மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு - 4 ஆசிரியர்கள் கைது

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு - 4 ஆசிரியர்கள் கைது
Published on

மதுரை:

மதுரை கே.கே. நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர்.

தற்போது 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது.

இன்று காலை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அந்த பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதன் அருகி லேயே தண்ணீர் தொட்டி உள்ளது. போதிய பாதுகாப்பின்றி தண்ணீர் தொட்டி திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆருத்ரா ஆபத்தை உணராமல் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட மழலையர் பள்ளி செயல் பட்டது குறித்து தெரிய வில்லை. விதிகளை மீறி செயல்பட்டதும், குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com