செய்திகள் (Tamil News)
தேர்தல் முடிவுகள் வரும் முன்பே அலங்கரிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி அலுவலகம்
டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்த தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தை பலூன்களாலும், கட்அவுட்டுகளாலும் அலங்கரித்து வைத்து வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையேதான் போட்டி என தொண்டர் ஒருவர் பதாகையை ஏந்தியிருந்தார்.