உள்ளூர் செய்திகள்
காரமடை அருகே 6 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி
காரமடை அருகே 6 வயது சிறுமி திடீரென பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். டி.வி. மெக்கானிக். இவரது மகள் கவிஸ்ரீ (வயது 6).
இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் கவிஸ்ரீ கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்னபுதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தார். சம்பவத்தன்று சிறுமி வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அவரது பாட்டி உடனடியாக சிறுமியை மீட்டு காரமடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கவிஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.