என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று (ஷஜனவரி 12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்பாடயினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால் மீனவ சமுதாயத்தினரிடையே அச்சமும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது பாரப்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதாக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும். அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
- எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
- தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்க ளது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு பால் ஊற்றி, அது பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், விவசாயப் பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதோடு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த சரத்குமார் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்த இனிய அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், நமது தேசமும், நாட்டின் மக்களும் என்றென்றும் செழுமையாக, பசுமையாக, வளமாக, ஆரோக்கியமாக இருக்கவும், உலகிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் உள்ளமும், இல்லமும் மகிழ்வுற்று வாழ்வு சிறக்கவும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போம்.
வட இந்தியாவில் சங்கராந்தி திருநாளாகவும், பிற மாநிலங்களில் பிஹூ, உத்தராயன், போகி என கொண்டாடப்படும் நாடு தழுவிய அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்வோருக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும்.
- சென்னை மாநகரில் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். அப்போது டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் பியூரன் உள்ளிட்டவை வெளியாகும்.
இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். மேலை நாடுகளில் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர்.
சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
- நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் 2025 நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதலமைச்சரானதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா-என்று உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள்.
நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக... வருக... என்று வரவேற்கிறேன்.
இங்கு கூடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக தாய் மண்ணில் இருந்து சென்று இருப்பார்கள். இந்தப் பூமிப்பந்தின் வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். அவர்களால்தான், பாலைகள் சோலைகள் ஆனது! கட்டாந்தரைகள் தார்ச்சாலைகள் ஆனது! அலை கடல்களில் துறைமுகங்கள் உருவானது! தேயிலைத் தோட்டங்கள்-ரப்பர் தோட்டங்கள்-கரும்புப் பயிர்கள் செழித்து வளர்ந்தன; அந்த நாடுகளும் வளம் பெற்றது.
நான் இதைச் சொல்லும் போது, நீங்கள் கடந்து வந்த பாதை, பட்ட துன்பங்கள் அடைந்த உயரங்கள் என்று உங்களின் நினைவுகள் நிச்சயம் உங்கள் குடும்ப வரலாற்றை எண்ணிப் பார்க்கும். அப்படிப்பட்ட தமிழ்த்தியாகிகளின் வாரிசு களான உங்களை உறவாக அரவணைத்துக் கொள்ள தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாடும் உங்களை மறக்கவில்லை! இதுதான் தமிழினத்தின் பாசம்! அதனால்தான், அயலக மண் ணில் குடியேறினாலும், உங்கள் முன்னோர்களும்-நீங்களும் தமிழை வளர்க்கிறீர்கள்!
இப்படி அயலக மண்ணிலும் தமிழுக்காகப் பாடுபட்ட சான்றோர்களின் வழித் தோன்றல்கள் மற்றும் அண்மைக்காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா வளமாக வாழ அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு அயலகத் தமிழர் நாளைக் கொண்டாடுகிறோம்.
எந்த தூரமும் நம்மை தமிழில் இருந்து தூரப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அயலகங்களில் தமிழ் வளர்க்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், தமிழ்ப் பரப்புரைக் கழகம், தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச்சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம், இலவச சட்ட மையங்கள், அயலக தமிழர்களின் குழந்தைகள் நமது தாய்மொழியை கற்க, தமிழ் இணையக் கல்விக் கழகம் வழியாக, தமிழ்ச் சங்கங்களோடு இணைந்து தமிழ் கற்றுக் கொடுக்கிறோம்.
இதில் தன்னார்வலர்களாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்குகிறோம். புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு விருது, தங்களின் நாட்டில், சமூக நலனுக்கும், தாயக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் தமிழர்களுக்கு விருதுகள், போர் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தாயகத்துக்கு அழைத்துவரும் சிறப்பு விமானங்களுக்கு உதவி, அயலகங்களில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவி செய்கிறோம். இது மூலமாக, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்!
இப்போது, இந்த மேடையில், ஆறு முக்கிய துறைகளில் முத்திரை பதித்த சாதனைத் தமிழர்களுக்கு நான் விருதுகளை வழங்கியிருக்கிறேன். அதற்கு மணிமகுடமாக, அயலகத் தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, "தமிழ்மாமணி" விருதும் பட்டயமும் வழங்கியிருக்கிறோம். அயல்நாட்டுத் தமிழர்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உறவுப்பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு, "சிறந்த பண்பாட்டுத் தூதுவர்" என்ற விருதையும் இந்த ஆண்டு முதல் வழங்கியுள்ளோம்! இந்த விருதுகளை எல்லாம், இந்தாண்டு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
அயல்நாடுகளில் மட்டுமல்ல; வெளி மாநிலங்களில் தமிழர்கள் தவித்தாலும், இந்த அரசு விரைந்து செயலாற்றி, தேவையான உதவிகளை செய்து வருகிறது.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
என்னுடைய ஸ்டைல் சொல் அல்ல செயல்'! அப்படித்தான், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைகளை நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்திருக்கிறோம்.
இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன்.
பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுபுறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது. உங்களின் கோரிக்கைகளை தீர்ப்பது என் கடமை!
நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.
உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் எல்லாம், பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள்! உங்கள் வேர்களை மறக்காதீர்கள்! மொழியை மறக்காதீர்கள்! இந்த மண்ணையும் மக்களையும் மறக்காதீர்கள்! உங்கள் உறவுகளை மறக்காதீர்கள்! தாய்த்தமிழ் உறவுகளாக உங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் இந்த விழா!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திணிக்கிறது.
பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* சீமான் பேச்சு இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.
* ஆரியம், இந்துத்துவா, இந்தி, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் நோக்கம்.
* தமிழீழத்தையும் பிரபாகரனையும் தமிழ்மொழியையும் இந்துத்துவாவினர் ஏற்றுக்கொள்கிறார்களா?
* பெரியாரியவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்பதை இந்துத்துவாவாதிகள் எதிர்க்கிறார்கள்.
* பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
* ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திணிக்கிறது.
* நாம் தமிழர் கட்சி தொடங்கியதும் அரவணைத்தவர்கள் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிஸ்டுகள் தான்.
* திராவிடம், பெரியாரை ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டு காலத்திற்கேற்ப சீமான் செயல்பட வேண்டும்.
* பகைவர் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு சீமான் கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
- பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
- இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
* தை மகளை வரவேற்போம்; தாய் தமிழைப் போற்றிடுவோம்.
* உழைப்புக்கு மரியாதை செலுத்தி, உழவுக்கு துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாதான் பொங்கல்.
* பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
* சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை ஜன.13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சீரும் சிறப்புமாக அவரவர் ஊர்களில் நடத்த வேண்டும்.
* கலை, இலக்கியம், விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து மகிழ்ந்திட வேண்டும்.
* இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.
* அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
- த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தே.மு.தி.க.வில் இருந்தபோது இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.
கடந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி இந்த தேர்தலும் நேர்மையாக நடக்காது என்பதால் புறக்கணிக்கும் முடிவை எடுத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது.
எனவே தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பா.ஜ.க.வும் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட யுவராஜ் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வெ.ரா. பெற்ற வாக்குகள் 67,300, த.மா.கா. வேட்பாளர் பெற்ற வாக்குகள் 58,396.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு கணிசமான செல்வாக்கு உண்டு. எனவே அ.தி.மு.க. போட்டியிடாவிட்டாலும் முன்புபோல் அ.தி.மு.க. ஆதரவுடன் த.மா.கா.வை போட்டியிட செய்து அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கலாம் என்ற யோசனையை பா.ஜ.க. முன் வைத்தது. இது தொடர்பாக ரகசிய பேச்சுக்களும் நடந்தன. ஆனால் எந்த கட்சியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் சென்னையில் முகாமிட்டுள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றார்கள்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. இன்று புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் ஆலோசித்தார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் கட்சி அலுவலகத்தில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில துணைத் தலைவர் விடியல் சேகர், யுவராஜா, ஈரோடு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், புறநகர் மாவட்ட தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ஈசுவரமூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
த.மா.கா., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் இன்று தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. களம் இறங்குமா? அல்லது த.மா.கா. போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி கட்சிகளுடன் பேசி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.
- கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டு சமத்துவப் பொங்கலிடுகிறார்.
- 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், ஆலந்தூர் தொகுதியில் அடங்கிய, ஆலந்தூர் வடக்கு பகுதி, நந்தம்பாக்கம் பர்மா காலனியில் சமத்துவ பொங்கல் விழா நாளை 13-ந் தேதி மாலை 5 மணியளவில் மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.
அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பகுதி செயலாளர் குணாளன் வரவேற்றுப் பேசுகிறார்.
விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டு சமத்துவப் பொங்கலிடுகிறார்.
இவ்விழாவில் 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதில் தி.மு.க. பொருளா ளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் வீ.தமிழ்மணி, இதயவர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், குன்றத் தூர் ஒன்றிய செயலாளர், படப்பைமனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ்.
பகுதி செயலாளர்கள்-என்.சந்திரன், பம்மல் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணா துரை, த.ஜெயக் குமார், மூவரசம்பட்டு சதீஷ், மு.ரஞ்சன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
- கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ள மெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாகத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனப் பல்வேறு பெயர்களில் இது குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. அதி லும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77 ஆயிரத்து 683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.1.2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட நவீன அரங்காக அமைந்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடலில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும், சென்னையில் 18 இடங்களில் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன.
இவ்விழாவில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாரா ஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தரகாண்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கலைப் பொதுமக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிடும் வகையில், கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை:
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் அன்றும் அதற்கு மறுநாளும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும் நாளையும் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். வருகிற 13, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு அறுவடை பணிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
- தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வரும் 17-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
- திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
- பொதுமக்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய கடைசி கட்ட போரை மையமாக கொண்டு ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் "போர்க் களத்தில் ஒரு பூ" என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு உருவான இந்த படத்திற்கு மத்திய சினிமா தணிக்கை குழு தடை விதித்து உத்தர விட்டது.
இந்த சினிமாவில் பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்ப தாகவும், அதன் காரணமாக திரைப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு உள்ள தாகவும் விளக்கம் அளித்தி ருந்தது. இருந்தபோதிலும் இந்த படத்தை திரையிடுவ தற்கான முயற்சிகளை தயாரிப்பாளர் கணேசன் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
பல்வேறு தடைகளை தாண்டி போர்க்களத்தில் ஒரு பூ படத்தை 2025-ல் வெளியிடலாம் என்று கூறி மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து ராஜபாளையம் பாலாஜி திரையரங்கில் இன்று அந்த படம் வெளியாக இருந்தது. இதையொட்டி படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ம.தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பினருக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மீண்டும் அந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் தமிழக அரசுக்கு இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் படம் வெளியாக இருந்த ராஜபாளையம் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வி, அசோக்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் படம் வெளியாக இருந்த திரையரங்கம் முன்பு குவிக்கப்பட்டனர்.
தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக படம் திரையிடுவதை தவிர்த்தனர். இருந்த போதிலும் திரையரங்கம் முன்பு திரண்டிருந்தவர்கள் படத்தை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய அரசின் தடை உத்தரவு குறித்து எடுத்துக்கூறி அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் இன்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






