என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
- முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- தேவாலயங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளவும், போலீஸ் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை முதல் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதன்காரணமாக, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் நாளை இரவு முதல் 2 நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனிதஜார்ஜ் (கதீட்ரல்) தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்பட சென்னையில் உள்ள முக்கியமான 350 கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மேலும் இந்த பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து செல்லும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து கைது செய்யவும் போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல இருக்கின்றனர்.
மேலும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தேவாலயங்கள் இருக்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளவும், போலீஸ் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பந்தயம், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






