என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்ட பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி டெல்லி சென்று வந்தனர்.
    • இந்த விவகாரம் புதுவை சட்டமன்றத்தில் இன்று பேசப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்ட பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி டெல்லி சென்று வந்தனர்.

    அவர்கள் சட்டமன்றத்தில் பெருமளவில் பிரச்சினை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. சட்டமன்றம் நடைபெறும் நேரத்தில் பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.

    இவர்களில் பிரதானமாக செயல்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் வெளிநாடு செல்லவில்லை.

    இந்த விவகாரம் புதுவை சட்டமன்றத்தில் இன்று பேசப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.செந்தில்குமார், அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு கல்யாண சுந்தரம் தங்கி விட்டார். அவர்கள் சொந்தகாசில் சூனியம் வைத்துள்ளனர் என்றார்.

    அப்போது கல்யாண சுந்தரம், எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை, அதனால் செல்லவில்லை. சட்டமன்றத்துக்கு உள்ளே வரும்போது முதலமைச்சர் என்னைப் பார்த்து ஏன்பா நீ வெளிநாடு போகலையா? என்று கேட்டார். அவர் எதற்காக கேட்டார் என எனக்கு புரிய வில்லை என்றார்.

    இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், அவர் நடிகர் சத்யராஜ் மாதிரி, அவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியாது என குறிப்பிட சபையில் சிரிப்பலை எழுந்தது.

    • கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
    • 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டம்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

    அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

    தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

    புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

    இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ண குமார் புதிய கவர்னராக நிமியக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர திகாரிகள் கலந்து கொண்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது.

    இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதற்காக, 7-ந் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.
    • புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார்.

    அதன்படி, குஜராத்தில் 2013 முதல் 2014 வரை அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாஷ்நாதன் புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.

    இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநராக ஓய்வு கைலாசநாதன் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி ராஜ்நிவாஸில் பதவி ஏற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி.
    • மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கூட்டணியின் தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளால்தான் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவே முதலமைச்சருக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் பா.ஜனதா அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி மெக்வால், அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தும் புகார் கூறினர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பா.ஜனதா மேலிட பார்வையாளர் சுரானா முயற்சியும் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    புதுவை சட்டசபைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஓரணியாக வந்தனர். முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சட்டசபை வளாகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று நல்லாட்சி அளித்து வருகிறார். அவர் தலைமையில் நடந்த நிதி ஆய்வுக்குழு கூட்டத்தில் புதுவை முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. புதுவையில் பா.ஜனதா மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்வது வருத்தம் அளிக்கிறது.

    ஆந்திரா, பீகாருக்கு பல கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக ஒரு வாரம் டெல்லியில் முகாமிட்டு, ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து மாநில வளர்ச்சிக்காக நிதி ஒதுக்க கோரினர். அந்த அடிப்படையில்தான் மத்திய அரசு நிதியை வாரி வழங்கியுள்ளது.

    புதுவை முதலமைச்சரும் மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும் என நினைத்திருந்தால், மத்திய அரசின் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு நமக்கு தேவையான நிதியை பெற்றிருக்க முடியும்.

    ஒவ்வொரு மத்திய அமைச்சர்களையும் துறை வாரியாக சந்தித்து ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் ரூ.50 கோடி என பெற்றிருந்தால்கூட புதுவை மாநில பட்ஜெட் தொகையை விட கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைத்திருக்கும்.

    பிரதமர் பதவியேற்பு, நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளை புறக்கணிப்பது, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற பொய்யான கூற்றை மக்களிடையே உருவாக்குவதன் மூலம் புதுவையில் பா.ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்.

    புதுவையில் அளவுக்கு அதிகமான ரெஸ்டோபார்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி வழங்குகிறார். மருத்துவமனை, அரசு பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் ரெஸ்டோபார் அமைக்க அனுமதி வழங்கியதுதான் முதல்- அமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டு செய்த சாதனை.

    முதல்- அமைச்சர் மத்திய அரசை நேரடியாக சந்தித்து, மாநில வளர்ச்சிக்கான முழு நிதியையும் பெற்று புதுவையை ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது.
    • மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் மூகத்துவாரத்தில் உள்ளது.

    ஆந்திர பகுதியில் தொடர் கன மழை பெய்தால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும்.

    இருப்பினும் ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி உத்தரவின்பேரில் அனைத்து துறையினரும் பாதுகாப்பு, முன்னெச் சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜீவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர். கனமழை நீடித்தால் ஏனாமில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.

    கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட வில்லை.

    அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறை களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. போதிய அளவிலான மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உணவு வழங்க குடிமைபொருள் வழங்கு துறையும் வருவாய் துறையும் தயார் நிலையில் உள்ளன.

    மழைக்கால நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார துறையும், மரங்கள் விழுந்தாலும் மழையில் சிக்கினாலும் அவர்களை மீட்க தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளதாக மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார். 

    • 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை இருந்தார்.
    • விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.

    தொடர்ந்து தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 3 ஆண்டாக புதுச்சேரி பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஜார்க்கண்ட், தெலுங்கானா கவர்னரான சி.பி.ராதா கிருஷ்ணன், புதுச்சேரிக்கும் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு முதல் புதுச்சேரிக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு கவர்னர்கள் தான் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதேபோல கேரளா கவர்னர் ஆரீப்முகமதுகான் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    இதோடு புதுச்சேரிக்கும் தனியாக நிரந்தர கவர்னரை நியமிக்கலாமா? எனவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏனெனில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக பொறுப்பு கவர்னர்கள்தான் புதுச்சேரியை நிர்வகித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு விரைவில் புதுவைக்கு தனியாக நிரந்தர கவர்னர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • தவெக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
    • நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    புதுச்சேரி:

    தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு இன்று பிறந்தநாளாகும்.

    தனது பிறந்தநாளை புஸ்சி ஆனந்து இன்று புதுவை சின்ன மணிக் கூண்டு அருகில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார். அவருக்கு செல்போன் மூலம் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுவையை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அவர் பிறந்தநாளை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜய் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் அவர்கள் வந்தனர்.

    புதுவை ரெயில் நிலையம் அருகிலிருந்து தமிழகத்தின் மாவட்டம் வாரியாக பேண்டு வாத்தியம், மேள தாளங்கள் முழங்க ஊர்வலாக புஸ்சி ஆனந்து வீட்டுக்கு அவர்கள் வந்தனர்.

    அங்கு அவருக்கு ஆளுயர மாலை, பூங்கொத்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சில மாவட்டங்களில் இருந்து கேக் அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரி வித்தனர்.

    கேக்கை அவர் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி னார். தொடர்ந்து பல பகுதிகளில் இருந்தும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் வருகையால் நகர பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி புஸ்சி ஆனந்து, சின்னசுப்பராய் வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    • ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.
    • மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்திருந்தார்.

    அதன்படி காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாஸ்ரீ ஒருநாள் கலெக்டராக பணியாற்ற முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாணவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.

    இன்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து ஒரு நாள் கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது.

    மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 14-ந் தேதியான நேற்று புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் தேசிய தின விழா நடந்தது.

    விழாவுக்கு பிரெஞ்சு துணை தூதர் லிசே போட் பரே தலைமை தாங்கி பிரெஞ்சு தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
    • நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்மை காலங்களில் கேரளாவில் 4 பேர் மூளைக்காய்ச்சல் நோயினால் இறந்து இருக்கிறார்கள். இந்த மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நோயில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் மாசுபட்ட அழுக்கு நீரீல் குளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரமாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.

    பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளின் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி

    பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் கடந்த 30-ந் தேதி நடந்தது.

    தேர்தலில் பிரான்சு நாட்டுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தாங்கள் குடியிருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.

    தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் உள்ள 4 ஆயிரத்து 535 பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் வாக்களிக்க தகுதியுடையோர் ஆவர். இதற்காக புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்களான 4535 பேரில் 892 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் 12 வாக்குகள் செல்லாதவை. 3 வாக்குச் சீட்டில் வாக்கே செலுத்தப்படவில்லை.

    சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஜோட் பிராங்க் அதிகளவாக 542 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் 12 விழுக்காடு வாக்குபெற்று முதல் 2 இடங்களை பிடித்த 2 பேர் இடையே 2-ம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடக்கிறது.

    ×