வங்கியில் இருந்து பேசுவது போல முதியவரிடம் பேசி ரூ.80 ஆயிரம் மோசடி
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பீட்டர் (வயது80). இவரது செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. போனில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும், உங்கள் ஏ.டி.எம். கார்டு நம்பரை கூறுங்கள் என்று பேசி உள்ளார்.
பீட்டரும் தனது ஏ.டி.எம். கார்டு நம்பரை கூறி உள்ளார். மேலும் தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. நம்பரையும் கூறி உள்ளார். அதை பயன்படுத்தி அந்த நபர் பீட்டர் வங்கி கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரத்தை மோசடி செய்தார்.
அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு தான் தனது வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனில் பேசி ஏமாற்றி மோசடி செய்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.