செய்திகள் (Tamil News)
துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
உடனடியாக ஊதியம் மற்றும் கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா பணி ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் ஒப்பந்ததாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து இன்று காலை துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக ஊதியம் மற்றும் கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.