செய்திகள் (Tamil News)

நிதிஷ்குமாரை விட மகனுக்கு 4 மடங்கு சொத்து அதிகம்

Published On 2018-01-03 05:45 GMT   |   Update On 2018-01-03 06:21 GMT
ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியான நிதிஷ் குமாரின் சொத்துக்களை விட அவரது மகனின் சொத்துக்கள் நான்கு அடங்கு அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.
பாட்னா:

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்-மந்திரியான நிதிஷ் குமாரின் சொத்துக்களை விட அவரது மகனின் சொத்துக்கள் நான்கு அடங்கு அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் முதல்-மந்திரியாகவும் பா.ஜனதாவை சேர்ந்த சுசில் குமார் மோடி துணை முதல்- மந்திரியாகவும் உள்ளனர்.

பீகார் அரசு இணையதளத்தில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் அவரது மந்திரிகளின் சொத்துப் பட்டியல் விவரங்களை வெளியிடப்பட்டுள்ளன.

நிதிஷ்குமாருக்கு ரூ.56.23 லட்சம் மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.56.49 லட்சமாக இருந்தது. அதனுடன் இதை ஒப்பிட்டால் நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.26 ஆயிரம் குறைந்துள்ளது. அவருக்கு 9 பசுக்கள், 7 கன்றுகள் உள்ளன. ரூ.43,458-க்கு வாகன கடன் இருக்கிறது.

ஆனால் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்துக்கு அவரை விட 4 மடங்கு சொத்துக்கள் அதிகமாக உள்ளன. 2016-ம் ஆண்டு அவருக்கு ரூ.2.36 கோடி சொத்து இருந்தது. தற்போது அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.2.44 கோடியாக உயர்ந்துள்ளது. நிதிஷ் குமாரின் மனைவி 2007-ம் ஆண்டு இறந்து போனார்.

துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான சுசில் குமார் மோடிக்கு ரூ. 94.92 லட்சம் மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல்-மந்திரி நிதிஷ்குமாரை விட துணை முதல்-மந்திரிக்கே அதிக சொத்துக்கள் உள்ளன. இதேபோல சுசில்குமார் மோடியின் மனைவிக்கு ரூ. 1.35 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மந்திரியான லாலன்சிங் தனக்கு ரூ. 6.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 27 மந்திரிகளின் சொத்து பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News