ரூ.16 லட்சம் வாடகை செலுத்தாததால் கோவிலுக்கு சொந்தமான வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
- திண்டுக்கல்லில் இந்து சயம அறநிலையத்துறைக்கு சொந்தமான இட மீட்பு
- வாடகை பாக்கியால் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் :
திண்டுக்கல் கவடகார தெருவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவில் நிலத்தில் வாடகை செலுத்தாமல் இருந்த குடியிருப்பு வீடுகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வாடகை செலுத்தாமல் நிலுவையிலுள்ள நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் கவடக்கார தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் சுமார் 2,000 சதுர அடி பரப்பளவில் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர்.
இந்த வீடுகள் பல வருடங்களுக்கு முன்பு தாசப்ப நாயுடு, கோவிந்தராஜ், ராஜலட்சுமி, சுப்பையா ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து அதற்கான வாடகை தொகையை கோவில் நிர்வாகத்திற்கு செலுத்திவந்தனர்.
இந்த நிலையில் அந்த 4 பேரும்4 வீடுகளை மற்றவர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு விட்டனர். ஆனால் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொகை ஏறத்தாழ ரூ.16 லட்சம் வரை செலுத்தவில்லை.
இதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இன்று கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து இருந்த வீடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு பூட்டி சீல் வைத்தனர்.