ராஜபாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
ராஜபாளையம்:
ராஜபாளையம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணு (வயது 22). இவர், கொல்கத்தாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்த்து வருகிறார். உறவினர் திருமணத்திற்காக கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விஷ்ணு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு விஷ்ணு தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விஷ்ணுவின் மாமா கணேசன் ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் கவுதம் விஜய் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஷ்ணுவின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிணற்றில் குதித்தும், அதன்பிறகு தந்தை முரளிதரன் விஷம் குடித்தும் தற்கொலை செய்துள்ளனர். விஷ்ணுவின் சகோதரர் விவேக் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஷ்ணுவும் நேற்று தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.