செய்திகள்

காங்கிரஸ் என்றால் ஊழல்- தண்டி யாத்திரை நினைவு நாள் பதிவில் கடுமையாக சாடிய மோடி

Published On 2019-03-12 07:49 GMT   |   Update On 2019-03-12 07:49 GMT
தண்டி யாத்திரை நினைவு தினமான இன்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். #PMModi #DhandiMarchAnniversary #Congresscorruption
புதுடெல்லி:

பிரிட்டிஷ் ஆட்சியினை எதிர்த்து கடந்த 1930ம் ஆண்டு, மகாத்மா காந்தி அவரது ஆதரவாளர்களோடு மார்ச் 12 ம் தேதி துவங்கி ஏப்ரல் 6 வரையிலான அமைதியான யாத்திரையை மேற்கொண்டார். இது தண்டி யாத்திரை மற்றும் உப்பு சத்தியாகிரகம் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தண்டி யாத்திரை துவங்கிய தினத்தையொட்டி, பிரதமர் மோடி காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:   

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உண்மையான வழிநடத்தலை மனதில் கொண்டு அவர் பின்பற்றிய வழியில் பணிகளை மேற்கொள்கிறோம். காந்தி,  ஏழை மக்களின் அவல நிலை குறித்து சிந்திக்கவும், அந்நிலையினை மாற்ற அயராது பாடுபடவும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். மக்களின் வறுமையை ஒழித்து செழிப்பினை கொண்டு வருவதற்கான அரசுப் பணிகள் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாட்டின் நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும்  தண்டி யாத்திரை மேற்கொண்ட காந்தி மற்றும் உடன் சென்ற அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மரியாதையை செலுத்துகிறேன்.  தண்டி யாத்திரை குறித்த என் சில எண்ணங்களுடன், காந்தியின்  கொள்கைகளும், காங்கிரஸ் கலாச்சாரத்திற்கான அவமதிப்புகளையும் எனது இந்த வலைப்பக்கத்தில் பதிவிடுகிறேன்.



காந்தி அதிக அளவிலான செல்வம் சேர்ப்பதில் இருந்து வெளிவர வேண்டும் என கூறும்போது, காங்கிரஸில் இருந்த அனைவரும் தங்கள் வங்கிக்கணக்கில் பணம் சேர்த்தனர். மேலும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்தனர். காந்தி அவர்கள் 1947ம் ஆண்டு, நாட்டை எந்த கட்சியினர் ஆண்டாலும், இந்தியாவின் கண்ணியம்  பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் அரசு தவறான ஊழல் வழிக்கு நாட்டை கொண்டு சென்றது.

இது போன்ற ஊழலை கண்டறிந்து,  பாஜக தலைமையிலான அரசு தண்டித்து வருகின்றது. இதன்மூலம் காங்கிரஸ் என்றாலும் ஊழல் என்றாலும் ஒன்று என்பது தெரிய வந்திருக்கும். பாதுகாப்புத்துறை, தகவல் தொலை தொடர்புத்துறை, விளையாட்டுத்துறை, விவசாயம்  என எந்த துறையினை எடுத்துக் கொண்டாலும் அதில் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் கட்டாயம் இருக்கும்.  ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை விடுத்து தங்கள் வங்கிக்கணக்குகளை நிரப்பவும், சொகுசு வாழ்விற்கும் செலவழித்தனர்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.  #PMModi #DhandiMarchAnniversary #Congresscorruption
Tags:    

Similar News