என் மலர்
டெல்லி
- அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு.
- விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகும் புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு நல்ல செய்தி!
நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு ஜனாதிபதி டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் இது 'மேக் இன் இந்தியா'வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த கட்டமைப்பு நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும்.
இந்த கட்டமைப்பு நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட, நமது மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கு பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
- பயங்கரவாதத்தின் கொடூரமான முகத்தை இது காட்டுவதாகவும் இந்தியா கருத்து.
பாகிஸ்தான் - இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை புறக்கணித்தும் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், இத்தாக்குதலுக்கு இந்தியா மீது பழிபோடுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பதிலடி கெடுத்துள்ளது.
மேலும், தாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்குத் இரங்கல் தெரிவிப்பதாகவும், பயங்கரவாதத்தின் கொடூரமான முகத்தை இது காட்டுவதாகவும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
- டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.
- இதேபோல், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகள் நடக்கவுள்ளன.
மும்பை:
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
வரும் 20-ம் தேதி வரை லீக் சுற்று போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 8 சுற்று பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 4-ம்தேதி முதல் அரையிறுதி, 5-ம் தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும். இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8-ம் தேதி நடத்தப்படும்.
லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.
முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்தும், மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்தும், இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 411 ரன்கள் குவித்தது.
- சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்தார்.
புதுடெல்லி:
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில், U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், U 19 உலகக் கோப்பையை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். இந்தத் தொடர் முழுவதும் நமது வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிப்படுத்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.
புதுடெல்லி:
10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.
இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் ஜனக்புரி பகுதியில், சாலையில் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் யுவராஜ் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்றுகொண்டிருந்தார்.
அந்தப் பகுதியில் டெல்லி பொதுப்பணித் துறையின் தண்ணீர் சப்ளை அமைப்பான ஜல் போர்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.
இதற்காகத் தோண்டப்பட்ட பெரிய பள்ளம் முறையான எச்சரிக்கை பலகைகள் இன்றி மூடப்படாமல் இருந்துள்ளது.
இரவு நேரத்தில் இருட்டில் இந்தப் பள்ளத்தைக் கவனிக்காத யுவராஜ் சிங், தனது பைக்கோடு பள்ளத்தில் விழுந்தார்.
பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கட்டுமானப் பணியின் போது பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அல்லது எச்சரிக்கை விளக்குகள் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே ஜல் போர்டை சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகிய 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நொய்டாவில் சாலையில் உள்ள பள்ளத்தில் பொறியாளர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
- இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மட்டும் 807 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பணத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டவை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பண ஆதாயத்திற்காக இது போன்ற தகவல்களை பரப்பி, பீதியை ஏற்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சில தடயங்களைப் பின்தொடர்ந்து விசாரணை நடத்தியதில், டெல்லியில் சிறுமிகள் மாயமாவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பணம் செலுத்திய விளம்பரங்கள் (Paid promotions) மூலம் திட்டமிட்டு பரப்பப்படுவதைக் கண்டறிந்துள்ளோம். பண ஆதாயத்திற்காக இது போன்ற பீதியை உருவாக்குவது சகித்துக்கொள்ளப்படாது; அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளின் மாதாந்திர சராசரியை விடக் குறைவான எண்ணிக்கையாகும். ஒப்பிட்டு அளவில், டெல்லியில் 2024-ல் 24,893 பேரும், 2025-ல் 24,508 பேரும் காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது நகரின் சராசரி மாதாந்திர எண்ணிக்கையான 2,000-ஐ விடக் குறைவு என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரியில் மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த செய்தி காட்டூத்தீயாக பரவியது. இதனைத்தொடர்ந்து காவல்துறையின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் தலைநகரில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய ஆன்லைன் ஆப் அடிப்படையிலான நடைமுறையை பின்பற்றப்படுவதாகவும், அதில் தற்காலிகமாக காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அதாவது பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பத் தாமதமாகும் போதோ அல்லது நபர்களைத் தொலைபேசி வாயிலாகத் தற்காலிகமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலிலோ, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குடிமக்கள் பெரும்பாலும் இது போன்ற புகார்களைப் பதிவு செய்கிறார்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.
மேலும் "இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தெரிவிப்பதில்லை என்பதால், அவை இன்னும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலேயே நீடிக்கின்றன, என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உலக நாடுகளோடு, அதாவது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்றவற்றோடு ஒப்பிடுகையில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை டெல்லியில் குறைவே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது.
- இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பாட்னா:
பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஜே.டி.யூ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜன சுராஜ் கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்-அமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பெண் பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பீகார் அரசாங்கத்தின் முடிவு நடத்தை விதிகளை மீறியது என்றும், வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில் ஒரு நலத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பீகாரில் புதிய தேர்தல்களை நடத்தக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜன சுராஜ் கட்சியின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. உங்கள் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் விளம்பரம் தேடுவதற்காக இந்த நீதித்துறை மேடையைப் பயன்படுத்துகிறீர்களா? என்றார்.
- எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளைக் காண்பித்தும் அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் கூறும் போது, அவை சுமூகமாக நடைபெற வேண்டும். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கமிடுவதற்காக அல்ல. தற்போதைய கூட்டத் தொடரில், இடையூறுகள் காரணமாக 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் ஆளும் கட்சி இருக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர், இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் மக்களவை கூடிய 4 நிமிடங்களுக்குள் அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மக்களவை 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அவை மீண்டும் வருகிற 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
- கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும்.
- பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள்.
புதுடெல்லியில் நடைபெற்ற 'பரிக்ஷா பே சர்ச்சா 2026' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் டேட்டா மலிவானது என்பதற்காக இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் வாழ்க்கை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். ஏனெனில் அரை மனதுடன் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றாது.
நமது இலக்கு அடையக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. முதலில் மனதை அடக்குங்கள். பின்னர் மனதை இணைக்கவும். பின்னர் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இதை செய்தால், எப்போதும் வெற்றியாளராக இருப்பதை காண்பீர்கள்.
உங்களுக்கு கேமிங்கில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் டேட்டா மலிவானது என்பதால் நேரத்தை கடத்துவதற்காக அதில் ஈடுபடாதீர்கள். பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள். நாட்டில் சூதாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டத்தை இயற்றி உள்ளேன்.
இருப்பினும், விளையாட்டு என்பது ஒரு திறமையாக இருக்கலாம். ஏனெனில் அதற்கு வேகமும் விழிப்புணர்வும் தேவை. மேலும் அதை சுய வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
- வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதமாகும். 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டு வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை.
- மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் அகமது மிர், வரும் தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் உடன் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






