செய்திகள் (Tamil News)
ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் மாகாணம் பஞ்வஹி மாவட்டம் டலொகன் பகுதியில் சோதனைச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த ஒரு போலீஸ் சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாகவும், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பஞ்வஹி மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தூண்டுதலின் மூலம் பல போலீசார் தங்களுடன் பணி புரியும் சக வீரர்கள் மீதே தாக்குதல்களை அரங்கேற்றும் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.