என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 22-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
    • வீடியோவில், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பச்சிளங் குழந்தைகள் தரையில் படுக்க வைத்துள்ள படியும், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கு, கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " சம்பந்தப்பட்ட 2 பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு அருகே கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மெத்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.

    சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சேதமடைந்த மெத்தையை அப்புறப்படுத்தப்படுத்தி உள்ளோம். தற்போது நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் இருப்பு உள்ளன" என்றார்.

    • கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.
    • உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு

    பாஜக சார்பாகக் கண்டனங்கள்.

    மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.

    தற்போது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. திருச்சி சிவா அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் புகழ்கிறேன் என கர்மவீரர் காமராஜர் அவர்களைக் குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

    தன் மறைவுக்கு முன்பு திரு. கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகவும், மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் அவர்கள் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் திரு. கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளார்.

    ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.

    அதோடு எமர்ஜென்சியின் போது காமராஜரைக் கைது செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்த திருமதி. இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. திரு. காமராஜர் அவர்களை அன்று திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கைது செய்திருந்தால் தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும், இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவிற்கு எதிராகவும் நிச்சயமாக வெகுண்டெழும்.

    மேலும், திருமதி. இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து தான் காங்கிரஸ் அன்று உடைந்தது. அப்போது திரு. காமராஜர் அவர்களை எதிர்த்துக் கொண்டு இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்தது யார்? இதே திரு. கருணாநிதி தலைமையிலான திமுகதானே?

    காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான். அவர்களுடைய ஆழ் மனதின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது. சட்டமன்றத்திலேயே காமராஜரின் அருஞ்செயலை திரு. கருணாநிதி மீது ஏற்றிக் கூறினார் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள். காமராஜருக்கே கல்லறை கட்டினோம் எனக் கொச்சையாகப் பேசினார் திரு. RS பாரதி. அதே வரிசையில் அவதூறை அள்ளித் தெளித்துள்ளார் திரு. திருச்சி சிவா.

    உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது. அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தப்படியே கூட்டணியில் தொடருகிறது.

    கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பாஜகவும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

    • தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
    • திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

    காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும்.

    தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

    அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .

    அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

    எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

    காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.

    காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும். அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா.
    • திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதுமுள்ள உயர்கல்வி நிலையங்களில் போதிய பேராசிரியர்களை நியமிக்காது இழுத்தடிக்கும் அவலத்திற்கு மத்தியில், தற்போது அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேரின் ஒப்பந்தத்தையும் நீட்டிக்காது திமுக அரசு அலட்சியம் காட்டிவருவது கண்டனத்திற்குரியது.

    நிரந்தர பேராசிரியர்களை நியமித்து மாணவர்கள் நலனைப் பாதுகாக்கத்தான் அக்கறை இல்லை என்றால், ஒப்பந்தத்தை நீட்டித்து, தற்போது இருக்கின்ற பேராசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட மனமில்லையா? கிட்டத்தட்ட 332 தற்காலிக பேராசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தையும் வழங்காது காலந்தாழ்த்துவது ஏன்? தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா?

    ஆக மொத்தத்தில், பள்ளிக்கூடங்களில் இருந்து உயர்கல்வி நிலையங்கள் வரை கல்வித்துறையைக் கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை என கூறினார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு
    • எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது, திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

    மேலும், அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்.

    அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.

    • சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • அப்போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.

    கடலூர்:

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநாடு, கொடிக் கம்பம் நடுவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சீட்களைக் குறைத்து விடுவார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. எதற்காக அசிங்கப்படுகிறீர்கள்?

    தி.மு.க. கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.

    • தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 10 மாதம் உள்ள நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக் ஆகியவை முன்கூட்டியே தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 17-7-2025 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

    • திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?
    • பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா?

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    வாஜ்பாயுடன் கலைஞர் இருந்த புகைப்படத்தை காண்பித்து மக்களிடையே எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சி அதிகாரம் வேண்டுமெனில் திமுகவினர் யார் காலில் வேண்டுமானாலும் விழுவர்.

    திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?

    பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா?

    பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை. அதிமுக தொண்டனையும் யாராலும் பயமுறுத்த முடியாது.

    சட்டமன்றத்திலேயே பெண் என்றும் பாராமல் நமது அம்மாவை தாக்கிய திமுக தற்போது நமக்கு சவால் விடுகின்றன.

    ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு எத்தனையே முயற்சிகள் நடைபெற்றன. எந்த கொம்பனும் அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை மு.க.ஸ்டாலின் உடைக்க பார்த்தார்.

    பாஜகவை பார்த்து ஸ்டாலின் தான் பயப்படுகிறார். பிரதமர் மோடிக்கு வெள்ளை குடை பிடித்து வேந்தராகிறார் ஸ்டாலின்.

    இந்த நாட்டையே ஆளும் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு உதயநிதிக்கு.

    கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடியை அழைத்தனர், வரவேற்பு, ரோடு ஷோ நடத்தினார்.

    திமுக போல் இரட்டை வேடம் போடும் கட்சி அதிமுக கிடையாது.

    கூட்டணி வைத்துவிட்டார்களே, ஆட்சி பறிபோய்வுடுமே என்ற அச்சத்தில் உள்ளார் மு.க.ஸ்டாலின்.

    நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், உங்களுக்கு ஏன் பயம்?

    இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

    சட்டமன்றத்திலேயே கூட்டணி குறித்து என்னிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு பயப்படுகிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?
    • இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து எடப்படி பழனிசாமி விளம்பரம் செய்து வருகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திரு. ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

    "உங்களுடன் ஸ்டாலின்" ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன்,

    அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?

    "சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி அதிமுக ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே... உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க?

    ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்?

    இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?

    பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?

    -2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே?

    -அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி.

    -2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி.

    -புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக.

    -2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி.

    -2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக.

    -2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை.

    -ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.

    -2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு "எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை" ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல.

    அதிமுக ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்!

    -2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே... அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் திமுக?

    இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி

    மு.க.ஸ்டாலின் பேசலாமா?

    இதில் சினிமா வசனம் வேறு... "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட" என்று கூறுகிறார்...

    திரு. ஸ்டாலின் அவர்களே... "நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட" என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க!

    இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே... "யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ன்னு நம்ப வெச்சுட்டாங்க" என்று....

    அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், "இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்" என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல...

    Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன், "திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!"

    அன்பார்ந்த தமிழக மக்களே- நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், திரு. ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் #ByeByeStalin அவரை கதற விடுகிறது.

    இன்னும் கதற விடுவோமா? 234 தொகுதிகளிலும் சொல்வோமா?

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
    • மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.

    பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு

    திமுக அரசு வெட்கப்பட வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது.
    • தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

    சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×