செய்திகள் (Tamil News)
கார் மோதியதில் ஸ்கூட்டர் நொறுங்கி கிடக்கும் காட்சி - விபத்தில் சேதமடைந்த கார்.

ஸ்கூட்டர் மீது கார் மோதல் - முருகன் கோவிலுக்கு சென்ற 2 பேர் பலி

Published On 2020-01-06 05:10 GMT   |   Update On 2020-01-06 05:10 GMT
மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் முருகன் கோவிலுக்கு சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மயிலம்:

விழுப்புரம் அருகே உள்ள சென்னகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). விழுப்புரத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (39). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

இவர்கள் 2 பேரும் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முடிவு செய்தனர். அதன்படி சீனிவாசனும், மகேந்திரனும் ஸ்கூட்டரில் மயிலம் முருகன்கோவில் நோக்கி வந்தனர்.

மயிலம் அருகே செண்டூரில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரிவில் திரும்பினர். அப்போது சென்னையில் இருந்து திருச்சிநோக்கி வேகமாக வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டர் நொறுங்கியது.

இந்த விபத்தில் மகேந்திரன், சீனிவாசன் சம்பவ இடத்தில் பலியானார்கள். மோதிய வேகத்தில் காரும் சேதமடைந்தது. இந்த காரும், ஸ்கூட்டரும் நடுரோட்டில் கிடந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மயிலம் போலீசார், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 2 பேரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.
Tags:    

Similar News