கேன் குடிநீர் தட்டுப்பாடு- சுத்திகரிப்பு எந்திரம் வாங்க அலைமோதும் பொதுமக்கள்
மதுரை:
தமிழகத்தில் அரசு அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு குடிநீர் ஆலைக்கு “சீல்” வைத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஒருசிலர் அதிக விலைக்கு குடிநீர் கேன்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால் மதுரையில் பொதுமக்கள் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை வீடுகளில் பொருத்தி வருகின்றனர். இதனால் ஆர்.ஓ. எந்திர வியாபார நிறுவனங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
குடிநீர் பைப்பில் வரும் தண்ணீரை மினரல் வாட்டராக ஆர்.ஓ. எந்திரம் மாற்றும். அதுவும் தவிர குடிநீர் கேன்களில் தயாரிப்பு தேதி உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுவது இல்லை. எனவே மதுரையில் பலர் ஆர்.ஓ. எந்திரங்களை வாங்குவதற்காக வணிக நிறுவனங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.