என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது
    • அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை ரெயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில், "கடந்த 20 ஆம் தேதி தாம்பரத்தில், கடற்கரை நோக்கிச் செல்லும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை, டிக்கெட் பரிசோதனை ஊழியரான நிதிஷ் குமார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

    அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இது அவரது கடமை உணர்வையும் பயணிகளின் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மை காலமாக ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அணைக்கு வினாடிக்கு 695 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • தற்போது அணையில் 78.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 695 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 78.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • தேவாலயங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளவும், போலீஸ் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை முதல் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதன்காரணமாக, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் நாளை இரவு முதல் 2 நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனிதஜார்ஜ் (கதீட்ரல்) தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்பட சென்னையில் உள்ள முக்கியமான 350 கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் இந்த பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து செல்லும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து கைது செய்யவும் போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல இருக்கின்றனர்.

    மேலும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தேவாலயங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளவும், போலீஸ் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    மோட்டார் சைக்கிள் பந்தயம், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது.
    • தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (நவம்பர்) வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தையும், ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் விலை அதிகரிக்கத்தான் செய்யும் என பேசப்பட்ட சூழலில், அடுத்த நாளே விலை 'மளமள'வென சரிந்து காணப்பட்டது. பின்னர் மீண்டும் கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

    இப்படியாக விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம், பிற்பகல் நிலவரப்படி, மேலும் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது. ஏற்கனவே தங்கம் விலை கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த விலையையும் 'ஓவர்டேக்' செய்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

    உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், பெருமுதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தையே சார்ந்து இருப்பது, போர் பதற்றச் சூழல் இன்னும் சில நாடுகளில் முடிவுக்கு வராதது உள்ளிட்ட காரணங்கள் முக்கியமானவையாக சொல்லப்படுகிறது.

    அதிலும் சமீபத்தில் அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,160-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 234 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560

    21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

    18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-12-2025- ஒரு கிராம் ரூ.231

    21-12-2025- ஒரு கிராம் ரூ.226

    20-12-2025- ஒரு கிராம் ரூ.226

    19-12-2025- ஒரு கிராம் ரூ.221

    18-12-2025- ஒரு கிராம் ரூ.224

    • அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் அதாவது நாளை முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளது.
    • விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 5-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், பிற வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்றுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது.

    தேர்வு முடிந்ததும், நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. பள்ளிக்கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டது போல, அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் அதாவது நாளை முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 5-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

    அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • இந்த கட்டிடத்தின் முகப்புகளிலும், உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.
    • தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை:

    நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறியசெய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திறந்து வைத்தார்.

    இந்த அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டிடத்தொகுப்புகள் 54,296 சதுரஅடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தொகுப்பும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கட்டிடத்தின் முகப்புகளிலும், உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன. இவற்றுடன் நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பொருநை அருங்காட்சிகத்தினை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

    மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் சென்று பார்வையிட வசதியாக பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

    இன்று நெல்லை சந்திப்பில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. பொருநை அருங்காட்சியம் செல்வதற்கு திங்கள் முதல் சனி வரை தினசரி நெல்லை சந்திப்பில் இருந்து 11 நகர பஸ்களும், விடுமுறை நாட்களில் கூடுதலாக 7 நகர பஸ்களும், நெல்லை சந்திப்பிலிருந்து வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சாராள் தக்கர் கல்லூரி, விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு இயக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தில் அதே வழியில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நொய்டாவில் ஒருவர் புளூடூத் ஸபீக்கர்கள், ரோபோ வாக்வம் கிளீனர் போன்றவற்றை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சத்துக்கு வாங்கி உள்ளார்.
    • பெங்களூருவாசிகள் நல்ல வாடிக்கையாளர்கள். தாராளமாக டிப்ஸ் கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    இந்தியர்கள் ஆன்லைனில் எப்படி பொருட்களை வாங்குகிறார்கள் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியர்களிடம் ஐபோன்கள் முதல் பால் வரை, தங்கம் முதல் காய்கறிகள் வரை, சிப்ஸ் முதல் கறிவேப்பிலை வரை அனைத்தையும் இணையதளம் வழியாக ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் ஆணுறை வாங்க ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். அவர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆகும்.

     

    ஆணுறை விற்பனை ஆன்லைனில் படுஜோராக நடக்கிறது. ஒவ்வொரு 127 ஆர்டருக்கும் ஒருதடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி கூறி உள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்து இருந்ததாம். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 3 ஐபோன்களை ரூ.4.3 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இது இந்த ஆண்டில் ஒரு நேரத்தில் ஒருவரின் அதிகபட்ச தொகைக்கான ஆர்டர் என்று கூறி உள்ளது.

    நொய்டாவில் ஒருவர் புளூடூத் ஸபீக்கர்கள், ரோபோ வாக்வம் கிளீனர் போன்றவற்றை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவர், சர்க்கரை இல்லாத ரெட்புல் பானம் வாங்க ரூ.16.3 லட்சம் செலவிட்டு உள்ளார். இதேபோல சென்னையை சேர்ந்த ஒருவர் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களுக்கு மட்டும் ரூ.2.41 லட்சம் செலவு செய்திருக்கிறார். பெங்களூருவாசிகள் நல்ல வாடிக்கையாளர்கள். தாராளமாக டிப்ஸ் கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
    • தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு வகையான நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைவசம் உள்ள நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகிறார்கள்.

    வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

    தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்துவதில்லை. மேலும் நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.

    இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருந்தது. நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

    தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.
    • Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்..

    தமிழ்நாட்டின் இளம் சாம்பியன்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ரோமோ வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்...

    நான் ரெடி! நீங்க ரெடியா! " என குறிப்பிட்டுள்ளார்.

    • மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    விழாவில், தீரர்கள் கோட்டம் திமுக, திராவிட அரசியல் திராவிட அரசு இயல், முறைசெய்து காப்பாற்றும் முதல்மைச்சர் நூல்கள் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.

    மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு அடையாளமாக இருப்பதால் ஆதிக்கவாதிகளுக்கு திராவிட இயக்கம் எரிகிறது கசக்கிறது.

    நாம் திராவிட மாடல் என்று சொல்ல சொல்ல எரிகிறது, அவர்களுக்கு எரிய வேண்டும் என்று நாம் திரும்ப திரும்ப சொல்கிறோம்.

    திமுக நிச்சயம் நூற்றாண்டு விழா காலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழகத்தை வெற்றிக்கு அழைத்து செல்லும்.

    கட்டுக்கோப்பாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை தீரர்கள் கூட்டம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

    அரசியலில் பலரும் சொகுசான வாழ்க்கையை எதிர்பார்த்து வருகிறார்கள். அரசியலில் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து உள்ளது.

    சமூக நீதி கருத்தியலைக் காப்பது, கல்வி நிலையங்களை உருவாக்குவது திமுகவின் சாதனை.திராவிட மாடல் அரசு அனைவருக்குமானது என்பதையே இந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
    • வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் மூலம் அதிக அளவிலான பயணிகள் தற்போது பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிலும் குறிப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வரும் புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு முடிவு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அதிக அளவிலான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவார்கள்.

    இதன் எதிரொலியாக தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,765 நிர்ணயிக் கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறையை முன்னிட்டு ரூ.9,046 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோன்று பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,573 இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.8,655 ஆகவும், ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.5,321 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.15,529 ஆகவும்,

    மும்பையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.6,119 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.13,306 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்ல விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×