவதற்கு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான தகுதியின்மையை நீக்குவதற்கு, சில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்து உள்ளது.

    மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மசோதா இன்று அவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

    • விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
    • தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கே.கே. நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர்.

    தற்போது 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது.

    இன்று காலை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அந்த பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதன் அருகி லேயே தண்ணீர் தொட்டி உள்ளது. போதிய பாதுகாப்பின்றி தண்ணீர் தொட்டி திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆருத்ரா ஆபத்தை உணராமல் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட மழலையர் பள்ளி செயல் பட்டது குறித்து தெரிய வில்லை. விதிகளை மீறி செயல்பட்டதும், குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
    • போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் இன்று இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கள்ளச்சாராய ஆட்சிக்கு!

    கள்ளக்குறிச்சியே சாட்சி!

    சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!

    பெண்கள் பாதுகாப்பின்மைக்கு

    அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!

    போதைப் பொருள் கடத்தலுக்கு

    திமுக அயலக அணியே சாட்சி!

    போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!

    ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!

    Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.

    இதில் இன்று Version 2.0 Loading ஆம்!

    அ.தி.மு.க. ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!

    2026-ல் ஒரே version தான் - அது அ.தி.மு.க. version தான்!

    மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என்று கூறியுள்ளார். 



    • வருகின்ற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலர் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • தேக்கடி சுற்றுலா தலத்துக்கு கோடை விடுமுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    மேலசொக்கநாதபுரம்:

    கோடை விடுமுறை தொடங்கியுள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகியவற்றை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு சுற்றுலா தலங்களில் ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி தேக்கடி சுற்றுலா தலத்துக்கு கோடை விடுமுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    அடுத்தபடியாக மூணாறு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கேரள அரசின் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 2019ம் ஆண்டு மூணாறு-மதுரை சாலையில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 4.5 கோடி செலவில் புதிய தாவரவியல் பூங்காவை உருவாக்கியது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    வருகின்ற மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலர் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ரோஜா, ஜெரோனியா, டேலியா, ஜெரிபரா, ஐஸ்வர்யா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பூ வகைகள் சுமார் 20,000 செடிகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள தமிழக எல்லைப் பகுதியில் மக்களை மிரட்டி வந்த அரிக்கொம்பன் யானையை நினைவுபடுத்தும் வகையில் யானையின் உருவத்தை தத்ரூபமாக பைபர் மூலம் வடிவமைத்து அதன் அசல் செயல்பாடுகள் போலவே காதுகளையும் தும்பிக்கையையும் அசைக்குமாறு எந்திரம் மூலம் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளது. தற்போதே அந்த யானை அருகில் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிதாக பல இடங்களில் வண்ண விளக்கு அலங்காரங்களுடன் இசையுடன் கூடிய நீர் அருவி செல்பி பாய்ண்டுகள், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளாவின் முக்கிய அடையாளங்களான அரி கொம்பன் யானை உருவம், கதகளி நாட்டிய உருவம் காட்டெருமை போன்ற உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டதுடன் மலர்கள் மற்றும் இலைகளால் டைனோசர் உருவங்கள், மர அணில்கள் உருவங்கள் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சட்டசபையில் முன்வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் பொன்முடி அமர்ந்து வந்தார்.
    • செந்தில் பாலாஜிக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு சட்டசபையில் 2-வது வரிசையில் கடைசிக்கு முந்தைய இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் முன்வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் பொன்முடி அமர்ந்து வந்தார். தற்போது அந்த இருக்கை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் பதவியை இழந்த பொன்முடிக்கு சட்டசபையில் மூன்றாவது வரிசையில் கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கும் 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்தவர் கவிஞர் பாரதிதாசன்.
    • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,

    மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

    என்று தமிழ் மொழியின் பெருமைகளை முழங்கி, மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்து, தன் வாழ்நாள் முழுவதும் தமிழை உயிருக்கு நிகராக கருதி தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×