என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில்  பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.

    சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,

    தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இங்கு வந்த மர்ம நபர்கள் பந்தலில் தீ வைத்து சென்று விட்டனர்.

    தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து எரியோடு அ.தி.மு.க. செயலாளர் அறிவாளி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதன் அருகே அரசு பள்ளி, போலீஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் நடந்த தீ விபத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் தீ வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!
    • “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்!

    உலக அகதிகள் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உலகெங்கிலும் உள்ள அகதிகளை கௌரவிக்கும் ஒரு சர்வதேச தினமாகும். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ந்தேதி நினைவுகூரப்பட்டு வருகின்றது.

    இந்தநிலையில் உலக அகதிகள் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

    மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

    நமது #DravidianModel-இல் "அகதிகள் முகாம்" என்பதை "மறுவாழ்வு முகாம்" எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!

    போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும்.
    • ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பறக்கும் ரெயில் திட்டத்துடன் இணைக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தும் பேசினார்.

    இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இது தொடர்பாக மனுவும் வழங்கினார்.

    அதில் உள்ள முக்கிய முன்னுரிமைகளில் சென்னை மெட்ேரா ரெயில் பறக்கும் ரெயில் திட்டம் இணைப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பறக்கும் ரெயில் திட்டத்தில் வேளச்சேரி-ஆலந்தூர் இடையே 500 மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் பறக்கும் ரெயில் திட்டம் முழுமை அடைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் இணைக்க வழிவகை காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆலந்தூர் மெட்ரோ-பறக்கும் ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.
    • கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியிட்டது.

    கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக வாய் திறக்காதது குறித்து திமுக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டூனுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது. அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள். கீழடி குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்" என தெரிவித்துள்ளார்.  

    • மெயின் அருவி, ஐந்த ருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    தருமபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணையின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று 6,500 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்த ருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    • நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,265-க்கும், ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்தது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது.

    இதனையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் விலை அதிகரித்தது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,265-க்கும், ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்தது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120

    18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000

    17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600

    16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-06-2025- ஒரு கிராம் ரூ.120

    18-06-2025- ஒரு கிராம் ரூ.122

    17-06-2025- ஒரு கிராம் ரூ.120

    16-06-2025- ஒரு கிராம் ரூ.120

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து புறப்பட்டது.
    • முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரை கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்பட்டவுடன் மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விமானி சுமார் அரை மணி நேரம் பறந்த பிறகு கோளாறைக் கண்டறிந்து, திரும்பிச் செல்ல அனுமதி கோரியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் 68 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    • கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 விமானம் தரையிறங்க இருந்தது.
    • இந்த விவகாரம் குறித்து விமானி புகார் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 4வது முறையாக இன்று தரையிறங்கயிருந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

    லேசர் ஒளி மறைந்த பிறகு விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதன் பின் இந்த விவகாரம் குறித்து விமானி புகார் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பயணிகளின் வசதிக்காக வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.

    எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறுவதற்கு தாம்பரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் ஆகஸ்டு 18-ந்தேதி வரையில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.

    * கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

    * செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    * கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

    * கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

    *கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.

    * அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட ரெயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாட்களில் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும்.

    * ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரெயில் மட்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்ரையில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தேசத்திற்கு சேவை செய்யும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    • மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிலும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உயரும் என சொல்லப்பட்டது.

    அதன்படி, மதுரை விமான நிலையம் 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), மதுரை நகரம் 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), கடலூர் 100.93 டிகிரி (38.3 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), ஈரோடு 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) ஆகிய 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடல் காற்று நிலப்பகுதிக்குள் வராத காரணத்தினால் இந்த நிலை இருந்தது. ஆனால் நேற்று கடல் காற்று ஓரளவுக்கு வந்ததால், வெப்பம் சற்று குறைந்ததை உணர முடிந்தது.

    வருகிற 25-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும், அதன் பிறகு பகலில் வெப்பமும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ×