கேரளாவில் மகனை கொன்று கணவன், மனைவி தற்கொலை
கொழிஞ்சாம்பாறை:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்(வயது 38) இவருடைய மனைவி கிருஷ்ணேந்து (21). இவர்களது மகன் ஆதவ கிருஷ்ணன் (4). சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் அங்கு சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுனிலின் வீடு வெகுநேரமாக பூட்டியே கிடந்தது. இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அங்கு சென்று கதவை தட்ட முயன்றபோது கதவு தானாக திறந்து கொண்டது.
உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். வீட்டிற்குள் உள்ள அறையில் சிறுவன் ஆதவ கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தான். அதற்கு அடுத்த அறையில் சுனில், கிருஷ்ணேந்து பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து சுனிலின் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து பரவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரகளது உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முதலில் மகனை கொலை செய்து விட்டு பின்னர் அவர்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனை கொன்று விட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.